search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1000 பவுன் நகை-நில மோசடி புகார்: காரைக்குடி அடகு கடை அதிபரிடம் போலீசார் தீவிர விசாரணை
    X

    1000 பவுன் நகை-நில மோசடி புகார்: காரைக்குடி அடகு கடை அதிபரிடம் போலீசார் தீவிர விசாரணை

    • காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.

    இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.

    வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

    இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

    மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×