என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசு ஊழியர்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின்கீழ் வருகின்றனர்.

    இதற்கான பிரீமிய தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் செலுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம்.

    ஆனால் மத்திய அரசு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கான காப்பீடு பிரீமிய தொகையை செலுத்துவதாக ஏற்றுக்கொண்டுள்ளது. புதுவையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை தொடங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினார்கள்.

    அதை ஏற்று மீதமுள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பத்தினருக்கும் இலவச காப்பீடு திட்டம் புதுவை அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முழு பிரீமிய தொகையை புதுவை அரசே செலுத்த உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. 21 நாட்களில் டெண்டரை இறுதி செய்வோம்.

    அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இலவச காப்பீடு திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இந்த திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    லஞ்சம் தொடர்பான புகார்களை நேரடியாக தரலாம் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவினை தொடங்கி உள்ளோம். கொரோனா காலம் என்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறோம். லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு வரும் நிலுவை மனுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை காவல்துறையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை பற்றி மக்கள் இன்னும் சரிவர அறிந்துகொள்ளவில்லை. அதன் முதல்கட்டமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு செயல்படுவதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உள்ளோம்.

    லஞ்சம் தொடர்பான புகார்களை என்னிடம் நேரடியாகவும் தரலாம். லஞ்ச ஒழிப்பு பிரிவினை 24 மணிநேரமும் அணுகி புகார்களை அளிக்கலாம். மக்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால்தான் சி.பி.ஐ.க்கு செல்கிறார்கள்.

    எங்களுக்கு 135 புகார்கள் வந்துள்ளன. காரைக்காலில் நடத்திய முகாமுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால் 2 மாதத்துக்கு ஒருமுறை லஞ்ச ஒழிப்பு முகாம் நடத்த உள்ளோம். இந்த முகாம் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் நடைபெறும்.

    லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு என்று தனியாக ஹெல்ப்லைன், இலவச அழைப்பு எண் வசதியை உருவாக்க உள்ளோம். அதற்கான அனுமதியை அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 2-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்டாக் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. மேலும் விடுமுறைகள் காரணமாக உரிய சான்றிதழ்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நீட் அடிப்படையிலான படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி அதிநவீன கருவி மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்படுகிறது.
    புதுச்சேரி:

    உடலின் வெளியே அதிர்வலைகளை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் உயர் சிறப்பு மிகுந்த அதிநவீன எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸ் (டோர்னியர் டெல்டா-111) என்ற கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், துணை இயக்குனர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறுநீரக கற்களை உடைக்கும் அதிநவீன கருவி குறித்து டாக்டர் அசோக் சங்கர் படே கூறியதாவது:-

    அறுவை சிகிச்சையின்றி சிறிதளவே வலியுடன் சிறுநீரக கற்களை அகற்ற உரிய சிகிச்சை அளிக்க இந்த இயந்திரம் உதவும். இதன்மூலம் உயராற்றல் மிக்க அதிர்வலைகளால் பெரிய கற்களை சிறிய துகள்களாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியும். நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளித்தல், வடு உண்டாக்குதல் மற்றும் உடலில் எந்த ஒரு கீறலும் இல்லாமல் இந்த சிகிச்சையில் சில மணிநேரத்தில் நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    கடந்த 11 ஆண்டுகளாக 3 ஆயிரம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஜிப்மர் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை முன்பிருந்த இயந்திரம் மூலம் கற்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய நவீன எந்திரத்தால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்களையும் அகற்ற முடியும். கணைய கற்களையும் உடைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசும்போது, இந்த இயந்திரத்தின் மூலம் சிறுநீரக கல்லை உடைக்கும்போது கதிர்வீச்சு அபாயம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    டாக்டர் அப்துல் ஹமீது பேசுகையில், ‘இந்த இயந்திரம் ரூ.4 கோடி மதிப்புடையது. தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஜிப்மரில் தான் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது ரூ.4 ஆயிரம் செலுத்தி இந்த சிகிச்சையை ஜிப்மரில் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
    புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும்.

    புதுவையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

    அரசு பள்ளிகளில் படித்த 2 மாணவர்கள் புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 11 பேர் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். ஏனாம் பிராந்தியத்தில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. எனவே இந்த ஆண்டே இந்த 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

    ஒருபுறம் இந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறும் மத்திய பா.ஜனதா அரசு இந்துக்களுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. சமூக நீதிக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாக செயல்படுகிறார்கள். இந்த ஆண்டே மருத்துவக்கல்வியில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசை வலியுறுத்தி வரும் நாளை (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஓ.பி.சி. மாணவர்கள் படிக்கும் வாய்ப்புகள் பறிபோவதை பற்றி தலைவர்கள் கவலைப்படுவ தில்லை. கல்வி பெறாமல் மோதலை உருவாக்குவதையே விரும்புகிறார்கள்.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் சாதி, மதம் பெயரால் வன்முறையை தூண்ட வேண்டும் என முயற்சியில் ஈடுபட முயல்வது தெரிகிறது.

    பெண்களை பற்றி பா.ஜனதாவினர் தவறாக கூறி வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நான் கூறியதை திரித்து வன்முறையை தூண்டி பொய் புகார் அளித்த பா.ஜனதாவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ந்தேதி தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

    மனுநூல் குறித்து பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 3,4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய உள்ளோம். ‘மகளிர் விழிப்புணர்வு மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும் கிராம அளவிலும் நடக்கும்.

    மனுநூல் இன்றைய அவலங்களுக்கு காரணமாக உள்ளதையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள், தலித் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து, மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘பி’ (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) மற்றும் பிரிவு ‘சி’ ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள், 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதன் மூலம் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,200-ம் வழங்கப்படும்.

    இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 26 ஆயிரம் பேர் பயனடைவர். இதன் காரணமாக புதுவை அரசுக்கு ரூ.18 கோடி கூடுதலாக செலவாகும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க கவர்னர் முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1.80 கோடி செலவில் மாணவிகள் விடுதி கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் தாமதமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் பத்மாவதி வரவேற்றார். அரசு செயலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாணவிகள் விடுதியை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

    ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாய்சுப்ரமணியம், சமூக நலத்துறை இயக்குனர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தேன். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்தேன். இந்த திட்டங்களை ரங்கசாமியும், அமைச்சராக இருந்த ராஜவேலும் சரியாக செயல்படுத்தாமல் முடக்கினார்கள். ரூர்பன் திட்டத்தின் மூலம் பாகூருக்கு 100 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன். ஆனால் ஒருவர், தான் வாங்கிக் கொடுத்ததாக போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு இன்றைக்கு வீட்டிற்கு போய்விட்டார்.

    இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இலவச அரிசி கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் மட்டும் அரிசி தர வேண்டாம் என கவர்னர் தடுக்கிறார். மத்திய அரசுடன் சேர்ந்து கவர்னர் புதுச்சேரியின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி செயல்படாமல், எதிரி கட்சியாக இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மவுனம் காக்கிறார்கள். எங்கள் மீதான குறைகளை நேரடியாக கேளுங்கள். அதை விடுத்து, அரசின் திட்டங்களை முடக்குவது நியாயமற்றது.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் தான் முடிக்கப்படும் என்பது சரித்திரமாக இருந்து வருகிறது. மின்துறையில் பொறியாளர் பணியிடம், எல்.டி.சி., 30 சப்-இன்ஸ்பெக்டர், 500 காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் முடக்கி வருகிறார்.

