என் மலர்
செய்திகள்

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே மனு தாக்கல் செய்த ரங்கசாமி
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 தொகுதிகளை பா.ஜனதா அ.தி.மு.க. பிரித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த கூட்டணியில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும் இன்று சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திராநகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரசில் போட்டியிடும் ஏ.கே.டி.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல முத்தியால்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.வில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், விரைவில் என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் பலரும் மனு தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ளனர். நாளை மேலும் பலர் மனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதே நேரத்தில் நாளை அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






