என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான்.
    • ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே.

    சென்னை:

    செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகம் பெரிது என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். அவர்கள் போட்ட வழக்கின் நீட்சிதான் அமலாக்கத்துறை கைது செய்தது.

    இப்போதும் செந்தில் பாலாஜி விடுதலை ஆகவில்லை. சட்ட விதிகளின்படி ஜாமின் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது. அதன் மீது விசாரணை நடக்கிறது. விசாரணை முடியட்டும்.

    அதற்குள் இதை அரசியல் ஆக்கி அவரது தியாகம் பெரிது. உரம் பெரிது என்றால் இந்த மாதிரி புகார்களுக்கு ஆளாகி தனது கட்சியினர் சிறை செல்வதை முதலமைச்சர் தியாகம் என்கிறாரா?

    எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் பரவாயில்லை. நெஞ்சுரத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறாரா?

    எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு தண்டனை அனுபவித்தது இல்லை என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் ஜாமின் வழங்காதது ஐகோர்ட்டு தானே. அப்படியானால் ஐகோர்ட்டு உத்தரவை விமர்சிக்கிறாரா?

    தவறு செய்பவர்கள் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்பதுதான் இந்த மாதிரி கைது நடவடிக்கை. இது பா.ஜனதா ஆட்சியில் மட்டுமல்ல. காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்திருக்கிறது.

    ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே. அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது செய்த தவறுகள், தி.மு.க. பக்கம் வந்ததும் தியாகமாக மாறிவிட்டதா?

    சுதந்திர போராட்ட வீரரைப் போல சித்தரிக்க முயல்வது அபத்தமானது. இளைஞர்களை தவறாக வழி நடத்துவது. வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.

    அமைச்சராகி கோட்டையில் கையெழுத்து போடப் போகிறாரா? அமலாக்கத்துறையில் கையெழுத்து போட்டு புதிய முன்னுதாரணத்தை சொல்லப் போகிறாரா? என்பதையும் தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது.

    எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.

    இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.

    அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.

    தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.

    அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும்.

    அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    இந்நிலையில் பிரதமரை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.

    மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம்.
    • இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தவிரடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு. ஊதியம், பராமிரிப்பு போக மீதம் உள்ள தொகை எவ்வளவு? எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவிலில் 12 குருக்கள், 19 உதவி குருக்கள் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் 2 குருக்கள், 7 உதவி குருக்கள் பணியில் உள்ளனர். ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.

    நீதிபதிகள் விசாரணையின்போது இந்து அறநிலைத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா வேலைகளை மட்டுமே செய்கின்றன என கண்டித்தனர். அத்துடன் அடுத்த மாதம் 14-ந்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி.
    • 75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கலைஞரின் கோட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

    கும்பகோணம் தி.மு.க.வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல, இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என தஞ்சையில் நீலமேகம் தலைமையில் சிறப்பாக நடத்திக்காட்டினர். அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி. தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

    75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டம் அனைத்து தகுதி உள்ள மகளிர்களுக்கும் கிடைக்கும்.

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ததே திமுக தான்.
    • அதிமுகவில் இருந்தால் கெட்ட திருடன்... திமுகவில் இருந்தால் நல்ல திருடனா?

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பாட்டிலுக்கு அதிக விலை வைத்து விற்பது, கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதெல்லாம் தியாகமா? திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது தான் தியாகமா?

    * செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ததே திமுக தான்.

    * செந்தில் பாலாஜியை உள்ளே அனுப்பியதும் திமுக தான்... தற்போது வரவேற்பதும் திமுக தான்.

    * அதிமுகவில் இருந்தால் கெட்ட திருடன்... திமுகவில் இருந்தால் நல்ல திருடனா?

    * செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்ததும் குற்றமற்றவராகி விடுவாரா?

    * யார் அதிகம் கமிஷன் வாங்கி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் தற்போது நல்ல அமைச்சர் என்று அவர் கூறினார்.

    • மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
    • ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.

    ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.

    இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.

    இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

    தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.

    மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.

    மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

    அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.

    முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.

    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
    • வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை விளாங்குறிச்சி அருகே டைட்டில் பார்க் வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் உள்ள மிகப்பெரிய துறை இது. பல்வேறு காரணங்களால் கட்டிடம் தாமதம் ஆகியது. இருந்தாலும் உரிய விதிமுறைகள், சான்றிதழ்கள் பெற்று இந்த கட்டிடத்தை திறக்க இருக்கிறோம். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்படுவதன் மூலம் 3,250-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்.

    இதில் ஒரு சில நிறுவனங்கள் இடத்தை முழுமையாக கேட்கின்றன. ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்கு என்று விதிமுறை உருவாக்க தெரிவித்துள்ளேன்.

    அதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்று 15 ஆயிரம் சதுரடியாவது வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்.

    தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

    பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நிதி துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்ய வேண்டும்.

    அதற்காகவே உங்களை அங்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில், அணுகு முறையில் திருத்தம் தேவைபடுகின்றது.

    நான் வேறு துறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் உறுப்பினராக இருந்த போது ஜி.எஸ்.டி. திட்டமிடுதலில் உள்ள குறைகளை சுட்டிகாட்டி இருக்கிறேன்.

    ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் உள்ள தவறுகளை வேகமாக சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் கண்ணன், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது.
    • 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

    அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

    2015: தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.

    2016: உயர்நீதிமன்றத்தில் வழக்கு – செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது.

    2019: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    2021: திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.

    2022: தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.

    2023 மே: இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    2023 ஜூன் 14: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.

    2024 ஆகஸ்ட் 8: செந்தில்பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    2024 ஆகஸ்ட் 20: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    2024 செப்டம்பர் 26: 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

    • செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர்.
    • சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியிருப்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய தி.மு.க. அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது இல்லை. இது அவர்களுடைய வரலாறு.

    தி.மு.க. அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டுவதோ, வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்பது எங்களின் எண்ணம்.

    செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை முதலமைச்சர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு. நீதிமன்றமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

    செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், செல்வாக்கு மிக்க பதவிக்கு வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை பாதிக்கும். எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அரசு ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாது என எப்படி முதலமைச்சர் பேசிக் கொண்டு இருக்கிறாரோ அதனை செயலிலும் காட்ட வேண்டும்.

    சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிற தி.மு.க. அரசுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு தி.மு.க. அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
    • முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இது தொடர்பாக கோவையில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. சுப்ரீம் கோர்ட்டு இதில் சரியாக ஒரு நல்ல முடிவாக கொடுத்துள்ளது.

    நிச்சயமாக இதனை நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக தான் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதற்கும், தற்போது வந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.

    அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள்.

    விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
    • 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கரூர்:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

     

    கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.

    கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.

    15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பதால் அவரை மீண்டும் அமைச்சர் ஆக்கவேண்டும் என்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    • கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
    • நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    செஞ்சி:

    வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோட்டையை காண தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது சம்பந்தமாக மத்திய அரசு யுனெஸ்கோ குழுவினருக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளனர். இதனை அடுத்து செஞ்சி கோட்டையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய தார்சாலை போடப்பட்டு உள்ளன.

    மேலும் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொல்லியல் துறை அலுவலர்கள் செஞ்சிக்கோட்டையில் முகாமிட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் செஞ்சிக்கோட்டைக்கு ரோப் கார், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே வந்த மத்திய அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் மேலும் தற்போது வரும் குழுவினரிடமும் மனு அளிக்க உள்ளதாகவும் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர். யுனெஸ்கோ குழுவினர் ஆய்வுக்குப் பின் செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் செஞ்சிக்கோட்டை உலக அளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் எனவும் அப்போது மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் இதனால் செஞ்சியின் வளர்ச்சி பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    யுனெஸ்கோ குழுவினர் வருகையையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    இத்தகவலை கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×