என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியிடம் நாராயணசாமி மனு

    மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறி உள்ளதாக என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுடெல்லி:

    புதுவை காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளை கவர்னர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து புகார் செய்து கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனையடுத்து புதுவை மக்களிடம் 30 தொகுதியிலும் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற ஜனாதிபதியை வலியுறுத்தி கையெழுத்து பெற்றனர்.

    இந்த பிரதியை ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றனர்.

    டெல்லியில் முகாமிட்ட அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் கிரண்பேடி எந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளில் கவர்னர் தலையீடு தொடர்பாகவும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் தொகுதியில் கவர்னர் தலையீட்டால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு குறித்தும் தனித்தனியாக மனு அளித்தனர்.

    சுமார் ½ மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஜனாதிபதி சந்திப்பு குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது கூறியதாவது:-

    மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் விளக்கினோம்.

    அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தர விடுவதையும், மிரட்டுவதையும் தெரிவித்தோம். ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்பப்பெற வேண்டும்.

    இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். கவர்னருக்கு எதிராக புதுவையில் நடந்த போராட்டங்கள் குறித்தும் தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×