search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்
    X

    பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

    • பெண்களின் சபரிமலை என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

    கேரளாவில் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும், பெண்களின் சபரிமலை எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் தேவி சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் அருள்பாலிக்கிறார்கள். சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் விரதம் இருந்து புண்ணிய சுமையாக இருமுடி கட்டி வந்து சக்குளத்துகாவு பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    பொங்கலிடும் பெண்கள்

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது போல் இந்த கோவிலுக்கு பெண்கள் வருகிறார்கள். அதே போல சபரிமலைக்கு செல்லும் வழியில் அய்யப்ப பக்தர்களும் சக்குளத்துக்காவு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று அம்மனின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் வைத்து பக்தர்கள் அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும் இரு புறங்களிலும் திரண்டு புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.

    மிகவும் பிரபலமானது

    கோவில் முன்புறம் வைக்கப்படும் பண்டார அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த பிறகு நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை அன்று இங்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு பாத பூஜை

    மேலும் இங்கு நடைபெறும் பெண்களுக்கான பாதபூஜையும் (நாரி பூஜை) மிக சிறப்பு வாய்ந்தது. அதாவது பெண்களை பீடத்தில் அமரச் செய்து அம்மனாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். 2022-ம் ஆண்டின் நாரி பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சகோதரி கே.ஆர்.கவுரி அம்மாள், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டுகளில் பாத பூஜை நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கலச அபிஷேகம்

    டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும் வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலச பூஜை ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அன்றைய தினத்தில் தங்கத் தேரில் திருவாபரணங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    வெள்ளிக்கிழமை விசேஷம்

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். வெள்ளிக்கிழமை அன்று பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப் பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ததும் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் தீர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் மது குடிப்பவர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, அம்மனின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பிறகு மது குடிப்பவர்கள் குடியை நிறுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது. மேலும் சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கிறதாம். இங்கு பார்க்கப்படும் ஜோதிட பிரசன்னமும் புகழ்பெற்றது.

    சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேரடியாக கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிட மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இது கேரளாவில் முக்கிய ஊர்கள் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, பெங்களூருவிலும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டம் சின்னமானூரிலும் இந்த மக்கள் சேவை மையம் அமைந்துள்ளது.

    Next Story
    ×