search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் கோவில்"

    • உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
    • இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    • கொடை விழாவில் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது.
    • நாளை மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ள மங்களம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. காலையில் தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் குற்றாலத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மங்களம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவில் வில்லிசை, மாலை சாத்துதல், நள்ளிரவில் நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் நடுசாம பூஜை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை நேமிதம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், பொங்கலிடுதல், மதியம் மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்ற னர். விழாவிற்கான ஏற்பாடு களை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி, 12-வது வார்டுக்குட்பட்ட ஒழுகினசேரி பழையாறு சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி.பள்ளி அருகில் அடைப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சரி செய்வது மற்றும் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சதீஸ், சுனில், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், துணை இளைஞரணி சரவணன், வட்ட செயலாளர் சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பூஜையில் பங்கேற்று வருகின்றனர்
    • கொள்ளை போன பித்தளை பாத்திரங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள காற்றாடி மூட்டிலிருந்து முட்டம் செல்லும் சாலையில் புகழ்பெற்ற செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு கள் நடைபெறும். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.

    சம்பவத்தன்று காலை வழிபாடுகள் முடிந்ததும் பக்தர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதன் பிறகு பூசாரி கணேஷ், பூஜைக்கான பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் போன்றவற்றை கழுவுவ தற்காக ஓரு இடத்தில் வைத்துள்ளார்.

    பின்னர் கோவிலை பூட்டிச் சென்ற அவர், மாலையில் கோவிலுக்கு வந்தார். அப்போது தான் வைத்துச் சென்ற பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை போன பித்தளை பாத்திரங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து ஊர் தலைவர் வேணுகோபாலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், கொள்ளை சம்பவம் குறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கோவிலுக்குள் புகுந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை கொள்ளை யடித்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபத்தின் மேற்கு பகுதியில் கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் மேற்கூரை மற்றும் கதவுகள் இன்றி திறந்து வெளியில் பீடங்களுடன் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாதவபுரத்தை சேர்ந்த போத்திராஜா (வயது 43) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு பூஜைகள் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது பீடத்தில் இருந்த பித்தளை கோ டாரி மற்றும் அரிவாள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போத்திராஜா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்]தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் சந்தே கத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் நெல்லை மாவட்டம் பாளை யங்கோட்டை திருமலை கொழுந்து அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்ல துரை (30) என்பதும், கன்னியாகுமரி கடற்கரை யில் உள்ள கடல் காத்தாள் படை பத்திரகாளியம்மன் கோவிலில் திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    அதன்பிறகு அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட் டார்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    அதேபோல் படவேடு ரேணுகாம்பாள் கோவில், கணியம்பாடி கடம்ப வனவாசவி அம்மன், சாத்துமதுரை துர்க்கையம்மன், திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் பொங்கலிட்டு, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    • அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.‘

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இன்று ஆடி 3-வது வெள்ளிக்கிக்கிழமையை யொட்டி மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அதிகளவில் திரண்டு வழிபாடு செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை யிலேயே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை பக்தர்கள் தரினசம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சியளித்தார். சாதம், கூழ், பால், மோர் ஆகியவற்றை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கினர்.

    மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு பூஜை கள் தீபாராதனை நடந்தது.

    அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.

    • இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
    • இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

    சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாகும். இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.

    இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

    சேலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.

    இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை எடுத்து கூறுகின்றன.

    சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள்.

    வலது மேற் கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.

    அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

    ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. வாழ்வின் அடித்தளத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை உயர்த்துவதற்காக அன்னை உயரமான கருவறையில் அமர இருக்கிறார். அன்னையின் ஆலயம் வளர வளர சேலம் மாநகர் யாரும் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல் கட்டுமானப் பணி

    சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.

    சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

    ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் 2 வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

    கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும். மேலும் கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன.

    தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

    கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு, தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர்.

    கோவில் திருப்பணியில் இடம் பிடித்த கற்கள்

    கோவில்கள் இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோவில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோவில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக மட்டுமில்லாமல், வரலாறு, சமயம், பரிணாமம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவைகளில் நீங்கா இடம் பிடிக்கிறது.

