என் மலர்
வழிபாடு
- `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
- பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.
ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.
இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.
சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.
அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.
அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.
இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.
வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.
அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.
கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.
10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.
மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.
- 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
- பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.
ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
- திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தைப்பூச தேர் திருவிழா.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.
29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.
- சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
- விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.
தேரோட்டம்
மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.
தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.
- ராமபிரான் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது.
- வனங்கள், ஆறுகள், மலைகளை கடந்து பயணத்தை மேற்கொண்டனர்.
தசரத மன்னனிடம் கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது. அவருடன் சீதாதேவியும், லட்சுமணனும் சென்றனர். தென்திசை நோக்கிச் சென்ற அவர்கள், பல வனங்கள், ஆறுகள், மலைகளைக் கடந்து தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது இயற்கை எழில் மிகுந்த அடர்ந்த வனத்தின் ஒரு பகுதியில் ஆற்றின் பக்கமாக சிறிய மலை இருப்பதைக் கண்டனர். 60 அடி உயரத்துடன் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சிறிய மலை அது. அந்த மலையின் உச்சியில் சிறிய குடில் ஒன்றை அமைத்து தங்கி இருந்தனர்.
அந்த பகுதியில் அசுரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், ராமர், சீதையையும், லட்சுமணனை காக்கும் பொருட்டு. வானரர்கள் எப்போதும் கண் காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சீதாபிராட்டி எங்கே இருந்தாலும் அங்குள்ள ஆற்றின் நீரைக் கொண்டு வந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம். அப்படி பூஜை செய்வதற்கு முன்பாக அவர் ஆற்றில் நீராடி விட்டு வருவார். அப்படி ஆற்றில் நீராடும் அவருக்கு அசுரர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது.
உடனே அவர் இது பற்றி ராமபிரானிடம் சொன்னார். மறுநாள் சீதாதேவி ஆற்றில் குளிக்க சென்றபோது, மகிஷாசுரன் என்ற அரக்கன், சீதாதேவியை நோக்கி வந்தான். அதைக் கண்ட ராமபிரான், ஆற்றின் ஓரமாக வளர்ந்திருந்த புற்களை கொண்டு. சீதாதேவி நீராடும் இடத்தைச் சுற்றி சுவர் போன்று அமைத்தார். பின்னர் எருமை தலைகொண்ட மகிஷாசுரனுடன் போரிட்டு அவனின் தலையை துண்டித்தார். பின்னர் சில காலம் அங்கேயே தங்கியிருந்து மீண்டும், வனத்தின் வேறு பகுதிக்கு ராமபிரான் தன் மனைவி மற்றும் தம்பியுடன் இடம்பெயர்ந்தார்.
ஆனால் ராமபிரான் வசித்த அந்த பகுதியில் மக்கள் பலரும் குடியேறினர். மகிஷாகரன் தலை கொய்யப்பட்ட அந்த இடத்திற்கு 'எருமை வெட்டிப்பாளையம் என்றுபெயர் வந்தது. அதேபோல் கொசகொசப்பான புற்கள் வளர்ந்த ஆற்றுக்கு கொசஸ்தலை ஆறு' என்று பெயரிடப்பட்டு புகழ் பெற்றது.
மேலும் அங்கு வசித்த மக்கள், மலையில் ராமர் குடில் அமைத்து வாழ்ந்த இடத்திற்குச் செல்வதற்காக, செம்பாறை கற்களால் படிக்கட்டுகளை அமைத்தனர். அதன்பின்னர் மலையின் மேல் பகுதியில் ராமர் வசித்த இடத்தில் அவருக்காக ஒரு கோவிலை கட்டினர்.
இந்த கோவிலில் அமைந்துள்ள மூலவர் சிலையானது. சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டுள்ளது. ராமர் மடியில் சீதாதேவி அமர்ந்திருக்க. அருகில் லட்சுமணன், ஆஞ்சநேயர் இருப்பது போன்று, பட்டாபிஷேக ராமர் திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார்.
கோவிலின் முன் புறத்தில் விஷ்வசேனர், ராமானுஜர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். திருகச்சி நம்பிகள் ஆகியோரது சிலைகள் இருக்கின்றன. கோவிலின் வெளிப்புறத்தில் சன்னிதிக்கு எதிரில் பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது.
கோவிலின் வலதுபுறத்தில் வராகர், நரசிம்மர், நாராயணன், இடதுபுறத்தில் விஜயன், விஷ்ணு, துர்கை ஆகியோரது திருவுருவ சிலைகள் அழகான கலைநயத்துடன் காண்போரை வியக்கும் அளவில் பிரமிக்க வைக்கிறது. இத்தல இறைவன் கோதண்டராமர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் புனர்பூசம் வரும் நட்சத்திரம் அன்று நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டால், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள், அதற்கான நேர்த்திக்கடனை ஆலயத்திற்கு வந்து செலுத்துகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதுடன், காதணி விழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளையும் ஆலயத்திலேயே நடத்துகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக அரசமரம் உள்ளது.
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை அருகே உள்ளது எருமை வெட்டிப்பாளையம். சென்னையில் இருந்து காரனோடை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ, கார்கள் மூலம் ஆத்தூர் கிராமம் வழியாக செல்லலாம்.
- பாலதண்டாயுதபாணி வாண வேடிக்கையுடன் தெப்பத் திருவிழா.
- திருநெல்வேலி நெல்லையப்பர் சவுந்தர சபா நடனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 12 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை நள்ளிரவு 1.36 மணி வரை பிறகு துவிதிைய.
நட்சத்திரம்: பூசம் காலை 11.07 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வாஸ்து நாள் (இன்று காலை 10.41 மணி முதல் 11.17 மணி வரை வாஸ்து செய்ய நன்று) கோவை பாலதண்டாயுதபாணி வாணவேடிக்கையுடன் தெப்பத் திருவிழா. திருநெல்வேலி நெல்லையப்பர் சவுந்தர சபா நடனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர், சென்னைமலை சுப்பிரமணியர் தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-பெருமை
கடகம்-ஜெயம்
சிம்மம்-நட்பு
கன்னி-இன்பம்
துலாம்- இனிமை
விருச்சிகம்-நன்மை
தனுசு- வரவு
மகரம்-உதவி
கும்பம்-ஆக்கம்
மீனம்-ஆதரவு
- முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
- உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.
இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.
- சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திரு விழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 23-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது.
11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர்.
பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்மாள் எழுந்தருளினர்.
தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.
- தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.
20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
நேற்று (24-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.
ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும், பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர். மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் பேசினார்கள்.
இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, 1 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கும் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.
வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் வடலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
- அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.
திருப்பரங்குன்றம்:
தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.
இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.
- தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.
கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.
தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.

எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.
எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.
இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
- முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
- அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.
கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.
இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.






