search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி புகார்"

    • ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.
    • துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக்கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.

    பின்னர் ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

    இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடந்தது.

    இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
    • ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

    அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி.
    • தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    நடிகை கவுதமி, தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்ததாக போலீசார் புகார் செய்திருந்தார்.

    அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்துவிடடு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்.
    • மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது.

    மதுரை

    மதுரையை தலைமையிட மாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரி வித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

    ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர்.

    அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி , கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொரு ளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப் பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    நியோமேக்ஸ் நிறு வனத்தின் இயக்குனர்க ளான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து , சகாயராஜா பத்மநாபன், மலைச்சாமி ஆகிய 6 பேரையும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள்

    புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தி ருந்தனர். அதன்படி மதுரை, விருதுநகரில் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புகார் அளித்தனர். இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. நியோமேக்சில் முதலீடு செய்து பணத்தை இழந்த மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் புகார் மனு அளிக்க குவிந்தனர்.

    • நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க பணம் கேட்டார்.
    • விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தீபா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க போவதாகவும் அதற்கு பணம் தருமாறும், அதனை உடனே தந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

    இதனை நம்பி நானும், எனது தம்பி பிரவீனும் அவர்களுக்கு ரூ.90 லட்சம் கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்று கொண்ட பிறகு நீண்ட நாட்களாகியும் திருப்பி தரவில்லை.

    இதுகுறித்து கேட்டபோது வெள்ளகிணறில் நிவேதிதா தந்தைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், அதனை விற்று பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் இதுவரை தரவில்லை. எனவே விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் மீது, ராமநாதபுரத்தை சேர்ந்த கேட்டரிங் நிறுவன உரிமையாளர் ஒருவர் வீட்டில் அமெரிக்க டாலர், மற்றும் நகைகள் திருடியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.

    இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.

    வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

    இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

    மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்

    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.

    இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.

    ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.

    இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.

    இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.

    மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

    ×