search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national games"

    • தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    37-வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 49 விளையாட்டுகள் நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 116 அதிகாரிகளுடன் இந்த குழு பங்கேற்கிறது.

    அதிகபட்சமாக தடகளத்தில் இருந்து 80 பேரும், கால்பந்து, கூடைபந்து போட்டியில் தலா 40 பேரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பினர்.

    • ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அதிகாரி சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    இந்த தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    19, 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கு கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்ட போட்டி நடக்கிறது. 45 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 1 மீட்டர் நடை பயணம், 50 மீ, 100 மீ ஓட்டம், கேரம் ஆகியவை நடக்கிறது.

    இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் போட்டி அன்று தங்கள் பெயர்களை பதிவு செய்து நேரடியாக கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 128 பதக்கங்களை வென்ற சர்வீசஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
    • ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது.

    சூரத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.

    39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் உள்பட 140 பதக்கங்களை கைப்பற்றிய மகாராஷ்டிரா அணி 2வது இடத்தை பிடித்தது. 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் உள்பட 116 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடத்தில் இருந்தது. 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 74 பதக்கங்களை வென்ற தமிழக அணி பதக்கப் பட்டியலில் 5 இடத்தில் நீடித்தது. 

    நேற்று நடைபெற்ற வண்ண மிகு நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், முதலிடம் பிடித்த சர்வீசஸ் அணி நிர்வாகத்திடம் கோப்பையை வழங்கினார்.

    ஐந்து தனிநபர் தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் எட்டு பதக்கங்களை வென்று கேரளாவை சேர்ந்த சஜன் பிரகாஷ், சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருதை பெற்றார்.

    ஆறு தங்கப் பதக்கங்கள் உள்பட 7 பதக்கங்களை வென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 14 வயதான ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது. 

    மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கான கொடி, கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுட் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
    • நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த போட்டிகளின் முடிவில் தமிழக அணி 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கங்களுடன் இருந்தது.

    நேற்றைய போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.

    இதே போல ஆண்களுக்கான 120 கிலோ மீட்டர் மாஸ் ஸ்டார்ட் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீரர் ஸ்ரீநாத் லட்சுமிகாந்தும் வெண்கல பதக்கம் வென்றார். சைக்கிளிங் போட்டியில் கிடைத்த 2-வது பதக்கம் ஆகும்.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 51 தங்கம் உள்பட 113 பதக்கத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அரியானா 2-வது இடத்தி லும், மராட்டியம் 3-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும் உள்ளன.

    தேசிய விளையாட்டு போட்டிகள் நாளை மறு நாளுடன் முடிவடைகிறது.

    • பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
    • 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

    தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.

    • நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 46 பதக்கங்கள் பெற்று இருந்தது.

    நேற்று தமிழக அணிக்கு 4 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சுனைனா குருவில்லா தங்கம் வென்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் அபய்சிங் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் அணிகள் பிரிவில் அபய்சிங், வேலவன் செந்தில்குமார், அரிந்தர் பால்சிங், நவனீத் பிரபு ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது.

    மேலும் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளி கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வேலவன் செந்தில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.

    சுனைனா குருவில்லா, ரதிகா சீலன், சமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நீச்சல் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிபதக்கம் கிடைத்தது.

    மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • 2014-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 8 ஆண்டு காலத்திற்கு பிறகு முறியடித்தார்.
    • தமிழக வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 8 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டிய தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், 3.90 மீட்டர் உயரம் தாண்டிய பாரனிகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 


    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார். 

    • பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
    • சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

    இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும் (187 கிலோ), ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் (169 கிலோ) வென்றனர்.

    சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது தனது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மேலும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதாகவும் மீராபாய் சானு கூறினார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பிரதிநிதியாக பங்கேற்றது பெருமையான தருணம். தொடக்க விழாவில் மணிப்பூர் குழுவை வழிநடத்தும்படி என்னைக் கேட்டபோது உற்சாகம் இரட்டிப்பானது என்றும் மீராபாய் சானு கூறினார்.

    • ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

    இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    "தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

    பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

    • கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது.
    • தமிழக பெண்கள் அணி கபடி போட்டியில் கலந்து கொண்டு 3 வது இடம் பெற்று வெண்கல பதகத்தை வென்றனர்.

    திருப்பூர்

    மத்திய அரசால் நடத்தப்படும் கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக பெண்கள் அணி கலந்து கொண்டு 3-வது இடம் பெற்று வெண்கல ப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் தமிழக மகளிர் அணியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கபடி வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர். வெண்கலப்பதக்கம் வென்ற திருப்பூர் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டும், பரிசளிப்பு விழாவும் மாவட்ட கபடி கழகத்தில் நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கபடி கழக செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவரும், மாநகர மன்ற உறுப்பினருமான செந்தூர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கபடி கழக பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர்கள் மினுபேஷன் கே.எம்.வேலுச்சாமி, மகாலட்சுமி ரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு, விளையாட்டு அலுவலர் எம்.ராஜகோபால் கலந்து கொண்டு திருப்பூர் வீராங்கனைகள் ஏ.வி.பி.கல்லூரியில் படிக்கும் யாழினி, உடுமலையில் படிக்கும் கஜிதாபீபி ஆகியோருக்கு பாராட்டும், பரிசும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் சீனியர் தேசிய போட்டி அரியானாவில் நடந்தது.

    இதில் தமிழக அணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணமூர்த்தி, கன் னீஸ்வரன் ஆகியோர் தேர்வு பெற்று சேலத்தில் நடைபெறுகிற பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழாவில் விளையாட்டு கழக தடகள பயிற்சியாளர் திவ்விய நாகேஸ்வரி, மாவட்ட கபடி கழக துணை செயலாளர் சின்னு, அன்னை செல்வ ராஜ், நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.சேகர், தண்டபாணி, பாண்டியன், செந்தில், தர்மராஜ், டெக்னிக்கல் மெம்பர் ஆர்.ரங்கசாமி, ராஜன், வாசு ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மனும், சர்வதேச நடுவருமான ஆர்.முத்துசாமி வரவேற்றார்.

    முடிவில் இணை செயலாளர் பி.எஸ்.என்.எல். வாலீசன் நன்றி கூறினார்.

    ×