என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் தலையிடுகிறார் என்றும், சட்ட விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகளை மிரட்டி நேரடியாக உத்தரவிடுகிறார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் புதுவை மக்களிடம் கவர்னரை திரும்பப்பெறக்கோரி பெற்ற கையெழுத்து பிரதிகளையும் நாராயணசாமி ஜனாதிபதியிடம் அளித்தார்.
அவருடன் சென்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் தனித்தனியாக கவர்னர் மீது புகார் மனுவை அளித்துள்ளனர்.
இந்த நிலையில் யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படியே தான் நடப்பதாகவும், புதுவை கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்துள்ளது என்றும் முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 4 பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏகபோகத்தை உடைத்து நிர்வாகத்தை நேர்மையானதாக, வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.
முதலில் புதுவையில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. கொள்முதல், ஒப்பந்தம் சீராக்கப்பட்டது. பணமாக வழங்குவது நிறுத்தப்பட்டு நிதி அனைத்தும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.
ஒற்றை டெண்டர் முறை, நியமன டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மறைத்து வைக்கும் விஷயங்கள் எதுவும் இல்லாமல் போனது. 2-வதாக அனைத்து நலத்திட்ட நிதி, உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இடைத்தரகு ஒழிக்கப்பட்டு எந்த நிலுவையும் இல்லாமல் பயனாளிகளுக்கு நிதி சென்று சேர்ந்தது.
3-வதாக மத்திய அரசு, ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய உத்தரவுகளின்படி யூனியன் பிரதேச சட்டம், பொது நிதி அதிகார விதிகள் கவர்னர் அலுவலகத்தால் முறையாக பின்பற்றப்பட்டது.
4-வதாக வாட்ஸ்அப், சமூக வலைதளம், காணொலி காட்சி மூலம் அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவு கண்காணிக்கப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக அறியப்பட்டது. அனைத்து துறைகளும் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்துடன் மத்திய அரசின் தொடர்பில் வைக்கப்பட்டது.
நிர்வாகத்தால் வியத்தகு மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை ஏற்க மறுப்பது அசவுகரியமாகவும், வேதனையாகவும்தான் இருக்கும்.
இவ்வாறு பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் சமூக வலை தளங்களுக்கும் இணைத்துள்ளார்.
புதுவை கலால் துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து மதுபான கடை உரிமதாரர்களும் கலால் விதிப்படி செயல்பட வேண்டும். அனைத்து சாராய கடைகள், மதுபான விற்பனையகங்கள் மற்றும் குடோன்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
குடோன்களில் உள்ள கேமிராக்கள் அனைத்தும் நேரடி முறையில் பார்க்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். அதுதொடர்பான முழு விவரத்தை வருகிற 20-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். இது, வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு சுதாகர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
புதுவை காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளை கவர்னர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து புகார் செய்து கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து புதுவை மக்களிடம் 30 தொகுதியிலும் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற ஜனாதிபதியை வலியுறுத்தி கையெழுத்து பெற்றனர்.
இந்த பிரதியை ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் முகாமிட்ட அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் கிரண்பேடி எந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளில் கவர்னர் தலையீடு தொடர்பாகவும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் தொகுதியில் கவர்னர் தலையீட்டால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு குறித்தும் தனித்தனியாக மனு அளித்தனர்.
சுமார் ½ மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஜனாதிபதி சந்திப்பு குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது கூறியதாவது:-
மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் விளக்கினோம்.
அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தர விடுவதையும், மிரட்டுவதையும் தெரிவித்தோம். ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்பப்பெற வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். கவர்னருக்கு எதிராக புதுவையில் நடந்த போராட்டங்கள் குறித்தும் தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் தவளக் குப்பத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், தங்க விக்ரமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமார், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தகுதி உள்ளதாக கூறியிருந்தார். சுமார் 30 ஆண்டாக மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.
எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முதல்- அமைச்சராக இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்தார். அப்போது பிரதமர் அலுவலக இணை மந்திரியாக இருந்த நீங்கள்(நாராயணசாமி) ஏன் இதனை செய்யவில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? புதுவை மக்களுக்கு பாதகம் செய்வது யாராக இருந்தாலும், அவர்களை பா.ஜனதா எதிர்க்கும்.
13 வகையான கோப்புகள்தான் கவர்னர் ஒப்புதலுக்கு போகும். மற்ற கோப்புகள் முதல்-அமைச்சர், அமைச்சருடன் முடிந்து விடும். இப்படித்தான் சட்டம் இருந்தது. நீங்கள் தானே கோர்ட்டிற்கு சென்று சட்டப்படியான அங்கீகாரத்தை கவர்னருக்கு வாங்கி கொடுத்தீர்கள்.
எம்.பி, மத்திய மந்திரி, முதல்-அமைச்சராக பதவி வகித்த நாராயணசாமி புதுவை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இனிமேலும் உங்களுக்கு தேர்தல் தேவையா? என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.
மக்களை பொறுத்தவரை இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கக்கூடாது என முடிவு செய்து விட்டனர். புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமையும்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். பா.ஜனதா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி போல சித்தரிக்கின்றனர். இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை.
புதுவை மக்கள் பெருவாரியான ஆதரவுடன் பா.ஜனதாவை ஆட்சியில் அமரவைப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
காதல் இல்லை என்றால் உலகம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் காதலை புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்திய பின்பு உடை, பரிசு பொருட்களை வாரி வழங்கி மகிழ்வது வழக்கம். தமிழர்களின் காதல் என்பது முதலில் வீரத்தில் பேசப்பட்டது. அதன்பின்னர் கிராம பகுதிகளில் கள்ளிச்செடி, பொது இடங்களில் உள்ள சுவர்களில் பெயர் எழுதி காதலை வெளிப்படுத்திய காலம் உண்டு.
அதனை தொடர்ந்து காதல் கடிதங்கள், தனிமையில் சந்திப்பது என காதலை வளர்த்து வந்தனர். தற்போது அதிநவீன காலத்தில் செல்போன், சமூக வலைதளங்கள் காதலுடன் கை கோர்த்துள்ளன.
இது இப்படி என்றால் காதலின் நினைவாக பூட்டு போட்டு காதலை போற்றியவர்களும் உண்டு. இதெல்லாம் காதல் படுத்தும் பாடு.
காதலுக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சைனி ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலர்கள் தங்களது காதல் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பூட்டை போட்டு பூட்டி அதன் சாவியை சிலர் ஆற்றில் வீசியும், சிலர் பத்திரப்படுத்தியும் வந்தனர். சிலர் அங்கேயே காதல் திருமணம் செய்தும் வந்தனர். இப்படி காதலர்கள் போட்ட பூட்டுகளால் பாலம் முழுவதும் நிரம்பி வழிந்ததால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் காதலர்கள் விட்டபாடில்லை. அங்குள்ள கம்பங்களில் தொடர்ந்து காதல் சின்னமாய் இப்போதும் பூட்டு போட்டு தங்களது நம்பிக்கைக்கு உரம் சேர்த்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் என்றழைக்கப்படும் புதுச்சேரியிலும் பிரெஞ்சு கலாசாரம் அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியின் உரிமையாளர் தனது விடுதியின் முன்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லவ் லாக் ட்ரீயை (காதல் பூட்டு மரம்) நிறுவினார்.
இதை அறிந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக இங்கு பூட்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வரும் 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் சாதி, மதம் கடந்து புதுச்சேரியில் உள்ள ‘லவ் லாக் ட்ரீ’யில் பூட்டு போட்டு அதன் முன்பு ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.






