என் மலர்
நீங்கள் தேடியது "Skin Health"
பலரும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போம். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெரிதாக தெரியாது. சரும பளபளப்புக்கு எப்போதும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுப்பது நல்லப் பலனை தரும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பழங்கள் குறித்து காணலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து புத்துயிர் பெறச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டியே வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன.
பப்பாளி
சருமத்தில் நன்மை பயக்கும் முக்கியப் பழம் பப்பாளி என பலரும் அறிவர். பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி, முகத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்ற உதவுகிறது. இது முகத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சருமத்தை சேதமடையாமல் பாதுகாத்து ஊட்டமளிக்கின்றன.
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பளபளப்பான சருமத்திற்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முக சுருக்கத்தை குறைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கும். சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நச்சு நீக்கியாக செயல்படுவதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழத்தில் சுத்திகரிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ப்ரோமெலைன் நொதி உள்ளது. ப்ரோமெலைன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சரும பளபளப்புக்கு வைட்டமின் சி & ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுங்கள்
மாதுளை
அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டது மாதுளை. இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளையில் பியூனிசிக் அமிலமும் உள்ளது. இது ஒமேகா-5 கொழுப்பு அமிலமாகும். இது சருமத்தின் ஈரப்பத இழப்பைத் தடுக்கிறது. மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது மென்மையான, மிருதுவான சருமத்திற்கு வழிவகுக்கும்.
கிவி
மற்ற பழங்களை விட கிவியில் அதிக வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி உள்ளடக்கம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கிவியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன.
மாம்பழம்
மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் பிரகாசமாக்கவும் உதவுகிறது. மாம்பழத்தில் AHA கள் (ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது.
வெள்ளரிக்காய்
அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் குளிர்ச்சியான பண்புகளையும் கொண்டுள்ளன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது. இது திசுக்களை வலுப்படுத்தவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
- ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்
- சாறு, பொடி, சட்னி என எந்த வடிவத்தில் எடுத்துக்கொண்டாலும் நெல்லிக்காய் நன்மை பயக்கும்.
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். ஔவை நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி அவருக்கு நெல்லிக்கனியை கொடுத்தார். அவ்வளவு மருத்துவக்குணமிக்கதா நெல்லிக்காய் என நாம் வியப்போம். ஆம், நெல்லிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களைவிட நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இயற்கை நச்சு நீக்கி
நெல்லிக்காய் உடலில் நச்சு நீக்க செயல்முறையை ஆதரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. உயிர்சக்தியை மேம்படுத்துகிறது.
முதிர்வை தடுக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தோல் மற்றும் உறுப்புகளின் வயதாகும் தன்மையை தடுக்க முக்கிய பங்காற்றுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

ஜூஸ், பொடி, சட்னி என அனைத்து வடிவத்திலும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்
பசியை கட்டுப்படுத்தும்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நெல்லிக்காய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் எடை குறைக்க விரும்புவர்கள் பலரும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வார்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. கூர்மையான நினைவாற்றலை வளர்க்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
நெல்லிக்காயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, பிக்மெண்டேஷனை குறைக்கின்றன, மேலும் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன.
முடி பராமரிப்பு
பல தலைமுறைகளாக, இந்திய முடி பராமரிப்பில் நெல்லிக்காய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வேர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நரைப்பதைத் தடுத்தல், முடிக்கு பளபளப்பைச் சேர்த்தல் என முடி பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது நெல்லிக்காய். இதுபோல இன்னும் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சாறு, பொடி, நெல்லிக்காய் சட்னி, இல்லை ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுகிறேன் என்றாலும், எந்த வடிவத்தில் எடுத்துகொண்டாலும் பலனளிக்கும்.
- முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
- ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
முகப்பரு
ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன.
திறந்த துளைகள்
மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
பளபளப்பான சருமம்
ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது.
வீக்கம்
அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது.
ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்
வறண்ட சருமம்
வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும்.
சருமத்துளைகள்
ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரிப்பு
மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும்.
- மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது.
- உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால்
மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.
பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பது எப்படி என்று தெரியாமல் பலர் சருமத்தை பளபளக்க வைக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ் மாஸ்க், கிரீம், ஸ்க்ரப், ஃபேஸ் வாஷ் போன்றவை. பளபளப்பான சருமத்தைப் பெற பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள், அவர்களில் சிலர் மட்டுமே தெளிவாக சரியான தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று அறியாதவர்களாக உள்ளனர். அவர்ளுக்கான பயனுள்ள பதிவுதான் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...
Facewash மூலம் முகத்தை கழுவவும்
முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது. அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.

Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்
தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.
TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.
முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...
மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமே அவசியம் என்று சிலர் நம்பினாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தேவையானது தான். ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.
நைட் கிரீம் பயன்படுத்துதல்
நைட் க்ரீம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. மேக்கப்பை நீக்கிவிட்டு, இரவில் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு போகும், எனவே நைட் க்ரீமைப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற நைட் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் அதைத் தடவுவது முக்கியம்.

தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நமது சருமத்தின் தோற்றம் மேம்படும். தண்ணீர் குடிப்பது உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும், இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
- பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.
வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.
1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:
வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:
வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
3. செரிமானத்தை தூண்டும்:
செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.
4. நச்சுக்களை நீக்கும்:
உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.

5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:
வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

7. சரும ஆரோக்கியம் காக்கும்:
பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.

8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:
உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.
- வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மைகளை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், சத்தான, ஆரோக்கியமான அமுதமாக கருதப்படுகிறது.

ஏ.பி.சி. ஜூஸ் தயாரிப்பது எப்படி?
ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஜூசரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனை அப்படியே பருக வேண்டியதுதான்.
நன்மைகள்:
நச்சு நீக்கம்
ஏ.பி.சி. ஜூஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். குறிப்பாக பீட்ரூட், இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவும்.
செரிமானம்
ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும். கேரட், குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏ.பி.சி ஜூஸை தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த ஜூசில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும்.
சரும நலன்
ஏ.பி.சி. ஜூஸில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை தக்கவைக்க உதவி புரியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும திசுக்களை சரி செய்ய உதவும்.
சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும். அத்துடன் இந்த ஜூஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிற பிரச்சினைகளை குறைக்க உதவும்.
உடல் ஆற்றல்
பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும், தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவி புரியும். உடல் செயல்திறனையும் மேம்படுத்தும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கை சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.
இதய ஆரோக்கியம்
ஏ.பி.சி. ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
எடை மேலாண்மை
ஏ.பி.சி. ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் இது சரியான தேர்வாக அமையும். நொறுக்குத்தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து, நீண்ட நேரம் பசி உணர்வு இன்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.
- குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான்.
- ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி குளிர் காலத்தில் குளியலை தவிர்ப்பது நல்லதல்ல. குளிர் காலத்திலும் ஏன் தவறாமல் குளிக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

உடல் சுகாதாரம்
தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெய்யை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
வழக்கமாக குளிக்கும் செயல்முறையை தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும்.
சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவிடும். அத்துடன் சுடு நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை திறக்கவும் வழிவகை செய்யும்.

மன ஆரோக்கியம்
குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவ கால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர் காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும். இதனை எதிர்த்து போராட சூடான குளியல் பயனுள்ளதாக அமையும்.
இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும்.

சரும ஆரோக்கியம்
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் உட்புற வெப்பம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்றி சரும வறட்சி மற்றும் சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் வழக்கத்தை தொடர்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது, குளியல் எண்ணெய்களை உபயோகிப்பது போன்றவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சருமத்தை மென்மையாக்கவும் உதவும். லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதும் குளிர்கால சரும வறட்சியை எதிர்த்து போராட உதவிடும்.
தூக்கம்
வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தசைகளை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியம்.
குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல் போடுவது முக்கியமானது.






