என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
- பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.
மதுரை:
மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளழகர் கோவிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே எதிர்சேவை நிகழ்வின்போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும்.
இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தனிநபரின் வழிபடும் உரிமைக்கு எதிரானது. ஆகவே முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும், பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி, இடுப்பில் கட்டிக்கொண்டு அழுத்தம் கொடுத்தே தண்ணீர் பீய்ச்சுவர். கோடை காலத்தில் தண்ணீர் பீய்ச்சுவது அனைவருக்கும் இதமாகவே அமையும். கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது.
இதன் காரணமாகவே, தண்ணீர் பீய்ச்சுபவர்கள் பெரும்பாலும் அழகர் வேடமணிந்திருப்பர். மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனவே தண்ணீர் பீச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்வர். கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்கும் விதமாகவே தண்ணீர் பீய்ச்சப்படுகிறது. இந்த வழக்கம் வேறு பல கோவில்களிலும் நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.
மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து கள்ளழகர் கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.
திருச்சி:
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.
இதனை பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் தபால் வாக்குகளை ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய வாக்குகள் அந்தந்த அலுவலர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 445 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது.
குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 5031 வாக்குகள் பதிவாகின பெரம்பலூரில் இருந்து அதிகமாக வந்திருக்கிறது.
அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து 2493 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 4117 தபால் வாக்குகள் பதிவாகின. அதில் 2674 வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு பதிவாகி இருந்தது.
திருச்சிக்கு மட்டும் 1443 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்கினையும் பிற மாவட்டங்களில் திருச்சிக்கு பதிவான 5031 வாக்குகளையும் சேர்த்தால் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு 6474 தபால் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற மாவட்டங்களில் இருந்து தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;-
திருவள்ளூர்-4547, வடசென்னை-4023, மத்திய சென்னை -3,639, ஸ்ரீபெரும்புதூர்-3385, காஞ்சிபுரம் -949, அரக்கோணம் -926, வேலூர்-1863 கிருஷ்ணகிரி-6984 தருமபுரி-597 திருவண்ணாமலை-6551, அரணி-889, விழுப்புரம்-798 , கள்ளக்குறிச்சி-2243, சேலம்-4961, நாமக்கல்-1516 ஈரோடு-2908, திருப்பூர்-4947, நீலகிரி-1450, கோவை-4545, திண்டுக்கல்-1254 கரூர்-2970, பெரம்பலூர்-3028 கடலூர்-2322 சிதம்பரம்-2819 , மயிலாடுதுறை-1408 , நாகப்பட்டினம்-1814 தஞ்சாவூர்-1812 சிவகங்கை-3167 மதுரை-3552 , தேனி-500 , விருதுநகர்-2524 ராமநாதபுரம்-1948, தூத்துக்குடி-1667 தென்காசி-1879 திருநெல்வேலி-2303 கன்னியக்குமரி-434.
- தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.
வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.
- வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.
இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.
விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.
- குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
நாகர்கோவில்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைய உள்ளது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளைய தமிழகத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மேலும் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போதும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
அதே போல் இந்த முறையும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
நேற்றைய தினம் முதலே இதனை காண முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.
வழக்கமாக நாகர்கோவில் வரக்கூடிய ரெயில்களில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நாகர்கோவில் வரும் வரை கட்டுக்கடங்காத வகை காணப்படும். கடந்த இரு தினங்களாக அதேபோன்ற ஒரு கூட்டத்தை காண முடிந்தது.
இன்றும் சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.
ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் வந்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் காணப்பட்டனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் படிக்கக்கூடிய இளைஞர்கள் ஆவர். தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள்.
பலர் தேர்தலில் வாக்களித்துவிட்டு உடனடியாக திரும்பும் வகையிலும் திட்டமிட்டு வந்துள்ளனர். பல இளைஞர்கள் பயணத்தின்போது சக நண்பர்களுடன் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மிகவும் ஆர்வமாக பேசி வந்ததை காண முடிந்தது. அவர்களில் பல இளைஞர்கள் முதன் முதலாக தேர்தலில் வாக்களிப்பதாக பேசிக் கொண்டனர். அந்த இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சக பயணிகளிடம் பேசியபடி இருந்தனர். அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் வெளியூருக்கு செல்வதற்கான பயணத்திட்டத்தையும் நண்பர்களுடன் விவாதித்தனர்.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது.
மேலும் விளவங்கோடு சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இதனால் மற்ற சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்களை காட்டிலும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
அந்த தொகுதியை சேர்ந்த புதிய வாக்காளர்களான இளைஞர்கள், முதன் முறையாக சந்திக்கும் தேர்தலிலேயே இரு ஓட்டுகள் போடும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பூரிப்படைந்துள்ளனர்.
- பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.
18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். சுமார் ஒரு லட்சம் மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.
மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. இ.வி.எம்., விவிபேட் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
- தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த பால சுப்பிரமணி மற்றும் சுமதி தம்பதியின் மகன் நாக அர்ஜூன் (வயது 23). இவர் அமெரிக்காவில் மெக்சிகோ பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். என்னுடன் இந்தியாவை சேர்ந்த பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் என்னுடன் வந்தனர். மேலும் பலர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் வருகை தர உள்ளனர்.
உள்ளூரில் இருந்தால்கூட நாம் வாக்களித்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று சிலர் நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். என்னைப்போல வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சொந்த நாட்டிற்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்த நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
வாக்குப்பதிவிற்காக அமெரிக்காவில் இருந்து வந்த நாக அர்ஜூனனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
- பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
- வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
விரலில் வைத்த கருப்புமை
— வைரமுத்து (@Vairamuthu) April 18, 2024
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்#Elections2024
- திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
- உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கோவை:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.
- பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று குறை கூறி வருகின்றனர்.
இதுபற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை அறிவித்துள்ளது. அவற்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி பான்கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.
எனவே பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் இல்லை.
சென்னை மாநகரில் 87 சதவீதம் வீடுகளுக்கு பூத் சிலிப் வினியோகித்து விட்டோம். சில வீடுகளில் கதவை திறப்பதில்லை. அதுபோன்ற காரணங்களால்தான் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கு கொடுக்க முடியவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பூத் சிலிப் கொடுக்கும்போது சில வீடுகள் பூட்டி கிடப்பதாக கூறுகின்றனர். வீட்டை பூட்டி விட்டு சிலர் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
இதுபோன்ற காரணங்களால்தான் பூத் சிலிப் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1950 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்தால் எந்த வாக்குச்சாவடியில் உங்கள் பெயர் உள்ளது, பாகம் எண் முதற்கொண்டு அனைத்தும் கிடைத்து விடும். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை உள்ளீடு செய்தாலும் அனைத்து விவரங்களும் வந்து விடுகிறது.
எனவே பூத் சிலிப் என்பது கூடுதல் உதவிதான் அது கட்டாயமில்லை. வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடி வாசல் அருகே உதவி மையம் இருக்கும். அங்கிருக்கும் தன்னார்வலர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
- அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.
தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.
2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.
லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.