    இப்படி ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏரி சங்கம் மூலமாக புகார் தெரிவிக்க வைத்து, குடிநீர் திட்டங்களை கவர்னர் தடுத்து நிறுத்தி உள்ளார். தற்போது மத்திய அரசு குடிநீர், விவசாயத்துக்கு எங்கு வேண்டுமானாலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது கவர்னர் என்ன செய்யப்போகிறார். புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் 9 சதவீதம், மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 1 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் பல தடைகளை மீறி மக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழா முடிவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவி இயக்குனர் சுகந்தி நன்றி கூறினார்.
    புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.
    புதுவை:

    புதுவை அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிருமாம்பாக்கம், பாகூர் ஏரி சுற்றுலா திட்டம், பனித்திட்டு உறைவிடப்பள்ளி, கடற்கரை சாலை பணி, கிருமாம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டங்கள் எதுவும் செய்யாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    பல ஆண்டுகளாக குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது கவர்னர் சத்துணவு வழங்க தேவையில்லை. அதற்கு பதிலாக பணமாக கொடுங்கள் என்று கோப்பு அனுப்பி உள்ளார்.

    கவர்னர் கிரண்பேடி திட்டங்களை முடக்கி, காங்கிரஸ் ஆட்சியை செயல்பட விடாமல் தடுக்கிறார். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் தொடர்ந்து பல திட்டங்களை நாங்கள் போராடி மக்களுக்கு செய்து வருகிறோம். ரூ.21 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதும் அந்த கட்சியின் அலுவலகம் 100 அடி ரோட்டில் உள்ள என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

    அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியை தழுவியது. தொடர்ந்து கட்சி அலுவலகம் ஜவகர் நகரில் முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் வீட்டுக்கு மாற்றப்பட்டது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது.

    இதையடுத்து புதிய இடத்தில் கட்சி அலுவலகத்தை அமைக்க கட்சியின் தலைவரான ரங்கசாமி முடிவு செய்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வந்தார். இந்தநிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்சி அலுவலகத்தை அமைப்பது என முடிவு செய்து கட்சி நிர்வாகிகள் மூலம் அதற்கான பணிகளை மேற்கொண்டார்.

    அதன்படி கட்சி அலுவலகம் அமைப்பதற்காக பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் ரங்கசாமி கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கினார். நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாரன், திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ரங்கசாமியிடம் நிருபர்கள், புதுவை சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் எடுத்து வரும் பணிகள் என்ன? தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்படும்? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ரங்கசாமி, தேர்தல் வரும்போது சொல்கிறேன் என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

    நீங்கள் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே மக்களை சந்திக்க வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாரே? என்ற கேள்விக்கு நான் புதுச்சேரியில்தான் உள்ளேன். வெளியில் எங்கும் சென்றுவிடவில்லை என்று பதில் அளித்தார்.
    குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாகூர்:

    பாகூர்- சோரியாங்குப்பம் சாலை கடலூர் கலெக்டர் அலுவலகம், பண்ருட்டி, நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய சாலையாக உள்ளது. 10 வருடங்களுக்கு முன் போடப்பட்ட இந்த தார் சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதில் சோரியாங்குப்பம் செல்லும் சாலை படு மோசமாக காட்சி அளிக்கிறது.

    பொதுப்பணித்துறை சாலைப் பணியாளர்கள் சாலையோரம் இருக்கும் மண், கற்களை கொட்டி அவ்வப்போது சீரமைத்து வருகின்றனர். ஆனால் ஒருசில நாட்களில் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. இதுவரை சாலை நிரந்தரமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும்-குழியுமாக உள்ள பாகூர் - சோரியாங்குப்பம் சாலையை உடனடியாக சீரமைத்து மின் விளக்குகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து புதுவை மாநிலத்திற்குள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை வந்து செல்கின்றன. புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த பஸ் புதுவையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அந்த பஸ் பெங்களூருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.

    இந்த பஸ்சில் அரசின் உத்தரவுப் படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமாக ரூ.275-ம், முன் பதிவு கட்டணமாக ரூ.25 என மொத்தம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த பஸ்சில் பயணம் செய்ய புதுவை பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×