என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விலகி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. கவர்னர் கிரண்பேடியின் முட்டுக் கட்டையால் தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை காங்கிரசால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த காரணங்களால் காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது எனக்கூறி கூட்டணியில் உள்ள தி.மு.க. அதிக தொகுதிகளை கேட்டு வந்தது.
அதோடு கூட்டணிக்கு தி.மு.க.வே தலைமை தாங்கும் என்றும், யார் அதிகமாக எம்.எல்.ஏ.க்களை பெறுபவரே முதல்- அமைச்சர் என வலியுறுத்தினர்.
இதனால் தொகுதி பங்கீடை இறுதி செய்ய நீண்ட இழுபறி நிலவியது. இறுதியில் காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற 9 தொகுதிகளை விட கூடுதலாக 4 தொகுதிகளை தி.மு.க. பெற்றுள்ளது.
கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நாராயணசாமி இடம்பெறவில்லை.
அவரது தொகுதியான நெல்லித்தோப்பு தி.மு.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. 5 மாநில தேர்தல்களில் தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் முதல்வராக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
ஆனால், புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி மட்டும் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக போட்டியிடாத நாராயணசாமி முதல்- அமைச்சர் ஆனார்.
தற்போது மாநில தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் உள்ளார். ஆனால். இவர் முதல்- அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.
காங்கிரசை பொறுத்த வரை வழக்கமாக தேர்தலுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றவர்கள் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள். அதுபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை தாங்குகிறார். இவரையும் கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என பா.ஜனதா அறிவித்துள்ளது.
ஆனால், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் ரங்கசாமிதான் முதல்- அமைச்சர் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது புதுவை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
15 தொகுதிகளில் காங்கிரஸ், போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஏனாமை தவிர்த்து 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏனாம் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
காங்கிரசில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியை ராஜினாமா செய்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார். ஏனாமில் ரங்கசாமி போட்டியிடுவார் என அறிவித்த மல்லாடி பிரசாரம் செய்து வருகிறார்.
ஏனாமில் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை தேடி வருகின்றனர். கடந்த காலங்களில் புதுவை காங்கிரசுக்கு ஏனாம், மாகி கை கொடுக்கும் தொகுதிகளாக இருந்தது. மாகி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என வல்சராஜ் அறிவித்துள்ளார். இதனால் மாகி தொகுதியில் வட்டார காங்கிரஸ் தலைவர் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இதனால் மாகி தொகுதியிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனாம், மாகியில் நீண்டகாலமாக காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று 2 தொகுதிகளை தந்தது. தற்போது 2 தொகுதிகளும் கை நழுவியுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. - பா.ஜனதா- பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
புதுவையிலும் இக்கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதுவை பா. ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பா.மக.வுக்கு 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி மாநில அமைப்பாளர் தன்ராஜ் வற்புறுத்தி வந்தார். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு தொகுதி கூட வழங்கவில்லை.
இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து புதுவை பா.ம.க. விலகியது. தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக 9 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணாடிப்பட்டு - வெங்கடேசன், அரியாங்குப்பம் - சிவராமன், மங்கலம் - மதியழகன், தட்டாஞ்சாவடி -கதிர்வேல், லாஸ்பேட்டை நரசிம்மன், மணவெளி - கணபதி, இந்திரா நகர் வடிவேல், ஊசுடு (தனி)- கலியபெருமாள், திருபுவனை (தனி) - சாண்டில்யன்.
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபரான இவரது 2-வது மனைவி எழிலரசி (வயது 45). இவர் காரைக்கால் நேதாஜிநகரில் வசித்து வருகிறார். எழிலரசி மீது, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப் படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பெண் தாதாவாக அவர் வலம் வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு எழிலரசி, விக்ரமன் ஆகியோர் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டினர். இதுதவிர ராதாகிருஷ்ணனின் முதல் மனைவியின் மகன் அஜேஸ்ராமுவை மிரட்டி மதுபான கடை ஒன்றை வாங்கிய வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் எழிலரசி பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அவர், திருமலைராயன்பட்டினத்தில் போட்டியிடப்போவதாக முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்தநிலையில் நேற்று திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று எழிலரசியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எழிலரசி சார்பில், திருமலைராயன்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 தொகுதிகளை பா.ஜனதா அ.தி.மு.க. பிரித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த கூட்டணியில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும் இன்று சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திராநகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரசில் போட்டியிடும் ஏ.கே.டி.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல முத்தியால்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.வில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், விரைவில் என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் பலரும் மனு தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ளனர். நாளை மேலும் பலர் மனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதே நேரத்தில் நாளை அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சின்னதச்சூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41) எலக்ட்ரீசியன். புதுவை லாஸ்பேட்டை நந்தா நகரில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் வேலை செய்தார்.
அப்போது 3-வது மாடியில் கட்டிங் மிஷினில் மின் இணைப்புக்காக ஒயரை இணைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






