என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.

    அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஏப்ரல் 15 ஆம் தேதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் தனது குடும்பத்தினரும் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    அந்த ரீல்ஸ் வீடியோவில், "அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவது" பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அப்பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

    • இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படவேண்டும் என்று மகாராஷ்டிராவில் கலவரம் வெடித்தது.
    • அவுரங்கசீப்பூர் என்ற இடத்தின் பெயர் சிவாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    இந்த 11 இடங்களுக்கு இந்து தெய்வங்கள், சின்னங்கள், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

    அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படவேண்டும் என்று மகாராஷ்டிராவில் கலவரம் வெடித்த நிலையில், ஹரித்வாரில் உள்ள அவுரங்கசீப்பூர் என்ற இடத்தின் பெயரை சிவாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது.

    உத்தர்காண்டில் மாற்றப்பட்டுள்ள இடங்களின் பெயர்கள்

    1. அவுரங்கசீப்பூர் - சிவாஜி நகர்

    2. கஜிவாலி - ஆர்யா நகர்

    3. சந்த்பூர் - ஜோதிபா புலே நகர்

    4. முகமதுபூர் ஜாட் - மோகன்பூர் ஜாட்

    5. கான்பூர் - ஸ்ரீ கிருஷ்ணாபூர்

    6. கான்பூர் குர்சாலி - அம்பேத்கர் நகர்

    7. இத்ரிஷ்பூர் - நந்த்பூர்

    8. அக்பர்பூர் ஃபஜல்பூர் - விஜய்நகர்

    9. அப்துல்லாபூர் - தக்ஷ்நகர்

    10. பஞ்சக்கி-ஐடிஐ மார்க் - குரு கோல்வால்கர் மார்க்

    11. சுல்தான்பூர் பட்டி - கௌசல்யாபுரி

    • மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
    • கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

    மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

    கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
    • எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.

    கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.

    தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.

    எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.  

    • பிரதமர் மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
    • உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிதிந்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

    பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலில் ஜீப் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்து கொண்டார்.

    உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தோ-திபெத் எல்லையில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
    • தற்போது வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உத்தரகாண்டில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 49 பேர் உயிருடன் மீட்கப்பட் நிலையில் 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமம் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய-திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த மலை கிராமத்தில் எப்போதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் அங்குள்ள சாலைகளில் பனித்துனிகள் குவிவது வழக்கம்.

    திபெத் எல்லையை நோக்கி ராணுவம் நகர்வதற்கான முக்கிய பாதை என்பதால் சாலைகளில் குவியும் பனியை அகற்றுவதற்காக எல்லை சாலைகள் அமைப்பை (பிஆர்ஓ) சேர்ந்த தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே முகாம்களை அமைத்து தங்கி, பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. இதில் முகாமில் இருந்த 57 தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

    இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    இதற்கிடையில் முதலில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறையில் சிறிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.

    இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக பனிச்சரிவில் சிக்கிய 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மனா கிராமத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    இதனிடையே பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஏற்கனவே கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் மழையும் பெய்ய தொடங்கியது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மீட்பு குழுக்கள் மெதுவாக அதேவேளையில் பாதுகாப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடும் சவால்களுக்கு மத்தியில் மாலை நேரத்தில் மேலும் 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களும் உடனடியாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிய நிலையில் நேற்று இரவு வரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று 17 பேர் மீட்க்கப்பட்டனர். மதியம் வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று மீட்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    5 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநில முதல்வர் பூஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு சென்று பனிச்சரிவு நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் மீட்புப்பணி குறித்து கேட்டறிந்தார்.

    பிரதமர் மோடி, தாமியை டெலிபோனில் தொடர்பு கொண்டு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார்.

    • சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது பனிச்சரிவு.
    • 10 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 47 பேர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மணா அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணா கிராமம் இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது.

    பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பனிப்பாறைகள் சரிந்து அவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    இந்திய வானிலை மையம் உத்தரகாண்ட் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • ரூ.13.86 கோடியை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.

    உத்தரக்காண்டில் காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஐபோன்கள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் வாங்குவதற்காகவும், கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும் பயன்படுத்தியது உட்பட பல நிதி முறைகேடுகள் CAG அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையில், தொழிலாளர் நல வாரியம் 2017 முதல் 2021 வரை அரசாங்கத்தின் அனுமதியின்றி ரூ.607 கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வன நிலத்தை மாற்றுவதற்கான விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    வனப்பகுதிகள் வளர்ப்புக்கான இழப்பீடு, மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் (CAMPA) தரவுகளின்படி, 2019-22 வரை காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.13.86 கோடியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலமாக, 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சார்ந்து அல்லாத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவாகியுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

    காடுகளில் நடப்படும் மரங்களில் 60-65% மரங்கள் வளரவேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், உத்தர்காண்டில் 2017-22 ஆம் ஆண்டில் நடப்பட்ட மரங்களில் 33% மட்டுமே வளர்ந்துள்ளது.

    CAG அறிக்கையை எடுத்துக்காட்டில் அரசாங்கத்தின் நிதியை பாஜக அரசு வீணடிக்க காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தரகண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
    • 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.

    மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.

    2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்டில் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.

    திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    அதனபடி பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்தல் போன்றவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இது தொடர்பாக பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.

    இந்நிலையில், உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தின்படி ஒருவரின் லிவ்-இன் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதுவரை இது தொடர்பாக 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் 1 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற 4 விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×