என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
    • உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.

    பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம். 

    நீரேற்றம்...

    ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். 

    கிளென்சிங்

    பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது.  இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது. 

    எக்ஸ்ஃபோலியேஷன்

    முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.


    சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்

    சரிவிகித உணவு

    ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.  

    மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.

    • எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
    • வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.

    2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம். 

    அழகியல் நன்மைகள்

    எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது. 

    முடி வளர்ச்சி

    எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 


    மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்

    நல்ல தூக்கம்

    வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். 

    நோய்களை தவிர்க்கும்...

    எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது. 

    • முடி, சருமம் என இரண்டிற்கும் பல்வேறு அழகு நன்மைகளை அளிக்கிறது அரிசி தண்ணீர்.
    • அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.

    முடி உதிர்தலை தடுக்க, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெண்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வர். அதில் ஒன்றுதான், முடிக்கு அரிசி தண்ணீர் பயன்படுத்துவது. முகம் மற்றும் சருமத்திற்கு அரிசி நீரை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதனால் என்னப் பயன் என்பது குறித்து பார்ப்போம்.

    சருமத்தைப் பொலிவாக்கும் 

    அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சரும அமைப்பை மேம்படுத்தவும், நிறத்தை கூட்டவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். மேலும் கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் மற்ற பழுப்பு நிறக்கோடுகள், புள்ளிகளையும் குறைக்க உதவும்.

    வயதான தோற்றத்தை குறைக்க உதவும்

    அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது தொடர்பான பிற தோல் கவலைகளைக் குறைக்க உதவும்.

    நீரேற்றம் 

    அரிசி நீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும், அழற்சியால் ஏற்பட்ட பாதிப்பினை குறைக்கவும் உதவும். இது ஒரு இயற்கை மாய்ச்சுரைசராகவும் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்க உதவும். 

    எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்

    அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கும், முகப்பரு அதிகம் இருப்பவர்களுக்கும் அரிசி நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெடிப்புகளை தடுக்கவும் உதவும். 


    அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன

    தோல் தடையை சரிசெய்தல்

    அரிசி நீரில் உள்ள புரதங்கள் சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்த உதவும், இது சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் ஈரப்பதம் இழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இது காலப்போக்கில் ஆரோக்கியமான, மீள்தன்மை கொண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். 

    ஆக்ஸிஜனேற்ற பண்புகள் 

    அரிசி நீரில் வைட்டமின் ஈ , ஃபெருலிக் அமிலம் மற்றும் பைடிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

    எக்ஸ்ஃபோலைட்டிங்

    அரிசி நீரில் என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற இயற்கையான எக்ஸ்ஃபோலைட்டிங் பொருட்கள் உள்ளன. அவை இறந்த சரும செல்களை அகற்றவும்,  முகப்பருவைத் தடுக்கவும் உதவும்.

    இவ்வளவு நன்மைகளை கொண்ட அரிசிநீரை எப்படி பயன்படுத்துவது?

    அரிசியை தண்ணீரில் கழுவிவிட்டு, அதில் உள்ள அழுக்கு சென்றபின் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அரை கப் அரிசி எடுத்தால், இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் தண்ணியை ஒரு சுத்தமான கிண்ணத்தில் வடிகட்டி, பஞ்சை பயன்படுத்தி, தொட்டு தொட்டு முகத்தில் தடவலாம். அல்லது பாட்டிலில் ஊற்றி ஸ்பிரேவாகவும் பயன்படுத்தலாம். இதனை வாரத்திற்கு இரண்டுமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

    • கடுகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தும்.
    • அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

    கடுகு எண்ணெயில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் அரிப்புகள் ஏற்படுவதை தடுத்து அதற்கெதிராக போராடுகின்றன. முடிக்கு இவ்வளவு நன்மை பயக்கும் கடுகு எண்ணெயை மற்ற எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 

    வெந்தயம் - கடுகு எண்ணெய்

    வெந்தயம் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நிகோடினிக் அமிலம் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. வெந்தயத்தை கடுகு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது அந்த கலவை உச்சந்தலையில் ஊடுருவி, வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.

    பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, கடுகு எண்ணெயுடன் கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, 30-45 நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைக்கு குளிக்கவும்.

