என் மலர்tooltip icon

    சென்னை

    • புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
    • 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியை மேம்படுத்த உத்தரவு.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    மாமன்னன் ராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடம் 23.07.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம், பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி ராஜேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். ராஜேந்திர சோழ மன்னர் ஆட்சிகாலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது.

    கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) ராஜேந்திர சோழன் உருவாக்கினார் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்.

    மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூர்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    இதன்மூலம் பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
    • உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது நீதிமன்றம்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுக-வின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.

    அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக-வினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணி திரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால் , நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.

    நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுக-விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜக-வின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்" என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!

    திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றாக கீழ்காணும் நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதிய வழிமுறைகள்:

    மக்களுடன் ஸ்டாலின் App யை அனைவரும் Update செய்து கொள்ளுங்கள்.

    1) OTP கேட்கும் முறை தற்போது இல்லை.

    2) அலைபேசி எண் கட்டாயம்.

    3) தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.

    ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.

    அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கிட வேண்டும் என்பதால் பெறப்படும் அலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.

    அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.

    எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026-லும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.

    இவ்வாறு ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்த நாளான 25ஆம் தேதி பயணத்தை தொடங்குகிறார்.
    • நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் பயணம் நிறைவடையவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு

    1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice),

    2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence)

    3. வேலைக்கான உரிமை (Right to Employment)

    4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food)

    5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development)

    6. நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Good Governance and Public Services),

    7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education)

    8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm)

    9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development)

    10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment)

    ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பனதான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.

    பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

    இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:-

    ஜூலை 25 -திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)

    ஜூலை 26 செங்கல்பட்டு, உத்திரமேரூர்

    ஜூலை 27 காஞ்சிபுரம், திருப்பெரும்பதூர் (காலை: வையாவூர் நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல்

    நெசவாளர்களுடன் சந்திப்பு)

    ஜூலை 28 அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தூர்)

    ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)

    ஆகஸ்ட் 1-திருவள்ளூர், திருத்தணி

    ஆகஸ்ட் 2 சோளிங்கர், ராணிப்பேட்டை

    ஆகஸ்ட் 3 ஆர்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்)

    ஆகஸ்ட் 4 வாணியம்பாடி, திருப்பத்தூர்

    அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதனால் புதிய பாஸ்போர்ட்டை வழங்கக்கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தபோது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

    அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புது பாஸ்போர்ட் வழங்கக்கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    24 மற்றும் 25-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    27 மற்றும் 28-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது.
    • பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.

    பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.

    பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

    ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    #TNPSCAspirants குரலாக அ.தி.மு.க. என்றும் ஒலிக்கும்! என்று கூறியுள்ளார். 

    • அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
    • நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணிக்கு திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். அவரை அரசு அதிகாரிகளும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் 3 நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

    மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22-ந்தேதி) அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    கடந்த 15-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.

    நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

    மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை.
    • கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தெரிவித்திருந்தார்.

    நேற்று த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்" என துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

    234 தொகுதிகளிலும் திமுகவுக்கு Bye, Bye மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு Bye, Bye ஹேஷ்டேக்கை முன்னெடுத்து வருகிறாரே? என்ற கேள்விக்கு "அந்த அளவிற்கு வந்துவிட்டாரா?" என்றார்.

    எடப்பாடி பழனிசாமி அழைப்பை நாம் தமிழர் கட்சி சீமான நிராகரித்துள்ளார்.

    • ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

    இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    • பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன?
    • எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

    சென்னை:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழகங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள், 2012-ன் படி அமைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அமைக்கப்பட்டுஉள்ள பிரிவுகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? அவை இன்னும் முழுமையாக அமைக்கபடாததற்கான காரணங்கள் என்ன?

    கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

    கடந்த 5 ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக, பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும்.

    பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன?

    சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன? என்று வலியுறுத்தி பேசினார்.

    தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன? ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐ.டி.ஐ.களின் விவரங்கள் என்ன? பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளான துயர் மிகுந்த சம்பவத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு?

    இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?

    இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா?

    இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு திரும்பினார்.
    • முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நேற்று முழுவதும் அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது சகோதரர் மு.க.அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். முதலமைச்சரை சந்தித்த மு.க.அழகிரி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.




    • 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
    • தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல கட்சிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அத்தகைய ஒருமித்த கருத்துடன் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும். இது தொடர்பாக இதுவரை நாங்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை.

    தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய், சீமான் வர வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. எனவே உரிய நேரத்தில் சரியான கூட்டணி ஏற்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்பதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 2 மாதத்திற்குள்ளாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எங்கள் கொள்கை என்பது தனித்து அரசியல்தான். ஏற்கனவே அதிமுக, திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. எனவே நாங்கள் தனித்து அரசியல் நோக்கி தான் முன்னெடுப்போம். எத்தனை காலம் ஆனாலும் எங்களின் தனித்து அரசியல் என்பது மாறாது என்று தெரிவித்துள்ளார். 

    ×