search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர்.
    • பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர்.

    சென்னை :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முன்னாள் பாரதப் பிரதமரும், பாஜக நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று.

    சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.

    பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் நம் தேசத்தின் எதிரிகளைத் தோற்கடித்தவர். நம் நாடு மிகவும் வலுவானது, வளமானது என்பதிலும் பெரும் நம்பிக்கை உடையவர்.

    பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

    பாரதத்தின் மீது கொண்டுள்ள அன்பால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் அரசால் சமமாக நடத்தப்படுவதையும், அனைவருக்கும் அரசின் சேவைகள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், அமரர் வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • பிரதமரான 3 முறையும் நிறைவு காலத்திற்கு முன்பே பதவியை இழந்தார்
    • கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பதவியை இழந்தேன் என்றார் நவாஸ்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

    இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    1999ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

    எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய் அவர்களும் (1999), மோடி அவர்களும் (2015) பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

    தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.

    இவ்வாறு ஷரீப் கூறினார்.

    நவாஸ் ஷரீப்பின் இந்த கருத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நல்ல நோக்கமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    • அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார்.
    • இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

    அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக் சவுத்ரி என்பவர் 2 தொகுதிகளாக எழுதி உள்ளார். 'வாஜ்பாய்-அசென்ட் ஆப் ஹிண்டு ரைட்' என்ற அந்த புத்தகத்தில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    நூலின் சில பகுதிகள் வருமாறு:-

    கடந்த 1960-ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜான் கென்னடியும், ரிச்சர்டு நிக்சனும் போட்டியிட்டனர். அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், அந்த தேர்தல் பிரசாரத்தின் பார்வையாளராக வாஜ்பாய் அமெரிக்கா சென்றார்.

    அவரது முதலாவது வெளிநாட்டு பயணம் அதுவே ஆகும். 1960-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அவர் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார். ரெயில்வே தொழிலாளர்கள் நலனில் வாஜ்பாய்க்கு இருந்த அக்கறை காரணமாக அவர் அழைக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவில் வாஜ்பாய் பெயரை அப்போதைய பிரதமர் நேரு சேர்த்ததும் இந்த பயணத்துக்கு ஒரு காரணம்.

    ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இளம் ஐ.எப்.எஸ். அதிகாரி மகாராஜாகிருஷ்ணா ரஸ்கோத்ராவுடன் வாஜ்பாய் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். நியூயார்க்கில் இருந்த பெரும்பாலான நேரங்களில் ரஸ்கோத்ராவுடன் இருந்தார்.

    அப்போது இருவரும் 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். ஐ.நா. தலைமையகத்தில் இல்லாத நேரங்களில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக்கு எழுதி அனுப்புவதும், நியூயார்க்கை சுற்றி பார்ப்பதுமாக வாஜ்பாய் நேரத்தை பிரித்துக்கொண்டார்.

    அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார். ஆனால் அவையெல்லாம் வாஜ்பாய்க்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

    சில நேரங்களில், இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார். ''அங்கு ஆடை அவிழ்ப்பு நடக்காது, நவீன இசையின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாம்'' என்று ரஸ்கோத்ரா உறுதி அளித்தார்.

    அதன்பிறகு, வாஜ்பாய் ஆர்வமாக இரவு விடுதிகளுக்கு சென்றார்.

    இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இப்படத்தில் வாஜ்பாய் கதாப்பாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடிக்கவுள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    பங்கஜ் திரிபாதி

    பங்கஜ் திரிபாதி

     

    இந்தப் படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியதாவது, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார்.

    இப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
    • 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்தியாவில், பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜி.எஸ்.டி.க்கான விதை தூவப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு, அப்போது மேற்கு வங்காள நிதி மந்திரியாக இருந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி, வரி சீர்திருத்தத்தை பரிந்துரைத்ததோடு, ஜி.எஸ்.டி.யின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்‌ கூறியது.