    கடுகு எண்ணெய் - வெங்காயச் சாறு

    வெங்காயச் சாறு நீண்ட காலமாக அதன் அதிக சல்பர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது. சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் முடி நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவுவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் முடிவளர்ச்சியைத் தூண்டி காலப்போக்கில் முடி உதிர்தலைக் குறைக்கிறது. இந்த கலவை உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்கவும், வேர் முதல் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி, அதில் வெங்காய சாற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் ஊற்றி, மெதுவாக மசாஜ் செய்து, 30-40 நிமிடங்கள் விட்டு, ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம். இது முடி அடர்த்தியை மேம்படுத்துவதோடு, உதிர்தலை குறைக்கும்.

    கடுகு எண்ணெய் - கற்றாழை

    கற்றாழையின் நீரேற்றம் பண்பு தலையின் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. முடி நுண்ணறைகளை அவிழ்த்து, முடி மீண்டும் வளரத் தூண்டுகிறது. இந்த கலவை முடியை ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதோடு, முடியின் உடையும் தன்மையை குறைக்கும். அதாவது முடியை வலுப்படுத்தும்.

    பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லை கடுகு எண்ணெயுடன் கலக்கவும். கலவையை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் விட்டு, பின்னர் முடியை அலசவும். 

    கடுகு எண்ணெய் - கறிவேப்பிலை

    கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையை கடுகு எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தும்போது வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெயில் தேவையான அளவு கருவேப்பிலையைப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இந்த எண்ணெயை எடுத்து ஆறவைத்து வடிகட்டி முடிக்கு மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். 

    கடுகு எண்ணெய் - செம்பருத்தி

    செம்பருத்தி கெரட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், முடி இழைகளை அடர்த்தியாக்கவும், புதிய வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி இலைகள், பூவை சேர்க்கும்போது சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் உருவாகிறது. இது முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், முடிக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

    பயன்படுத்தும் முறை: செம்பருத்தி இதழ்கள் அல்லது இலைகளை அரைத்து, பேஸ்ட் பதத்திற்கு வந்தபின் கடுகு எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும். 40-45 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து, பின்னர் தலையை அலசலாம். 


    வெந்தயம் முடிக்கு நன்கு ஊட்டமளிக்கும்

    கடுகு எண்ணெய் - கருஞ்சீரகம்

    கருஞ்சீரகத்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களைத் தூண்டுவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இதனை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவும்போது முடி இழைகள் வலுவடைகின்றன.

    பயன்படுத்தும் முறை: கருப்பு விதைகளை நன்றாகப் பொடியாக அரைத்து, சூடான கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அலசலாம். இந்த பேக்கை வாரந்தோறும் போடுவது முடி உதிர்தலைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். 

    கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் பால்

    தேங்காய்ப் பாலில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உடைவதை தடுக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. முடி உடைதலை குறைத்து ஒட்டுமொத்த முடி அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த கலவை வறண்ட மற்றும் உடையக்கூடிய கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்படுத்தும் முறை: தேங்காய்ப் பாலை கடுகு எண்ணெயுடன் கலந்து, அந்தக் கலவையை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி, 45 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவவும். தொடர்ந்து தடவுவது முடியை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்
    • பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள்.

    பலரும் சருமம் பளபளப்பாக, மென்மையாக, ஈரப்பதத்துடன் இருக்க பாடிலோஷன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பல விளைவுகளையும் கொண்டுள்ளன என்பதை அறிய மறுக்கின்றனர். பாடி லோஷன்களுக்கு பதில் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை பயக்கும். அதனால்தான் நமது பாட்டி எல்லாம் எண்ணெய் குளியல் எடுக்க சொல்வர். எண்ணெய் குளியல், எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பாடி லோஷன்களுக்கு மாறாக உங்களுக்கு முழுமையான உடல் பளபளப்பை தரும் 5 எண்ணெய் வகைகளை பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்

    நெடுங்காலமாகவே தேங்காய் எண்ணெய்யை அழகு, ஆரோக்கியம், ஆகாரம் என பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதன் நற்குணங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. தேங்காய் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி மென்மையையும், பளபளப்பையும் இயற்கையாகவே தருகிறது. சிறந்த பலன்கிடைக்க தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தலாம். வெயிலில் சென்றுவந்த பிறகு அல்லது சருமம் வறட்சியாக, சோர்வாக உணரும்போது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    நல்லெண்ணெய்

    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மந்தமான, வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும். பொதுவாக பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள். இடுப்பு எலும்புகள் பலம் அடையும் என்று. அவ்வளவு நன்மைகள் கொண்டது நல்லெண்ணெய். நல்லெண்ணைய்யை லேசாக சூடாக்கி ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்டும். 

