search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்தான பயணம்"

    • நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
    • உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    செங்கோட்டை:

    குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள நெய் அருவி மற்றும் தனியார் அருவிகளுக்கு செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது குண்டாறு அணைப்பகுதிக்கு மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட அந்த கதவை மர்ம நபர்கள் அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.
    • பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்கு சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் இருந்து மாணவ, மாணவிகள், காலை, மாலை என டவுன் பஸ்களில் வந்து படித்து விட்டு செல்கின்றனர்.

    மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களும் டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். இதனால் காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

    அதனால் பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    மகளிருக்கு இலவசம் என்பதால் அவர்கள் வேறு பஸ்களில் செல்லாமல் இதே பஸ்களில் சென்று வருகின்றனர்.

    எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை விட மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக படிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு பகுதியில் புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என தனியாக சுடுகாடு இல்லாத நிலையில் காலம் காலமாக ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களைப் புதைத்து வருகின்றனர்.

    நெல்லை, திருச்செந்தூர் பிரதான சாலை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி உயரமுள்ள பள்ளத்தில் இறந்தவர்களை ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

    இதனால், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழூர் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இறந்தவர்களை சுமந்து செல்பவர்களும், துக்க நிகழ்வில் பங்கேற்ப வர்களும் தடுப்புக் கம்பியை தாண்டி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் இறங்கி ஏறுகின்றனர்.

    இந்நிலையில், இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் அகற்றி பள்ளத்தில் இறங்குவதற்கு வசதியாக படிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கீழுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வியாபாரி நேற்று உடல் நலம் இன்றி இறந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே தடுப்பு கம்பிகளை தாண்டி 20 அடி பள்ளத்தில் அவரது உடலை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடியாக தடுப்பு கம்பிகளை அகற்றி படிகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணிக்கின்றனர்.
    • கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து ஆவட்டி, மங்களூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் வழக்கம் போல் திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து சென்றது. பெருமுளை சாலையில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்து உணராமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    கல்லூரிக்காக ஏற்கனவே பஸ் ஒன்று இயக்குப்பட்டிருந்தது. தற்போது முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற பின்பக்கம் படிக்கட்டில் ஆபத்து உணராமல் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை  முறையாக இயக்கினால் இதுபோல மாணவர்கள் பயணம் செய்ய நேரிடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • தடியன்குடிசையில் இருந்து கருப்புச்சாமி கோவில் செல்லும் சாலைவரை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகள் உள்ளன
    • கூட்டம் அதிகரிக்கும் போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்து கொள்வதோடு படிக்கட்டில் நின்றபடியும் பயணம் செய்வது நடந்து வருகிறது

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து சித்தூர், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியாக ஆடலூருக்கு தினசரி காலையில் 7.15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்சில் தான் மலை தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பயணம் செய்கின்றனர். ஒருநாள் இந்த பஸ் வராவிட்டாலும் இவர்கள் அன்றாட பணிக்கு செல்வது சிரமமாகிவிடும். இதனால் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இதேபோல் மாலையில் இந்த பஸ்சிலேயே வீடுகளுக்கு திரும்புகின்றனர். குறிப்பாக தடியன்குடிசையில் இருந்து கருப்புச்சாமி கோவில் செல்லும் சாலைவரை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த பாதையில் அனுபவம் மிகுந்த டிரைவர்களால் மட்டுமே பாதுகாப்பாக பஸ்சை இயக்க முடியும்.

    இந்நிலையில் கூட்டம் அதிகரிக்கும் போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்து கொள்வதோடு படிக்கட்டில் நின்றபடியும் பயணம் செய்வது நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் அடிக்கடி நடுவழியில் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுவதும், மழைக்காலங்களில் குடைபிடித்தபடி பஸ்சுக்குள் பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் ஆபத்தான முறையில் அதிக அளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைச்சாலையில் பயணிகள் செல்வதால் அவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பல நாட்களில் மாணிக்கம் சினிமா படத்தில் வரும் காட்சியைப் போல பயணிகள் மூச்சுவிடக்கூட முடியாத நிலையில் பயணிக்கும் நிலை உள்ளது.

    இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சை தரமானதாக ஒதுக்கவேண்டும். மேலும் காலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×