    மறைமுக வரிக்கு மாற்றாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவும் பரிந்துரை செய்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 2006-07 பட்ஜெட்டில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2008-ம் ஆண்டு ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய அதிகாரமளிக்கும் வகையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக ஜி.எஸ்.டி. விவாத அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் அடிப்படை கட்டமைப்புகளை அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. ஜி.எஸ்.டி.க்கு அடித்தளம் இடும் வகையில் வணிக வரிகளை கணினி மயமாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    எனினும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தேதி 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி என மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கு 115-வது சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற நிலைக்குழு ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கீழவையில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவும் காலாவதியானது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 122-வது சட்ட திருத்த மசோதாவாக பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற நிலைக்குழு மீண்டும் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற கீழவை ஒப்புதல் கொடுத்ததோடு, மேலவைக்கும் அனுப்பப்பட்டது.

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மேலவையில் இந்த மசோதா பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து கீழவை மற்றும் மேலவையின் உறுப்பினர்கள் அடங்கிய இணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலவையில் ஜி.எஸ்.டி. மசோதா பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. அதே மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டமும் நடந்தது.

    நவம்பர் மாதம் 4 வரி விகிதங்கள் அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என அமல்படுத்தப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. மேலும் வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    பிப்ரவரி மாதம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கான வரைவினை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்தது. மார்ச் மாதம் மத்திய மந்திரி சபை ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மே மாதம், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் 5 முதல் 28 சதவீத வரி விகித வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.

    ஜூன் மாதம், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் மாநில ஜி.எஸ்.டி. சட்டத்தை இயற்றின. அதே மாதம் 30-ந்தேதி (ஜூன்) நள்ளிரவு முதல், ஜி.எஸ்.டி. வரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூலை 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது.

    • வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க.கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ஜ.க.திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    இதில் பா.ஜ.க.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளர் மகேந்திரன், பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம்மணி, பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி,மற்றும் நிர்வாகிகளான பொன்னுசாமி, சுப்பு,சுப்பிரமணியம், ராமு, துரை உள்பட கலந்து கொண்டனர்.

    தமிழக பாஜக சார்பில் நாளை நடக்க உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவேந்தல் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி எம்.பி, திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். #Vajpayee #BJP
    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் கோ.க மணி, விசிக தலைவர் தொல்.திருமாவளனன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முஸ்லிம் லிக் கட்சி எம்.எல்.ஏ அபு பக்கர், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சன்முகம், இந்திய கம்யூ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மா. கம்யூ. மத்திய குழு உறுப்பினர் சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் வித்யாதரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் இன்று கரைக்கப்படுகிறது. #RIPVajpayee
    சென்னை :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியானது கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஸ்தியை பெற்றுக்கொண்டார்.

    தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் வாஜ்பாய் அஸ்தி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில் அதாவது புனித ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட இருக்கிறது. இதன்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தி கரைக்கப்படும். முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் முக்கூடலிலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரம் கடலில் கரைக்கப்படும்

    மத்திய கயிறு வாரியத்தின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தியானது பவானி முக்கூடலில் கரைக்கப்படும். கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. #RIPVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்தை அரசியல் லாபத்திற்காக மோடியும், அமித் ஷாவும் பயன்படுத்துவதாக வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார். #RIPVajpayee
    புதுடெல்லி :

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி காலமானார்.

    அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.  அவரின் இறுதி ஊர்வலத்தின் போது அமித் ஷா மற்றும் மோடி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

    இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.  இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை பிரதமர் நரேந்திர மோடியும்,  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக அவரின் மருமகள் கருணா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை நினைவில் வைத்துக்கொண்டே அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

    அவருக்காக 5 கி.மீ நடந்து சென்றவர்கள் அவரின் கொள்கைகளுக்காக 2 அடிகள் கூட எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும். அனைவரது உண்மை முகத்தை அறிந்து கொண்டுள்ள மக்கள் நடக்க இருக்கும் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

    வாஜ்பாயின் பெயரை தவறாக பன்படுத்துவது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சட்டீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் வாஜ்பாய் இறந்த பிறகு அவரின் பெயரில் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். அவர் மறைவிற்கு முன்பே ஏன் அதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். #RIPVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpayee
    ராய்ப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது  உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. 

    இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
    டெல்லி:

    பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



    பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
    ×