    2017-ம் ஆண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் தவிர்த்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சேலம் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவிலில் புதியதாக விமானத்துடன் கூடிய கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் (கருங்கல் பணி) கட்டுதல், கருங்கற்களிலான மகா மண்டபம் கட்டுதல், சுற்றுப்பிரகாரம் மண்டபம் கட்டுதல், எடுத்துக்காட்டு மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள்யாவும் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துரு அறிக்கையின் அடிப்படையிலும் மண்டல, மாநில மற்றும் உயர்நீதிமன்ற குழுவின் ஒப்புதல்களின் அடிப்படையிலும் ஆணையரின் நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள கோவில்கள் வருமாறு:

    500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில், 7 கி.மீட்டர் தொலைவில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், 5 மீட்டர் தூரத்தில், குமரகுரு சுப்ரமணியசாமி கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும்.

    ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன் கோவில்

    சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் கோட்டை மாரியம்மன் கோவில் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு கட்டுமானமும் பார்த்து, பார்த்து மிகவும் கவனமாக நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மைய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் பிரமாண்டமாக ெஜாலிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) அன்னதான மண்டபத்தில் உள்ளது. பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் வசதி உள்ளது. குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகாமையில் ஈரடுக்கு பஸ் நிலையம் உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு வருகின்றனர்.

    இதோ ஒரு தகவல்

    தமிழக முதல்-அமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இத்திருக்கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அன்னதான கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 -01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100 முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750 என்ற வீதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத் தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள், செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சேலம் மாநகர் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

    கோட்டை மாரியம்மன் திருத்தல சிறப்பு

    சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.

    இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

    இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

    சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

    ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

    ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

    ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

    ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

    புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

    22 நாட்கள் கோலாகல விழா

    மாரி வளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஆடிப்பெருந்திரு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆடி மாதம் 22 நாட்கள் சிறப்புற கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18-ந் தேதியை அடிப்படையாக கொண்டே முக்கிய விழாக்கள் நிர்ணயிக்கப்ப டுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு முந்தைய செவ்வாய்க்கி ழமைகளில் முதல் செவ்வாய் பூச்சாட்டுதலும், 2-ம் செவ்வாய் கம்பம் நடுதலும் நடைபெறுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை சக்தி கரகமும், அதைத்தொடந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் விழாக்களும் நடைபெறும். கடைசி செவ்வாய்க்கிழமை மகா அபிசேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. சேலம் மாநகரில் எட்டுப்பேட்டைகளிலும் உள்ள மாரியம்மன் கோயில்களிலும் ஆடிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    பூப் போட்டு பார்த்தல்

    இத்திருக்கோயில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா? மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? தந்தைக்கு வந்திருக்கும் நோய் தீருமா? மகனுக்கு வேலை கிடைக்குமா? போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களைப் பொட்டலங்களாகக் கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்த்தால், நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு செல்வர், இதற்குப் பூப்போட்டு பார்த்தல் என்று பெயர். பக்தர்கள் பூப்போட்டு பார்த்து தம் பிரச்சனைகளைத் தீர்த்து செல்வதுண்டு. நோயால் பீடித்தவர்களும், துயர் கொண்டவர்களும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.

    வேண்டுதலும், நேர்த்திக்கடனும்

    மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள், ஐதீகங்கள் ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்கின்றோம். அது ஒன்றின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் தோன்றியவையாகும் என்பார்கள் அறிஞர்கள். பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அதனால் தான் தாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்களுக்கு அம்மனின் இசைவு பெற்றே செயல்படுகின்றனர்.

    கண்ணடக்கம் சாத்துதல்

    கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை பெரிய மாரியம்மனிடம், தமது கண்ணிற்கு ஏற்பட்ட நோயை நீக்குமாறு வேண்டிக்கொள்வர். அதன் காரணமாக நோய் நீங்கி நலமடைவர். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மாரியம்மனுக்கு பொன்னாலோ (அ) வெள்ளியாலோ (அ) தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள். சில நேரங்களில் திருக்கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.

    கம்பம் நடுதல்

    ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.

    இவ்விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும், மழை வளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாக பெண்கள் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரியம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.

