என் மலர்
இந்தியா
- எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
- முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய ஆற்றல் வந்துவிடும்.
* மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகிறேன்.
* இளைய பருவத்தில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாகப்படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வரலாம்.
* கொரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கினோம்.
* பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது சிறப்பு வாய்ந்த விழா.
* எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
* திராவிட மாடல் அரசில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பாராட்டு விழா.
* திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வை காட்டுவதே இந்த பாராட்டு விழா.
* 100 சதவீதம் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நமது இலக்கு. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர் என்ற இலங்கை எட்டுவதற்கு சாதித்த மாணவர்கள் உதவ வேண்டும்.
* முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
* மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு நன்றி.
* தொலைநோக்கு பார்வையோடு மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
* காடு எதுவாக இருந்தாலும் சிங்கம்தான் அங்கே ராஜா, அதுபோல் எளிய பின்னணியில் இருந்த வந்த நீங்கள் தான் ஹீரோ.
* மனப்பாடம் பண்ணும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க உள்ளோம்.
* அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி பேச செய்த மாணவர்களுக்கு நன்றி.
* தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும். தமிழும், ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை.
* கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம்.
* மதிப்பெண்களை நோக்கி அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக அமைக்கப்படும்.
* பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
- வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை உள்ளடக்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து நீரில் இருக்கும் வாழை மரங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
- துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.
- பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 21-ந்தேதி மனுதாக்கலுக்கான கடைசி நாளாகும்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். பாராளுமன்ற மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்களும், மேல்சபையில் 240 எம்.பி.க்களும் இருக்கிறார்கள். இவர்களில் 391 வாக்குகள் பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெறுவார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 293 பேரும், மேல்சபையில் 129 பேரும் உள்ளனர். எனவே பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மனுதாக்கல் தொடங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக நேற்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் நட்டா இருவரும் ஆலோசித்து தேர்வு செய்யும் வேட்பாளரை ஏகமனதாக ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்தியுமான நட்டாவும் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை தொடங்கி உள்ளனர். முன்னாள் கவர்னர்கள் அல்லது பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்று பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், கர்நாடகா கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் சேஷாத்திரி சாரி ஆகிய 3 பேர் பெயர் பா.ஜ.க. வேட்பாளருக்கு அடிபடுகிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் பா.ஜ.க. வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரை கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
அதன் பிறகு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் அறிவிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதியாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று ராகுல்காந்தி தனது வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் உள்ள 25 கட்சிகளின் 50 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் நடந்த வாக்குகள் திருட்டு தொடர்பான தகவல்களை ராகுல்காந்தி தெரிவித்ததாக தெரிகிறது. அவர்களிடம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் எப்படி தில்லுமுள்ளு செய்யப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி விளக்கி கூறினார்.
அதன் பிறகு 12 கட்சி தலைவர்களுடன் மட்டும் ராகுல்காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் இந்த 12 கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று தெரிய வருகிறது.
இவர்கள் மீண்டும் டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர். அப்போது இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும்.
- கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
- தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.
மொத்த விற்பனை:
ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45
முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10
சில்லறை விற்பனை:
ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60
விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு
தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது.
- கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதன் காரணமாக, ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரத்து உத்தரவை எதிர்த்து கவிஞர் திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது" என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்க தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
- விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டு மேடை 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டுள்ளது.
இதனிடையே, மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநில மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை என்றும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. மாநாடு முன்னேற்பாடு பணிகள்:-
* மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.
* மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
* 400 தற்காலிக கழிப்பறை வசதிகள்.
* மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து உள்ளேயும், வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள்.
* மாநாட்டு திடலில் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 450 ஒலிபெருக்கிள், 20 ஆயிரம் மின்விளக்குகள்.
* மருத்துவகுழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிக்காக சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' தவிர 'ஸ்போக்கன் தமிழ்' மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
சென்னை:
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கல்விக்கொள்கை மற்றும் மொழி
மொழி: பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம்.
இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.
'ஸ்போக்கன் தமிழ்': 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போலவே 'ஸ்போக்கன் தமிழ்' மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பொதுத்தேர்வு: 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.
நீட்: நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
நிர்வாகம் மற்றும் கட்டணம்
மாநிலப் பட்டியல்: கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும்.
கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை
வயது வரம்பு: 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம்.
இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி
அங்கன்வாடி மையங்கள்: அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள்:
எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிகள்: கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
சமூக பிரச்சனைகள்
போதைப்பொருள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.
- ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 21,135 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
- கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண்மை துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்து 93 ஆயிரத்து 771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 95 ஆயிரத்து 130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42 ஆயிரத்து 484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மேலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்தது. சாகுபடிக்கு தேவையான பயிர் கடனும் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை பற்றாக்குறை இல்லாமல் வெளியில் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்தோம்.
அதன்படி, இந்த ஆண்டு இலக்கை தாண்டி சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம் என்றனர்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 17 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200
06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960
04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-08-2025- ஒரு கிராம் ரூ.127
06-08-2025- ஒரு கிராம் ரூ.126
05-08-2025- ஒரு கிராம் ரூ.125
04-08-2025- ஒரு கிராம் ரூ.123
03-08-2025- ஒரு கிராம் ரூ.123






