என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளார். இடையில், விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.

    அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

     


    அப்போது, "விஜயை சமீபத்தில் சந்தித்தேன். அதன் பிறகு மற்றொரு சந்திப்பும் நடைபெற இருந்தது. எனினும், திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ரிலீஸ் வேலைகள் இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை. இரண்டு மாதங்கள் முன் நடத்திய சந்திப்பில் அரசியல் பேசினோம்."

    "சேர்ந்து போட்டியிடுவது பற்றிதான் பேசினோம். இறுதியில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் தேசிய கட்சி யாரேனும் கூட்டணியில் இருந்தால் நல்லது என்று நினைக்கலாம். அவரும் என்னிடம், காங்கிரஸ் எப்படி என்று கேட்டார். காங்கிரஸை வைத்துக் கொண்டு நாம் என்ன பேசுவது என்று கூறுமாறு கேட்டேன்," என்றார்.

    விஜயுடன் சந்திப்பு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் த.வெ.க. கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது என்றும், சிலர் இறுதி முடிவை தளபதி தான் எடுப்பார் என்றும், மேலும் சிலர் இந்த தகவலில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.

    இதுதவிர 2026 சட்டமன்ற தேர்தலில், த.வெ.க., நா.த.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் இந்த கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கமென்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் கருத்தியல் ரீதியாக கூட்டணி அமையாது என்றும் கமென்ட் செய்துள்ளனர். சிலர் விஜய் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் கமென்ட் செய்துள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டார்.
    • சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

    மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டதை தொடர்ந்து, காவல்துறை மரியாதை செலுத்தியது.

    கடந்த 22ம் தேதி மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

    எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தனது இறுதி நாள் வரை தொடர்ந்து தேவை ஆற்றி வந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
    • வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

    இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார். மேலும், செந்தில் பாலாஜி மீதான பிரதான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
    • தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மாநகர் மற்றும் புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அண்டை மாவட்ட மக்களின் காய்கறி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 15 லோடு தக்காளி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.

    தற்போது வெளி மாநிலத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள காரணத்தினால் ஆந்திர, கர்நாடக தக்காளி வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளியும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

    இது தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 25 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.900 முதல் ரூ.1100 வரை விற்பனை ஆனது. தற்போது திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட உள்ளூர் தக்காளி வரத்தை மட்டுமே உள்ளது. ஆந்திரா தக்காளி ஒரு பெட்டிக்கு அங்கேயே ரூ. 1500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும்போது ரூ.2000 வரை விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.

    ஆகவே இங்குள்ள வியாபாரிகள் வெளி மாநில தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இன்று 8 லோடு உள்ளூர் தக்காளி மட்டுமே திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்தது. அவ்வளவும் உடனடியாக விற்பனையாகி விட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரம் வாய்ப்பு உள்ளது என்றார்.

    திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று 50 முதல் 60 வரை விற்கப்பட்டது.

    இதேபோன்று மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் வரத்து குறைந்து நல்ல தேங்காய் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சில்லரை சந்தைகளில் ஒரு தேங்காய் ரூ.30 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர். தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

    பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சார்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் மீது கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.

    இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    செல்வகுமார் தனது செல்போனை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்தை நீக்க வேண்டும்.

    தொடர்ந்து இதுபோல் நடந்துகொண்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்.

    சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கடும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    • தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாசலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வாகனங்களில் இருப்பவர்களிடம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் "தெர்மாமீட்டர்" கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடந்து வருகிறது. தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    அவ்வாறு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    30-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 28-ந்தேதி வரை வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.
    • மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2ல் இருந்து அரசு பஸ் ஒன்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறது. இந்த பஸ்சை கடந்த 15ம் தேதி கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை ஏற்றிச் செல்வதற்காக புக்கிங் செய்தனர். சுமார் 80 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்சை அன்று காலை அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆத்தூரில் இருந்து கோபால்பட்டிக்கு பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

    பின்னர் மாலையில் மீண்டும் அவர்களை கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு தற்காலிக டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணிகளுக்கான டிக்கெட்டாக இலவச மகளிருக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை தற்காலிக கண்டக்டர் வழங்கி உள்ளார். இந்நிலையில் செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.

