என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud Complaints"

    • குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
    • பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயனின் மகள் வீணா. இவர் எக்சா லஜிக் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் கொச்சின் மினரல் ரூட்டில் லிமிடெட் என்ற தனியார் சுரங்க நிறுவனத்தில் வீணா லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.

    மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக தான் எக்சாலஜிக் மற்றும் அதன் துணை நிறுவனமான எம்பவர் இந்தியா பணம் பெற்றதாக வீணா தரப்பில் கூறப்பட்டது.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் வீணா விஜயன் உள்பட 27 பேர் மீது லஞ்ச குற்றம் சாட்டி அவர்கள் மீது கொச்சி பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.

    கோர்ட்டு இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பவார்கள்.

    160 பக்க குற்றப்பத்திரிகையில் வீணா மற்றும் அவரது நிறுவனம் மீது நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இல்லாத செலவு களை அதிகப்படுத்தி போலி பில்களை உருவாக்குவதன் மூலம் மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது

    இந்த பிரிவின் கீழ் குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இந்த புகார் சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை எட்டி உள்ளது.

    மகள் மீது லஞ்சக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பினராய் விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

    கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எம்.பி. கூறுகையில், முதல்-மந்திரியோ அவரது மகளோ ஆதாரங்களை தவிர்க்க முடியாது. பணம் வாங்கியவர்கள் இறுதியில் விளைவுகளை சந்திப்பார்கள். இது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க கூடிய குற்றமாகும்.

    இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடுவதற்காக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளனர். இந்த விஷயத்தில் பினராய் விஜயன், முதல்-மந்திரி பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றார்.

    மதுரை மாநாட்டிலேயே கட்சி இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். சி.பி.எம். கட்சி கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதை விடுத்து பினராய் விஜயனை காப்பாற்றினால், அது சி.பி.எம்.மின் வீழ்ச்சியின் தொடக்கத்தை குறிக்கும் என்றார்.

    கேரள சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான சதீசன் கூறுகையில், இது மிகவும் தீவிரமான விஷயம். குற்றப்பத்திரிகையில் எந்த சேவைகளையும் வழங்காமல் வீணா பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராய் விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

    பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறும் போது, பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே பினராய் விஜயன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும் என்றார்.

    • புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். டிராவல்ஸ் உரிமையாளர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை சென்னை திருவொற்றியூரை சேர்ந்த லட்சுமிபதி(62) மற்றும் அவரது மனைவி நிர்மலா(52) ஆகியோர் சந்தித்து, நிர்மலா சாய்பாபாவின் மறுஅவதாரம் எனவும், தாங்கள் கூறும் நிறுவனம் மற்றும் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் 3 மடங்கு செல்வம் பெருகும் என தெரிவித்தனர்.

    இதனை நம்பிய சந்திரசேகர், லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை சிங்காநல்லூர் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

    3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன், அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கேட்டு பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே சந்திரசேகருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அவர்கள் இது போல் பணத்தை பலரிடம் பெற்று மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கோவை மாநகர குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை தம்பதிகளான லட்சுமிபதி மற்றும் நிர்மலா ஆகியோர் பாபா பேரை சொல்லி ஏமாற்றியதாக அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெற்றோரிடம் ரூ.3 லட்சமும், திருப்பூரை சேர்ந்த சத்திய நாராயணனிடம் ரூ.4 லட்சம், திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தை சேர்ந்த தர்மலிங்கத்திடம் ரூ.2 லட்சம், கோவை ஆர்.எஸ்.புரம் முத்து நாகரத்தினம் என்பவரிடம் ரூ.1.30 லட்சம், கோவை வெள்ளலூரை சேரந்த சூர்யா என்பவரிடம் ரூ.4.15 லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல இந்த சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×