என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாடி மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அரியானா மாநிலம் பதிவு எண்கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. லாரியில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தினர். இன்று காலை ஏராளமான தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டெய்னர் பெட்டியை திறந்து சோதனை செய்த போது முதலில் இருந்த சில மூட்டைகளில் பா.ஜனதா கட்சியின் கொடி, தொப்பிகள் இருந்தன. பின்னர் இருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் கண்டெய்னர் பெட்டியை பூட்டினர்.

    மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணம் பிடிபட்டு இருப்பதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் பள்ளி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது அதில் இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தேர்தல் அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் கண்டெய்னர் லாரி பற்றிய பரபரப்பு நீடித்து வருகிறது.

    இதுகுறித்து கண்டெய்னர் லாரியை சோதனை செய்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். இதற்கிடையே லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
    • நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

    பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

    தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

    இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

    • பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக தூத்துக்குடிக்கு சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலை அங்குள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்தும், சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தவாறும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வழக்கம்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    • வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குவாதத்தில் இறுதியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- எங்களுக்கு 12- 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். 12.15 மணிக்கு தான் நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவாக, திமுக வேட்பாளர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

    இதனிடையே, வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்கேயும் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, வாக்குவாதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். 11.49 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம், கேமராவிலும் அது பதிவாகி உள்ளது. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான போது, திடீரென தி.மு.க.வினர் வந்தனர். மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களை தான் அனுமதித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதம் செய்தனர். பிரச்சனையை காவல்துறை சரியாக கையாளவில்லை. திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்களின் டோக்கன் எண் 7 என்றார்.

    • தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

    விழுப்புரம்:

    தமிழகம்-புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி தேர்தல் பரப்புரைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வர உள்ளார். அவர் பேசுகிற பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட வந்திருந்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.என்கிற கட்சி 5, 6 ஆக உடைந்து போய் உள்ளது. இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

    விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதுவரை 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து வீடு வீடாக இதை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
    • நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

    அதன்படி, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நடைபெற்றது.

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாடகை கார் வந்தது.

    அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை காரில் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பணத்தை பறிமுதல் செய்ததும், வாகனத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது.

    இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பணம் வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    • வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர்.

    எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்கமாகும். அந்த வகையில் ஜெயலலிதா வழியை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களும் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து மனு தாக்கல் செய்தனர்.

    இதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று நல்லநாள் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் உள்ள காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தென்சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும், வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ராயபுரம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நாகை, திருப்பூர் தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.


    திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை கோவையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அக்கட்சியின் வடசென்னை வேட்பாளர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    ஒவ்வொரு வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்த போது அவர்களுடன் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.

    இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்பதால் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர்.

    இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது. ஒவ்வொரு வேட்பாளர்களும் மற்ற வேட்பாளர்களை சந்தித்து கொண்டபோது மகிழ்ச்சியுடன் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

    வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    • மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே.
    • பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

    ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.


    தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.

    மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்.

    எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    ×