என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
    • போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • சின்சினாட்டி ஓபன் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
    • இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொண்டார்.

    இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து அல்காரஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    • ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
    • ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம்

    உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் போர் முடிவடையும். புதின் அதை முடிக்க விரும்புகிறார். முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டது.

    நான் 6 போர்களை நிறுத்தியுள்ளேன். ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது எளிதான ஒன்றல்ல. இது இருப்பதிலேயே கடினமானது. இந்தியா-பாகிஸ்தான்-ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெரிய இடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.

    இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள். நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள். ரூவாண்டா மற்றும் காங்கோ இடையே இந்த மோதல் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் 6 போர்களைச் முடித்துள்ளோம்.

    இந்த (ரஷியா - உக்ரைன்) போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்" என்று கூறினார். அப்போது அவர் அருகில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார்.

    கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

    இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 9 அன்று போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த போர் நிறுத்தத்தை வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் சம்மதிக்க வைத்து தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்.
    • வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.

    உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா வருகை தந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார், புதினும் விரும்புகிறார். இந்த போரால் உலக நாடுகள் தளந்துவிட்டன. விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.

    நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடுய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்த போர் சற்று கடினமானது. இந்த போருக்கு ஜோ பைடன் தான் காரணம்.

    பேச்சுவார்த்தையின்போது புதினுடன் போனில் பேசினேன். இதன் பின்னரும் பேச உள்ளேன். ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளேன்.

    புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.

    இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு மேலும் உதவுகளை டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடம் ஜெலன்ஸ்கி கோரினார்.

    முன்னதாக இந்த சந்திப்பின் முன், கிரீமியாவையும் நேட்டோ உறுப்பினராகும் ஆசையையும் உக்ரைன் கைவிட்டால் போர் நிற்கும் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
    • ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.

    இந்நிலையில் இந்த கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.

    அதாவது, இந்தியாவை போல சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று அவர் கூறினார்.

    அவர் கூறியதாவது, "ரஷியாவிலிருந்து சீனா வாங்கி விற்கும் எண்ணெயில் பெரும் சதவீதத்தை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. இது தவிர, இயற்கை எரிவாயுவையும் வாங்குகின்றன. இந்த சூழலில், தடைகள் விதிக்கப்பட்டால், வாங்குபவர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிக்கும்" என்று கூறினார்.

    சீனா மற்றும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்க செனட் மசோதாவை உருவாக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

    ரஷியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

    தற்போது இது குறித்து தனக்கு தகவல் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.

    உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

    • முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.
    • அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

    உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.

    தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் வருகை தந்துள்ள நிலையில் அவர்களை சந்தித்த டிரம்ப் கூட்டாக ஜெலென்ஸ்கியை போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க வைக்க அழுத்தம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    எல்லாம் சரியாக நடந்தால் ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் சேர்நது ஒரு மீட்டிங் போடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    இந்த வெள்ளை மாளிகை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. 

    • இந்தியா-பாகிஸ்தான்போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
    • பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து 2 நாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

    ஆனால் இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.மேலும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கே ரூபியோ தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இரு நாடுகளில் நிலைமையை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம்.

    ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன நடக்கிறது? கம்போடியாவிற்கும், தாய்லாந்திற்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளோம். போர் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சு வார்த்தை நடத்துவது கடினம்.

    போர் நிறுத்தத்திற்கு ஒரே வழி இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொள்வது தான். ரஷியா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை தற்காலிமாக நிறுத்துவது மட்டுமல்லாது தற்போதைய மற்றும் எதிர்கால மோதல்களை தடுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுவது நோக்கமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்- குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடி, இத்தாலியின் லாரன்சோ முசெட்டி-லாரன்சோ சொனேகோ ஜோடியுடன் மோதியது.

    இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ராஜீவ் ராம் ஜோடி 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக ரஷிய வீராங்கனை 2வது செட்டை 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜாஸ்மின் பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

    • இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார்.

    அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது.

    இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார்.

    இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

    புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×