search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறக்கும் படையினரிடம் பணத்தை திருப்பி தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்
    X

    பறக்கும் படையினரிடம் பணத்தை திருப்பி தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாடகை கார் வந்தது.

    அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை காரில் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பணத்தை பறிமுதல் செய்ததும், வாகனத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது.

    இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பணம் வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×