    அப்போது மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக இதுபோன்று தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயணிகளை புக்கிங் செய்து ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்துக் கழக மேலாளர் வழங்கும் அனுமதி கடிதத்தை கண்டக்டர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் முறையான விதிகளை பின்பற்றாத போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்களான சுப்பையா, ஜோசப் மிக்சன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது.
    • விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள்.

    திருப்பூர்:

    சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூரில் இன்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த பின், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். பா.ஜ.க., எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடுப்பதும், பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தால் அதனை வாபஸ் பெறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். செந்தில் பாலாஜியை ஏன் இத்தனை நாட்கள் சிறையில் அடைத்து வைத்து இருந்தார்கள்? என்று தெரியவில்லை. அவர் மீண்டும் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது தொடர்பாக அடுத்த 2 நாட்களில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க இருக்கிறேன்.

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது. விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள். இது போன்ற திட்டங்களால் தான் நிலத்தடி நீர் உயரும். மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தொடர்ந்து ஆட்சியில் அதிகாரம் கேட்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நோ கமெண்ட்ஸ் என பதிலளித்து சென்றார். 

    • செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான்.
    • ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே.

    சென்னை:

    செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகம் பெரிது என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். அவர்கள் போட்ட வழக்கின் நீட்சிதான் அமலாக்கத்துறை கைது செய்தது.

    இப்போதும் செந்தில் பாலாஜி விடுதலை ஆகவில்லை. சட்ட விதிகளின்படி ஜாமின் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது. அதன் மீது விசாரணை நடக்கிறது. விசாரணை முடியட்டும்.

    அதற்குள் இதை அரசியல் ஆக்கி அவரது தியாகம் பெரிது. உரம் பெரிது என்றால் இந்த மாதிரி புகார்களுக்கு ஆளாகி தனது கட்சியினர் சிறை செல்வதை முதலமைச்சர் தியாகம் என்கிறாரா?

    எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் பரவாயில்லை. நெஞ்சுரத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறாரா?

    எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு தண்டனை அனுபவித்தது இல்லை என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் ஜாமின் வழங்காதது ஐகோர்ட்டு தானே. அப்படியானால் ஐகோர்ட்டு உத்தரவை விமர்சிக்கிறாரா?

    தவறு செய்பவர்கள் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்பதுதான் இந்த மாதிரி கைது நடவடிக்கை. இது பா.ஜனதா ஆட்சியில் மட்டுமல்ல. காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்திருக்கிறது.

    ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே. அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது செய்த தவறுகள், தி.மு.க. பக்கம் வந்ததும் தியாகமாக மாறிவிட்டதா?

    சுதந்திர போராட்ட வீரரைப் போல சித்தரிக்க முயல்வது அபத்தமானது. இளைஞர்களை தவறாக வழி நடத்துவது. வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.

    அமைச்சராகி கோட்டையில் கையெழுத்து போடப் போகிறாரா? அமலாக்கத்துறையில் கையெழுத்து போட்டு புதிய முன்னுதாரணத்தை சொல்லப் போகிறாரா? என்பதையும் தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது.

    எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.

    இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.

    அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.

    தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.

    அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும்.

    அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    இந்நிலையில் பிரதமரை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.

    மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம்.
    • இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தவிரடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு. ஊதியம், பராமிரிப்பு போக மீதம் உள்ள தொகை எவ்வளவு? எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவிலில் 12 குருக்கள், 19 உதவி குருக்கள் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் 2 குருக்கள், 7 உதவி குருக்கள் பணியில் உள்ளனர். ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.

    நீதிபதிகள் விசாரணையின்போது இந்து அறநிலைத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா வேலைகளை மட்டுமே செய்கின்றன என கண்டித்தனர். அத்துடன் அடுத்த மாதம் 14-ந்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    ×