search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating complaint"

    • காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.

    இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.

    வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

    இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

    மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    சென்னை வடபழனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரூ.20 லட்சம் ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாசன். இவர் வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் புகார் மனு கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    நான் மற்றும் எனது நண்பர்கள் ஜெருசலேம் சுற்றுலா செல்வதற்காக வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணுகினோம்.

    அப்போது விமான டிக்கெட், விசா தங்குமிடம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 10ஆயிரம் கட்டணம் என்றனர். ஜனவரி மாதம் 7-ந் தேதி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தனர்.

    இதையடுத்து 5 தவணையாக ரூ. 20 லட்சத்து 50ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பினேன். ஆனால் இதுவரை சுற்றுலா செல்ல எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

    மேலும் பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை வளசரவாக்கத்தில் போலீஸ்காரர் மீது ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக டி.வி.நடிகை கீதா புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை கீதா.

    கடந்த மாதம் தனது வீட்டின் முன்பு உள்ள மழை நீர் கால்வாயில் மர்ம நபர்கள் போட்டு சென்ற பச்சிளம் குழந்தையை காப்பாற்றியவர்.

    இந்த நிலையில் டி.வி. நடிகை மீது எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது மகள் ஷாலினியுடன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தலைமை காவலர் மாரிமுத்து அறிமுகமானார்.

    என்னிடம் நெருங்கி பழகிய மாரிமுத்து சிறுக சிறுக என்னிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். கடந்த 6 மாதங்களாக பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்நிலையில் அவரை நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் பார்த்து பணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஜி.ஆர். நகர் போலீசார் பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவலர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரிமுத்து விருகம்பாக்கம், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்ததும் பல்வேறு புகாரில் சிக்கிய அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ×