search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.சிவக்குமார்"

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு வந்தார்.

    அவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவிடம் முதல்-மந்திரி விவகாரம் குறித்து பேசி ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. அதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

    அதையடுத்து கே.சி.வேணுகோபால் ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் தனியாக சந்தித்து கர்நாடக முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பேசினார். இதற்கிடையே நேற்று இரவு சித்தராமையா திடீரென கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல் விறுவிறுவென காரில் சென்று அவர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி தேர்வில் ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.

    ×