    பாதாம் எண்ணெய்

    எண்ணெய் பசையை அதிகம் விரும்பாதவர்கள், எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல கனமாக இருக்காது. இது மென்மையாகவும், சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மையும் கொண்டது, இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவுமுழுவதும் அப்படியே விடலாம். பழுப்பு நிற கோடுகள், கருமையான திட்டுகளை இது நீக்கும். வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். 


    பாதாம் & ஆர்கன் எண்ணெயில் அதிகம் ஒட்டும்தன்மை இருக்காது

    ஆர்கன் எண்ணெய்

    ஆர்கன் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய்தான் ஆர்கன் எண்ணெய். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுத்தன்மையை வெறுப்பவர்களுக்கு இதுவும் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை எண்ணெய் பசையின்றி பளபளப்பாக்குகின்றன. இதனை குளித்தபிறகு இரண்டு, மூன்று சொட்டுகள் முகத்தில் தடவினால் போதும். எண்ணெய் பசை இருப்பதுபோல் முகத்தில் தெரியாது. இது நல்ல வாசனை கொடுப்பதோடு மென்மையான, பளபளப்பான தன்மையை சருமத்திற்கு அளிக்கிறது.  

    கடுகு எண்ணெய்

    கடுகு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மசாஜ் செய்ய, குறிப்பாக குளிர்காலத்தில், உடலை சூடாகவும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க, இது பல காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், உங்கள் சருமம் வலுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.  இதன் வாசனை பிடிக்காதவர்கள் ஜாஸ்மீன் அல்லது லாவெண்டர் எண்ணெய்யை இரண்டு, மூன்று சொட்டுகள் சேர்த்து பயன்படுத்துங்கள். 

    • ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளலாம்.
    • ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள்.

    ரோஸ் வாட்டர் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்திதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அழகியலுக்கு அப்பாற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. முடி பராமரிப்பிற்கும் ரோஸ் வாட்டர் உதவுகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடியின் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. ரோஜாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள், ஆரோக்கியமான உச்சந்தலையை ஆதரிக்கவும், எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. அந்தவகையில் ரோஸ் வாட்டர், தலைமுடிக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதனை முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.

    ஈரப்பதம்

    ரோஸ் வாட்டர் முடியின் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. உச்சந்தலையின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. ரோஸ் வாட்டரில் உள்ள சர்க்கரைகள் முடியின் தண்டில் ஈரப்பதத்தை ஈர்க்கவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. முடி இழைகளை மென்மையாக்குகிறது மற்றும் முடி உதிர்தலை குறைக்கிறது. முடிக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மையை சேர்க்கிறது.

    பொடுகு தடுப்பு

    வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அரிப்புகளைக் குறைக்கிறது. ரோஸ் வாட்டரின் லேசான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் எண்ணெய் பசையை சீராக்க உதவுகின்றன. பொடுகுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான படிவைத் தடுக்கின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு எரிச்சல், சிவத்தல், மற்றும் அரிப்பு ஆகியவற்றை தணித்து, உணர்திறன் வாய்ந்த உச்சந்தலைகளுக்கு நன்மை பயக்கிறது.  

    நறுமணம்

    ரோஸ் வாட்டர் இயற்கையான, மைல்டான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது கூந்தலுக்கு நன்மை பயக்குவதோடு, அதன் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும். முடி நறுமணத்தோடு இருப்பது, மகிழ்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த பங்களிக்கிறது.  


    முகத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது ரோஸ் வாட்டர் 

    முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்

    ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள். இது முடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவும்.

    ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் ரோஸ் வாட்டரைச் சேர்த்தல்

    நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சில டீஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முடிக்கு பயன்படுத்துங்கள். இது முடிக்கு நல்ல ஈரப்பதம் அளிக்கும். அதுபோல ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளுங்கள். இது சின்ன சின்ன முடிகள் அதிகம் பறக்காமல் இருக்கவும், முடிக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

    உச்சந்தலையில் தடவுதல்

    பருத்தி துணியை பயன்படுத்தி ரோஸ் வாட்டரை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இது பொடுகு, அரிப்பு, எரிச்சலை குறைக்கும். மசாஜ் போலவும் கொடுக்கலாம். 

    முன்னெச்சரிக்கைகள்

    ரோஸ் வாட்டர் நன்மை பயக்கக்கூடியது என்றாலும், முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறிய அளவை எடுத்து நமது தலையின் உணர்திறனை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ரோஸ் வாட்டரை உச்சந்தலையில் அதிகம் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.  

    • பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
    • ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...

    தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...

    வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன.  தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.


    பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்

    தேனை எப்படி பயன்படுத்தலாம்?

    பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும். 

    மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டினின் சிறந்த மூலம்.

    பலரும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போம். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெரிதாக தெரியாது. சரும பளபளப்புக்கு எப்போதும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுப்பது நல்லப் பலனை தரும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பழங்கள் குறித்து காணலாம். 

    வாழைப்பழம்

    வாழைப்பழங்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து புத்துயிர் பெறச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டியே வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன.

    பப்பாளி

    சருமத்தில் நன்மை பயக்கும் முக்கியப் பழம் பப்பாளி என பலரும் அறிவர். பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி, முகத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்ற உதவுகிறது. இது முகத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சருமத்தை சேதமடையாமல் பாதுகாத்து ஊட்டமளிக்கின்றன.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு வழிவகுக்கிறது.

    ஆரஞ்சு

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பளபளப்பான சருமத்திற்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முக சுருக்கத்தை குறைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.

    ஆப்பிள்

    ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கும். சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நச்சு நீக்கியாக செயல்படுவதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

    அன்னாசிப் பழம்

    அன்னாசிப் பழத்தில் சுத்திகரிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ப்ரோமெலைன் நொதி உள்ளது. ப்ரோமெலைன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 


    சரும பளபளப்புக்கு வைட்டமின் சி & ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுங்கள்

    மாதுளை

    அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டது மாதுளை. இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளையில் பியூனிசிக் அமிலமும் உள்ளது. இது ஒமேகா-5 கொழுப்பு அமிலமாகும். இது சருமத்தின் ஈரப்பத இழப்பைத் தடுக்கிறது. மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது மென்மையான, மிருதுவான சருமத்திற்கு வழிவகுக்கும்.

    கிவி

    மற்ற பழங்களை விட கிவியில் அதிக வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி உள்ளடக்கம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கிவியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன.

    மாம்பழம்

    மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் பிரகாசமாக்கவும் உதவுகிறது. மாம்பழத்தில் AHA கள் (ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது.

    வெள்ளரிக்காய்

    அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் குளிர்ச்சியான பண்புகளையும் கொண்டுள்ளன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது. இது திசுக்களை வலுப்படுத்தவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    • ஆரஞ்சு தோல் பொடி இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
    • ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம். 

    முகப்பரு தடுப்பு

    ஆரஞ்சு தோல் பொடி முகப்பருவைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் முகப்பருவை உலர்த்தவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முகத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுகிறது. இறந்த செல்களை அகற்றி, கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. 

    வயதாகும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்

    ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஹைப்பர் பிக்மென்டேஷன், கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

    நச்சுத்தன்மை வெளியேற்றம்

    ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இதனால் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

    நீரேற்றம் 

    ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு அவசியம். இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

    பிரகாசம்

    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. இது இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும அமைப்பை மென்மையாக்கவும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதுபோல இதில் உள்ள வைட்டமின் சி, உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.


    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி & இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன

    வீக்கத்தை குறைக்கும்

    ஆரஞ்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகின்றன. 

    புத்துணர்ச்சி அளிக்கும்

    ஆரஞ்சு எப்போதும் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி முகத்துளைகளை இருக்குகிறது.

    ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

    ஆரஞ்சுகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. 

    சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?

    தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது. அல்லது காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் சி கிடைக்கும். சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அல்லது ஆரஞ்சு துண்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல வழியாகும். 

    முகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

    ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம். 

