search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2023 Rewind"

    • சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது.
    • சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    பருவம் தவறி பெய்த மழை

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிப்ரவரி 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காவிரிடெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர் சேதமடைந்தன.

    பிப்.5-ல் சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். மறுநாள் தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது.

    பிளஸ்-2 மாணவியின் வரலாற்று சாதனை

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே.8-ல் வெளியானது. இதில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

     திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு-600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். மே.11-ந்தேதி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று தங்கப் பேனா வழங்கினார்.

    அமைச்சரவை மாற்றம்

    பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் (மே.9) இருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவை மே.11-ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு துறை மாற்றப்பட்டார்.

    மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா புதிதாக பதவி ஏற்றார்.

    விச சாராயத்துக்கு 22 பேர் பலி

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மே.14-ல் விச சாராயம் குடித்த 10 பேர் பலியாகினர். அடுத்த 2 நாட்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. விச சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய 7 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கமும், சாராய வியாபாரி அமரன் கைதும் செய்யப்பட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மே.17-ல் விழுப்புரம் மாவட்டத்தில் விச சாராயம் சாப்பிட்ட 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டது.

    தக்காளி, தங்கம் விலை உயர்வு

    இந்த ஆண்டில் அடிப்படை காய்கறியான தக்காளியும், மக்களின் பேராதரவு பெற்ற ஆபரணமான தங்கமும் வழக்கம்போல விலையேற்றத்துடன் காணப்பட்டு, மக்களை ஏக்கம் கொள்ளச் செய்தன. குறிப்பாக தக்காளி விலை ஜூன், ஜூலை மாதத்தில் கிலோ ரூ.200 என்ற அளவில் உச்சம் தொட்டு மக்களை வாட்டி வதைத்தது. இதனால் தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்ய ஆரம்பித்தது. செப்டம்பரில் இருந்து தக்காளி விலை சரிந்து காணப்பட்டது.

    விலை உச்சத்தில் இருந்தபோது கிலோ ரூ.20-க்கு விற்ற வியாபாரி ஒரு டீ குடித்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள். அதேபோல சென்னை தம்பதி ஒன்று, கர்நாடகாவில் இருந்து வந்த தக்காளிகளை கடத்தி விற்பனை செய்து லாபம் பார்த்ததாக கைதான சம்பவமும் அரங்கேறியது.

    தங்கம் விலை ஆண்டின் தொடக்கத்தில் 44 ஆயிரத்திற்கு கீழ் இருந்தது. பின்னர் அவ்வப்போது விலையேற்ற இரக்கமாக இருந்தது. அக்டோபரில் இஸ்ரேல் போர் மூண்ட பின்பு தங்கம் விலை சரசரவென்று உயர்ந்து 46 ஆயிரத்தை எட்டிப்பிடித்தது. உச்சபட்சமாக 47 ஆயிரத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு

    புதிய ரக கோதுமை மற்றும் நெல் ரகங்களை அறிமுக செய்த இந்தியாவில் உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற செய்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுவாமி நாதன் (வயது 98) செப்.28-ல் மரணம் அடைந்தார். தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் (செப்.2) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சனாதனத்தை ஒழிப்பது குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. அவரது தலைக்கு அயோத்தி சாமியார் ரூ.10 கோடி பரிசு அறிவித்து அவரது உருவப்படததை கத்தியால் கிழித்து போராட்டம் நடத்தினார். 5-ந்தேதி தி.மு.க.வினர் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்தது

    செப்.25ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பின்னர் அ.தி.மு.க. பாஜனதா கூட்டணி முறிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    பங்காரு அடிகளார் மரணம்

    மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அக்.19-ல் மரணம் அடைந்தார். மறுநாள் அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்ற மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார்.

    கவர்னர்களுக்கு கண்டனம்

    பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற கோர்ட்டுக்கு வரும் நிலையை உருவாக்குவதா என்று கவர்னர்களுக்கு (நவ.6) சுப்ரீம் கோர்ட்டு கண்டனம். தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

    இதேபோல் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள அதேசமயம் 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நவ.16-ல் திருப்பி அனுப்பினார். நவ 18-ல் தமிழக சட்டசபையில் அந்த 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்டு உடனடியாக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மறுநாளே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க தமிழக கவர்னர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வழக்கு நவ.20ல் விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன், 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என கவர்னருக்கு நீதிபதி சரமாரி கேள்விகேட்டது.

    சங்கரய்யா மறைந்தார்

    முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் (நவ.15) மரணம் அடைந்தார். மறுநாள் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடந்தது.

    சுதந்திர போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 4 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

    1964-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவான போது அதில் முக்கிய பங்காற்றியவர். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆலய நுழைவு போராட்டங்களில் முக்கிய தலைவராக பங்கு பெற்றவர்.

    சங்கரய்யாவுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது. அந்த விருதுத்தொகை ரூ.10 லட்சத்தையும் கொரோனா நிதியாக தமிழக அரசுக்கே அவர் திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேமலதா பொதுசெயலாளர் ஆனார்

    விஜயகாந்த் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. பொது செயலாளராக பிரேமலதா (டிச.14) தேர்வு செய்யப்பட்டார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    இவர் இவ்வளவு தொகைக்கு தகுதி ஆனவரா என்பது குறித்து கருத்து சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்பது போல அவரது பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையில் தொடர்ச்சிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது.

    இவர் தலைமையிலான முதலில் டெஸ்ட் சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் எடுத்தது. அடுத்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.13.2 கோடியும், இந்திய அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் கடைசி 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் தொடர் சமனில் முடிந்தது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டினர்.

    இதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

     

    இதமட்டுமல்லாமல் தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் 10 விக்கெட் எடுப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு சிட்னியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ஆலன் பார்டர் 11 விக்கெட் எடுத்திருந்தார். கம்மின்ஸ் இதுவரை 252 விக்கெட் (57 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். டெஸ்டில் 250-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார்.

    இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், '2023-ம்ஆண்டு எங்களுக்கு நம்ப முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. நிறைய கிரிக்கெட்.... நிறைய வெற்றி (உலகக் கோப்பை உள்பட). திரும்பி பார்க்கும் போது, 2023 சிறப்பு வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தியா கூட்டணியின் நோக்கம்.
    • பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தக் கூட்டணியை உருவாக்கின.

    பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தியா கூட்டணியை உருவாக்கின. வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தக் கூட்டணியின் நோக்கம்.

    இந்த ஆண்டில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • டிசம்பர் 13ல் பாராளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் பெரும் சர்ச்சையானது.
    • வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர்.

    பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 இளைஞர்கள் வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


    புதிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து வரலாறு காணாத அளவிற்கு 140க்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    • 21-ம் நூற்றாண்டில் தமிழகம் டிசம்பர் மாதம் பல பேரழிவுகளை கண்டுள்ளது.
    • 2004 சுனாமி, 2015 மழை வெள்ளம், வர்தா புயல் என இன்னல்களை சந்தித்துள்ளது.

    தமிழகத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் சற்று ஆகாது என்றே கூறலாம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் இயற்கை சீற்றங்களை டிசம்பர் மாதத்தில்தான் எதிர்கொண்டுள்ளது.

    2004-ம் ஆண்டு வங்கக் கடலில் சுனாமி ஏற்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல மாதங்கள் பிடித்தன.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் ஒருபோதும் மறக்காது. சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அதேவேளையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான வெள்ளம் திறந்து விடப்பட்டது.

    ஏற்கனவே மழை வெள்ளம் தேங்கிய நிலையில், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து அடையாறு கரையோரம் உள்ள பகுதியை சூழ்ந்தது. மேலும், அதுவரை தண்ணீரை கண்டிராக சென்னையில் பெரும்பாலான மையப்பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் உயிரிழந்த நிலையில், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

    2016-ல் வர்தா புயல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சுழன்று அடித்தது. இதில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும் ஆயிரக்காணக்கான மரங்கள் வேரோடு சரிந்தது போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது.

    சுமார் 8 வருடங்கள் கழித்து இந்த வருடம் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் மீண்டும் ஒருமுறை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தன. இந்த முறை ஏரியில் இருந்து சீரான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடானாது. சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் பயனளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

    மழை மற்றும் காற்று காரணமாக எண்ணூர் துறைமுக முகத்துவாரத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி உள்ள கடற்பகுதி எண்ணெப் படலமாக மாறியது. பின்னர் கடும் போராட்டத்திற்குப்பின் எண்ணெய் அகற்றப்பட்டது.

    மிக்சாங் புயலால் சென்னை மக்கள் அடைந்த சோகம் அடங்குவதற்குள் 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 150 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்தது. மேக வெடிப்பு இல்லை, புயல் இல்லை, காற்றழுத்த தாழ்வு இல்லை, கீழடுக்க சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இவ்வளவு மழை எப்படி பெய்தது என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.


    இந்த கனமழை காரணமாக இதுவரை தண்ணீர் தேங்காத கூடங்குளம் போன்ற வறண்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டால், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம்வரை வெள்ளத்தில் மிதந்தது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர்- சென்னை ரெயில் சுமார் ஆயிரம் பயணிகளுடன் சிக்கியது. திருச்செந்தூர்- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருநெல்வேலி பாதைகள் முற்றிலும் சேதடைந்தன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியது. ஏரி, குளம் என அனைத்தும் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இரண்டு வாரங்களாக பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் வேதனையடைந்தனர்.

    • ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
    • இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.

    ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.


    இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

    • சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம்.
    • முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண் ஆயிரம் ரூபாய் பெற்றனர்.

    2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தது.

    திமுக அளித்திருந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

    அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்றன. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் முதன்முதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். சுமார் ஒன்றரை கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு, இந்த திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    அப்போது பலரது பெயர் விடுபட்டதாக விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பலர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன் பலனடைவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து, 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10-ந்தேதிக்கு மேல் 15-ந்தேதிக்குள் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    • ஜூன் 13-ந்தேதி பலமணி நேரம் விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன் 13-ந்தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் காவேரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் ஜூன் 21-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார்.

    என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை சேர்க்கவே, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

    செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டடு. ஆனால் மூன்று நீதிமன்றங்களும் ஜாமின் வழங்க மறுத்திவிட்டன. இதனால் தொடர்ந்து புழல் ஜெயலில் இருந்து வருகிறார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

    • ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
    • நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

    நான்கு கட்ட பாத யாத்திரை முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்டம் மற்றும் கடைசி கட்ட யாத்திரையை டிசம்பர் 16-ந்தேதி தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 10-ந்தேதி யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    • விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்- அமைச்சர் தென்னரசு
    • இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது- அமைச்சர் கணேசன்

    தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் (ஏப்ரல் 23-ந்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.

    இருந்தாலும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
    • பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

    துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. 

    இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

    இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

    நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.

    • அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பின்னர் பொதுச் செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்களாவும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இதனால் 2022 ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரை பொதுச் செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.

    இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.

    பின்னர் ஏப்ரல் 20-ந்தேதி அதிமுக-வின் பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களையும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக் கொண்டது.

    ×