என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,013 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 81,37,119 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 551 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,641 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,013ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

    ஆகவே சம்பா பருவ நெற்பயிர் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதியில் இயங்கும் உழவர் உதவியகங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள இத்தருவாயில் சம்பா நெற் பயிருக்கான பயிர் காப்பீடு விண்ணப்பத்தையும் தங்கள் பகுதியில் உள்ள உழவர் உதவியகம் மூலம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூடுதல் வேளாண் இயக் குனர் வசந்தகுமார் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படும் விளைபொருள் ஆர்வலர் குழுமங்கள், சுய உதவி குழுக்கள், உணவு பாதுகாப்பு மகளிர் குழுக்களுக்கு மாட்டு தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மானியத்தொகையாக ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 வீதம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயனடைய இவ்வாண்டில் புதியதாக தீவனப்புல் பயிரிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற் கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் செயல்படும் உழவர் உதவியகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 10-ந்தேதிக்குள் உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுவையில் வருகிற 4-ந்தேதி முதல் நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பெடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காவல் துறை பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2018-ம் ஆண்டு புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த பணியிடங்களில் சேர விரும்பி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் பல ஆண்டுகளாக போலீஸ் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படாததால் வேலை தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை வழங்கிட புதுவை அரசு முடிவெடுத்து கவர்னர் கிரண் பெடிக்கு கோப்புகளை அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் அனுமதி மறுத்து விட்டார். இதையடுத்து வயது வரம்பில் தளர்வு அளிக்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த ஐகோர்ட்டு வயது வரம்பு சலுகை தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் பின்னரே 2 ஆண்டுகள் தளர்வு அளித்து உத்தரவிடப்பட்டது.

    இந்தநிலையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி இளைஞர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தநிலையில் காவலர் உடல்தகுதி தேர்வின்போது ஓட்டம் நடக்கும்போது நேரத்தை துல்லியமாக கண்டறிய மைக்ரோ சிப் பொருத்தும் முறைக்கு பதிலாக விசில் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கவர்னர் கிரண் பெடிக்கு புகார்கள் சென்றன. இந்த தேர்வு முறை குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் காவலர் தேர்வினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:-

    உடல் தகுதி தேர்வின்போது டிஜிட்டல் முறைக்கு பதிலாக வேறுமுறையை பயன்படுத்துவது, பிற பிராந்தியங்களில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான டிராக் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன.

    தேர்வு முறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறை, நிலையாணை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிரச்சினைகளை ஏற்படுத்தி கோர்ட்டுக்கு சென்றுவிடும்.

    எனவே உரிய அதிகாரம் பெற்றவர் முடிவு எடுக்கும்வரை காவலர் பணிக்கான தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதுதொடர்பான கோப்புகளை தலைமை செயலாளர் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இந்த உத்தரவின் நகல் போலீஸ் டி.ஜி.பி.க்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் உத்தரவிட்டு இருப்பது வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
    புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

    இதற்காக காலை 8.59 மணிக்கு அவர் விழா நடக்கும் காந்தி சிலை அருகே வருகிறார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். அதன்பின் போலீஸ் அணிவகுப்பினை பார்வையிடுகிறார்.

    பின்னர் மேடைக்கு திரும்பும் முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுதலை நாள் உரையாற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    அதன்பின் கடற்கரை காந்தி திடலில் நடைபெறும் புதுச்சேரி வரலாறு புகைப்பட கண்காட்சியை அவர் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கேயும் தேசியக் கொடியேற்றுகிறார்.

    இதற்கான இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். இந்த விடுதலை நாள் விழாவில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை மட்டும் இடம்பெறுகிறது.

    வழக்கமாக நடைபெறும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதுவை விடுதலை நாளையொட்டி சட்டசபை மற்றும் அரசு கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    திருபுவனையில் பேக்கரி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 70). அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார். அது முதல் ரங்கநாதன் சோகமாக இருந்துவந்தார். மேலும் திருமண வயது வந்த தனது மகன்களுக்கு வரன் அமையாததால் ரங்கநாதன் விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு ரங்கநாதன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,908 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,88,851 ஆக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 583 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,908ஆக உயர்ந்துள்ளது.
    வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் மழைக்கால நோய் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க உள்ளாட்சித்துறை, நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி மலேரியா இல்லாத புதுவையை உருவாக்க உள்ளாட்சித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏரிகள், குளங்கள், பெரிய கழிவுநீர் வாய்க்கால்களை பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரி பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காமல் கொசு உற்பத்தியாவதை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொசு உற்பத்தியாகும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கூட்டத்தில் உள்ளாட்சி, பொதுப்பணி, செய்தி மற்றும் விளம்பரம், காவல், புதுவை நகர மன்ற குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    புதுவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவக்குழு அறிவுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக நாள்தோறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அதன்படி நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் டாக்டர் பிரதீப் கவுர், கணேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவ குழுவினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில கூடுதல் தரமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தற்போதைய நிலையிலிருந்து வழுக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    இதைத்தவிர்க்க சோதனைகளை அதிகரிக்கவேண்டும். அதேபோல் கண்காணிப்பினையும் மேம்படுத்தவேண்டும். நோய்த்தொற்றினை குறைக்க தொடர்புகளை கண்டறியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு பகுதியிலும் சர்வே நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
    முருங்கப்பாக்கத்தில் சுவீட் கடை வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியாங்குப்பம்:

    முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34), தொழிலாளி. இவரது மனைவி சுதா (30), அரியாங்குப்பம் புறவழிச் சாலையில் உள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற சுதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுவீட் கடைக்கு சென்று விசாரித்தபோது சுதா வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வெங்காய விலை அதிகரித்து வரும் சூழலில் ஒரு கிலோ வெங்காயம் எடுத்து வந்தால் அசைவ உணவு இலவசம் என புதுவை ஒட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


    புதுவை கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நிரூபன்.சமையல் கலை பயின்ற இவர் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு புதுவை திரும்பினார். பின்னர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு பாரம்பரிய உணவகம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலுக்கு ஒரு கிலோ வெங்காயம் எடுத்து வந்தால் அசைவ உணவு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

    இதனை அறிந்தவர்கள் வெங்காயத்தை கொடுத்து சாப்பிட்டு செல்கிறார்கள்.வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலும், பழைய பண்டமாற்று முறையை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக ஒட்டல் உரிமையாளர் நிரூபன் கூறினார்.

    இவர் ஏற்கனவே 100 திருக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்துடன் இலவசமாக சாப்பிடலாம். மாமியார்- மருமகள் இணைந்து வந்தால் தோசை இலவசம் என சலுகையில் உணவு விருந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ வெங்காயத்துக்கு இலவச அசைவ சாப்பாடு

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சை பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று காரணமாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஜிப்மரில் இன்று (புதன்கிழமை) முதல் புறநோயாளிகள் சிகிச்சை பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.

    சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று டாக்டருடன் செல்போனில் மருத்துவ கலந்தாலோசனையை கட்டாயமாக பெற வேண்டும்.

    இதற்காக ஒவ்வொரு துறைகளுக்கும் தொலைபேசி எண்களின் விவரங்கள் ஜிப்மர் இணையதள முகவரியில்www.jipmer.edu.in தரப்பட்டுள்ளது

    ஹலோ ஜிப்மர் என்ற ஆன்ட்ராய்டு செயலி உதவியுடனும் முன் அனுமதி பெற்று தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனை, சிகிச்சை சேவைகளை பெறலாம்.

    தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனையின் போது நேரில் மருத்துவ ஆய்வு தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் ஜிப்மர் வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    இந்த முன் அனுமதிக்கான கைபேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே ஜிப்மரின் உள்ளே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

    ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்து வருவது கட்டாயமாகும். மேலும், நோயாளியுடன் ஒருவர் மட்டுமே வரலாம் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொற்றானது ஆஸ்பத்திரியின் வெளிப்புற சேவை பிரிவுகளில் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    தமிழக பகுதிகளில் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறப்பு ஏதும் இல்லை. இதுவரை சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சோதனை 20 சதவீதத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரிசோதனையில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது.

    கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக 95 சதவீத பணிகளை அனுமதித்துள்ளோம். தமிழக பகுதிகளுக்குள் பஸ்களை இயக்க அனுமதி கேட்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

    மத்திய அரசு விரைவில் அடுத்தகட்ட தளர்வினை அறிவிக்க உள்ளது. அடுத்து தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக நாங்களும் மருத்துவ வல்லுனர்களை அழைத்துப் பேச உள்ளோம். ஜிப்மர் சர்வேயில் புதுவையில் 25 சதவீதம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே புதுவையில் இனிமேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா? என்பது குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். அதன்பின் தளர்வுகள் குறித்து முடிவு எடுப்போம்.

    உலக சுகாதார அமைப்பு மறுபடியும் கொரோனா தாக்கம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது. வெளிநாடுகளில் அதேபோல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூட்டுவலி, இருதய பாதிப்பு உள்ளிட்டவை வருகிறது. எனவே பின்விளைவுகள் குறித்து ஆராயவும் மருத்துவர்களை கேட்டுள்ளோம். கொரோனா பாதித்து குணமானவர்களும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    நமது நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சுதந்திரமாக கருத்து தெரிவித்தால் தேசவிரோதி என்று விமர்சிக்கிறார்கள். ஜனநாயக படுகொலை நடக்கிறது.

    எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்ற அமைப்புகளை ஏவி பொய்வழக்கு போடுகின்றனர். ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சுதந்திரமாக முடிவு எடுக்க விடாமல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மாநில அரசின் வழக்கு விசாரணைகளை மத்திய அரசு தானாக எடுக்கிறது. இந்த சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்காது.

    மாநில அரசுகள் மீது தங்கள் திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது. புதுவை அரசின் அதிகாரத்தையும் மத்திய அரசு பறித்து வருகிறது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    ×