    • பெண்களின் தங்கம் என ஷியா வெண்ணெய் அழைக்கப்படுகிறது.
    • நீச்சல் வீரர்கள் பலர், ஷியா வெண்ணெயை தலையில் தடவிக்கொண்டுதான் தண்ணீரில் இறங்குகின்றனர்!

    ஷியா வெண்ணெய் என அழகு சாதனப் பொருட்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிரிக்காவில் ஏராளமாகக் காணப்படும் ஷியா மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். ஷியா மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் எடுக்கப்பட்டு, அவை நசுக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இந்த வெண்ணெய் எடுக்கப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஷியா வெண்ணெய் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம். கிளியோபாட்ராவின் காலத்தில் இருந்து ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளியோபாட்ரா, தனது அழகின் ரகசியங்களில் ஒன்றாக இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெண்களின் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தோல் மட்டுமின்றி முடி பராமரிப்பிற்கும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஷியா வெண்ணெயில் உள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான பல நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். 

    சருமத்திற்கு தரும் நன்மைகள்

    ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன. ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன. குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன. 


    பல அரசிகள், தங்கள் சரும பராமரிப்பிற்கு ஷியா வெண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!

    முடிக்கு தரும் நன்மைகள்

    ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது. முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர். காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.

    ஆரோக்கிய நன்மைகள்

    ஷியா வெண்ணெய் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க மருத்துவத்தில் தசை வலி மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாத நோய் போன்றவைகளுக்கு நன்மை பயக்கும். வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, தோல் ஒவ்வாமைகளை ஆசுவாசப்படுத்தவும், பூச்சி கடிக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவான தோல் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகிறது. 

    • சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
    • ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். 

    இறந்த செல்களை நீக்கும்...

    தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

    முகப்பரு

    தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். 

    எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது

    தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.

    வெயில் பாதிப்பு

    சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது. 


    தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்

    சருமத்தை ஆற்றும்

    சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.

    வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி

    சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது. 

    விளைவுகள்

    தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

    • எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது அதிகமாக இருக்கும்.
    • முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.

    முகத்தை எப்போதும் பளபளப்பாக, அழகாக காட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைதான் மேக்கப். ஆனால் சிலரின் முகத்தில் பருக்கள், துவாரங்கள் இருக்கும். இவை வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் பலருக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். சில பருக்கள் மறைந்தாலும், தழும்புபோல் மாறி கருமையாக காட்சியளிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துமா? என சந்தேகம் எழும், பயமும் இருக்கும். ஆனால் அந்த பருக்களை மறைக்குமாறும், அதற்கு ஏற்றவாறும், அதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாமலும் மேக்கப் போட முடியும் என்கிறார் அழகுகலை நிபுணர் பிரஷாந்தி.

    முகத்தில் முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ரேசர் வைத்து முகத்திலிருக்கும் சின்ன சின்ன முடிகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு டோனர் பயன்படுத்த வேண்டும். துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கும், துவாரங்களை மறைப்பதற்கும் டோனர் அவசியம். எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவதும் அதிகமாகவே இருக்கும். முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.

    அடுத்ததாக ப்ரைமர் போட வேண்டும். ப்ரைமருக்கு பின் அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப கரெக்டர் பயன்படுத்த வேண்டும். பின்னர் கண்சீலர் போடலாம். இதனைத்தொடர்ந்து ஃபவுண்டேசன் அப்ளை செய்யலாம். ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து பவுடர் போடவேண்டும். பவுடர் போட்ட பிறகு செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும். இது முடிந்தால் மேக்கப்பில் ஒரு பார்ட் ஓவர்.

    தற்போது கண் பகுதிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்கு முதலில் ஐப்ரோவை ஷேப் செய்து, அதனை டார்க்கன் செய்ய வேண்டும். தொடர்ந்து ஐ-ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். ஐ-ஷேடோ நாம் அணிந்திருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பிறகு ஐ-லைனர், காஜல் போட வேண்டும்.

    இறுதியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். ஆடை மற்றும் ஐ-ஷேடோவிற்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். மேலும், லிப் லைனரால் நிச்சயம் அவுட்லைன் வரைந்த பின்னரே லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது. குறிப்பாக, இந்த மேக்கப் போட்டு முடித்த பிறகு, முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×