என் மலர்
மகாராஷ்டிரா
- கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
- பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையிலான போராட்டங்களை நடத்தின.
அப்போது இஸ்லாமிய புனித எழுத்துக்கள் கொண்ட 'சதர்' துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், மத்திய நாக்பூர் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு வன்முறை வெடித்தது.
குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் நாக்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் நேற்று முன்தினமும் சில பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தின்பின் 6 நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீதமுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. எங்கும் பதற்றம் இல்லை. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாகப்பூர் தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
- பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.
- 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
- சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
மும்பை:
மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.
இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.
அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
- மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
- மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
மும்பை:
மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.
- ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
- சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,
ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.
புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.
குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.
ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
- ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
- 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இன்று மும்பையில் ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். ஐபிஎல்-ன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. .
ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க விழா முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது.
- நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.
நாக்பூர்:
மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர். கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக மாநில உள்துறை இணை மந்திரி யோகேஷ் கதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோட்வாலி, கணேஷ்பேத், தேசில், லகட்கஞ்ச், பச்பாவோலி, சாந்த் நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல அதிவிரைவு படை, கலவர கட்டுப்பாட்டு பிரிவு படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இந்த பகுதியை டிரோன்கள் பறக்கவிட தடை செய்யப்பட்ட மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு டிரோன்களை பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளை அகற்றுவதற்காக சத்ரபதி சம்பாஜி நகரில் 24 மணி நேரமும் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் 80-க்கும் மேற்பட்ட நபர்கள் வலைதளத்தில் மோசமான பதிவுகளை இடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இனிமேல் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இடுபவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்வோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
- அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.
ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் உயர்வை சந்தித்தன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 74,169.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
இன்று குறைந்தபட்சமாக 74,480.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 75,385.76 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக 1,131.30 (1.53 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 22,508.75 ஆக இருந்தது. இன்று காலை சுமார் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சடமாக 22,599.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 22,857.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக நிஃப்டி 22,834.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை 30 நிறுவன பங்குகளை முன்னணியாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி பங்குகள் உயர்வை சந்தித்தன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.
- அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார்.
- நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
எல்லோரும் அதையே விரும்புவதாகவும் அதை சட்டப்படி செய்வோம் என்றும் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள கர்தா சௌக்கில் நிறுவப்பட்ட சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று ஷிண்டே கூறினார்.
சத்ரபதி சிவாஜி, ஒன்றுபட்ட இந்தியாவின் பெருமையும், இந்துத்துவத்தின் கர்ஜனையுமாகும். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர்.
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை செயல்படும். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் சிவாஜி மகாராஜின் துணிச்சல் மற்றும் நிர்வாகத்தின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்கமளிக்கும். இந்த கர்தா சௌக் இனி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக் என்று அழைக்கப்படும் என்று ஷிண்டே கூறினார்.

இதை கேட்டு பரவசம் அடைந்த கூட்டத்தினர் "ஜெய் பவானி, ஜெய் சிவாஜி" என்ற கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை பாபர் மசூதியை போல வேரோடு பிடுங்கி எறியப்படும் என இந்து அமைப்புகள் சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







