என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.
- புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
- மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் போட்டோஷூட் நடைபெறும்.
18-வது சீசனுக்காக ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டி தொடங்குவதற்கு 2 தினங்களுக்கு முன்பு 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆலோசனை நடத்துகிறது.
இதற்காக 10 அணிகளின் கேப்டன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 22-ந்தேதி மும்பையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதே போன்று 10 அணிகளின் உரிமையாளர்களின் மேலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு பிறகு 10 அணிகளின் கேப்டன்களுடன் போட்டோஷூட் நடத்தப்படும். மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் இந்த போட்டோஷூட் நடைபெறும்.
இந்த சீசனில் 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரகானே (கொல்கத்தா), ரஜத் படிதார் (பெங்களூரு), ரிஷப்பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்) அக்ஷர் படேல் (டெல்லி), ஆகியோர் அந்த அணிகளின் புதிய கேப்டன்கள் ஆவார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), கம்மின்ஸ் (ஐதராபாத்) சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), சுப் மன்கில் (குஜராத்) ஆகியோர் அந்தந்த அணிகளின் கேப்டன்களாக நீடிக்கிறார்கள்.
- ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
- நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
- இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார்.
- அப்போது நேரலையில் இருந்த சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என திட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியையே மிஞ்சி சதத்தை அடித்துள்ள அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024- 25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது அவர் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார். அதைப் பார்த்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.
இந்திய அணி தடுமாறும் போது இப்படி விக்கெட்டை பரிசளித்தது உங்களுடைய இயற்கையான ஆட்டம் கிடையாது என்று அவர் ரிஷப் பண்ட்டை சாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலனாதையும் மறக்க முடியாது.
இந்நிலையில் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று கவாஸ்கர் தம்மை திட்டியதையே கலாய்த்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடருக்காக அவர் ஏதோ ஒரு விளம்பரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அந்த விளம்பரத்தில் கவாஸ்கர் தம்மை திட்டிய ஸ்டுப்பிட் எனும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் ரிஷப் பண்ட் மாற்றி ஜாலியாக பேசியுள்ளார்.
சொல்லப்போனால் கவாஸ்கர் போலவே பேசுவதற்காக அவர் 2 - 3 முறை "ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்" வெவ்வேறு ஸ்டைல்களில் பேசியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
- குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.
இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை.
- உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் மும்பை அணிக்காக கோப்பையை வெல்ல புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருகிறார்.
5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்ட்யாவை குஜராத் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தங்களது புதிய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே வான்கடே மைதானம் மட்டுமின்றி செல்லும் இடங்களில் எல்லாம் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இந்நிலையில் மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ஓடி ஒளியவில்லை என்றும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை வென்றதால் தற்போது அனைத்தும் 360 டிகிரியில் மாறியுள்ளதாகவும் பாண்டியா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
எனக்கு நடந்த விஷயம் போர்க்களத்தை விட்டு வெளியேறாதது பற்றியதாகும். அதில் நான் எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை பற்றி இருக்குமே தவிர வெற்றி பெறுவதைப் பற்றி இருக்காது. அந்த வருடம் நான் எனது நிலையை பிடித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த கடினமான காலத்திலும் கிரிக்கெட் மட்டுமே என்னுடைய நண்பனாக இருந்தது. என்னை அனைத்து சிக்கல்களில் இருந்தும் கிரிக்கெட் மட்டுமே வெளியேற்றியது.
எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது. அது எனக்கு 360 டிகிரியில் நடந்த மாற்றம் போல் இருக்கிறது.
என்னால் நிலைத்து நின்று கடினமாக உழைத்து போராடினால் கிரிக்கெட்டில் மீண்டும் வர முடியும் என்பது தெரியும். ஆனால் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாத போது என்னுடைய வாழ்க்கையை கடவுள் வெறும் இரண்டரை மாதங்களில் ஸ்கிரிப்ட் எழுதி மாற்றினார்.
என்று பாண்ட்யா கூறினார்.
- வங்கதேச கடந்த வருடம் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.
- இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
வங்கதேச கிரிக்கெட் அணி மே மாதம் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர் ஏற்கனவே நடைபெற இருந்தது. ஆனால், இரண்டு அணிகளுக்கும் அதிக அளவில் போட்டிகள் இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு வங்கதேச அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. அதற்கு முன் கடந்த வருடம் பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது.
பைசாலாபாத், முல்தான், லாகூரில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது.
- ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
இஸ்லாமாபாத்:
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையைத் தாண்டி அதிக செலவு செய்யப்பட்டது.
சுமார் 869 கோடி ரூபாயை இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவிட்டது. இவ்வளவு பணத்தை வாரி இறைத்த நிலையில், இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு.
இந்த தொடரை நடத்துவதற்கான கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனை வருவாய் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 52 கோடி மட்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 739 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது யாரும் எதிர்பாராத மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
மேலும், போட்டிகளில் விளையாடாத மாற்று வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சம்பளத்தில் இனி 12.50 சதவீதம் மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
மேலும், இனி பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது. அவர்கள் சாதாரண விடுதிகளில் தான் இனி தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், சர்வதேச தரத்தில் மைதானங்களைத் தயார் செய்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை மேலும் பலவீனமானதாக மாற்றி இருக்கிறது பாகிஸ்தான்.
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.
அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
- பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான்.
- 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் ஆவார். அவர் சர்வதேச அளவில் விளையாடாத இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்தார்.
உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.