    • போலீஸ் நிலையத்தில் புகார்
    • தடயங்களை சேகரித்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் ஈடியா தோப்பு பெரிய ஏரிகரை அருகே மாணிக்காத்தம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து, கிராம பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம், 2 பித்தளை பானைகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.
    • இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர். இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,'துர்க்கம்மா' என்றும் அழைக்கிறார்கள். பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெற இந்த ஆலயத்தில் 'யட்சகானம்'என்ற வழிபாட்டை நடத்துகிறார்கள்.

    பழங்காலத்தில் இந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தை போக்குவதற்காக ஜாபாலி என்ற முனிவர்,தவத்தில் ஈடுபட்டார்.அந்த முனிவரின் தவம் சிறப்பானது என்பதால்,இப்பகுதியில் நிலவிய பஞ்சத்தைப் போக்க, தேவலோக தலைவனான இந்திரன் முடிவு செய்தான். அதற்காக தேவலோகத்தில் இருந்து காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று, வளம் சேர்க்கும்படி இந்திரன் அனுப்பி வைத்தான்.ஆனால் கர்மவினைகளால் பல பாவங்களைச் செய்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல நந்தினி பசு தயங்கியது.

    அந்த பசு,பார்வதியை சரணடைந்து தான் பூலோகம் செல்ல விரும்பவில்லை என்றுகூறியது. அப்போது பார்வதி தேவி, "நீ பசுவாகஅங்கே செல்ல வேண்டாம். அனைத்து பாவங்களையும் நீக்கும் வல்லமைபடைத்த நதியாக மாறி பூலோகம் செல். அத்துடன் உன்னுடைய நீர்த் தன்மையால் அந்தப் பகுதியை பசுமையாக்கு" என்று உத்தரவிட்டார்.அதன்படி 'நேத்திராவதி' என்ற பெயரில் இங்கு நந்தினி பசு, நதியாக ஓடத் தொடங்கியது.

    அந்த சமயத்தில் அருணாசுரன் என்றஅரக்கன், பூலோகத்தில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்துஉயிர்களைக் காக்கும் படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதிதேவி மோகினியாக வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன்,அவளைப் பின் தொடர்ந்தான்.நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்னால், ஒளிவது போல் மோகினி பாவனைசெய்தாள். அரக்கன் அவளைப் பிடிக்க முயன்றான். அப்போது மோகினியாக இருந்த பார்வதிதேவி, வண்டாக வடிவெடுத்து,அவன் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொன்றார்.

    உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.உக்கிரம் தணிந்த அன்னை,ஆற்றின் நடுவில் 'துர்க்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோவில் கொண்டாள். இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.அவருக்கு அம்மன் வடிவில் அலங்காரம் செய்கிறார்கள்.

    நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால்'கடில்' எனப்பட்டது. அதுவே தற்போது'கட்டீல்' என்று அழைக்கப்படுகிறது.கோவிலின் பின்பகுதியில் நேத்திராவதி ஆறு இரண்டாக பிரிந்து கோவிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் இருக்கும் காரணத்தால், இந்த ஆலயத்தின் கருவறை எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இந்த ஆலயத்தில் தீர்த்தம்,வளையல், மல்லிகை,மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை நீங்க, இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில், உடுப்பிசங்கரபுரம் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.திருமண வரம், குழந்தைப்பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.இவ்வாலயத்தில் மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாகதேவதை, பிரம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    மங்களூருவில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் கட்டீல் பகுதிஉள்ளது.

    • புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது.
    • புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-

    பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.

    அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.

    என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது. பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.

    கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான்.

    அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

    புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.

    புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

    மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம்.

    அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.

    இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வழிபாடு செய்வார்கள். ஆடி மாதம் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் கர்ப்பமாக உள்ளபெண்கள் ஆடி மாதம் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பிரசவத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    ஆடி மாதம் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நம் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    குழந்தை வரம் கிடைக்கும்

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

    செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

    • இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
    • ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    தேர்த்திருவிழா மகிமை

    பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.

    அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

    அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.

    அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.

    தலவிருட்சம் வேப்பமரம்

    மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.

    பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.

    இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

    தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

    சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

    சமயபுரம்,

    மண்ணச்சநல்லூர் வட்டம்,

    திருச்சி மாவட்டம் - 621112.

    தொலைபேசி எண்

    0431- 2670460

    ×