என் மலர்
தேர்தல் செய்திகள்
மும்பை:
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 11-ந்தேதி, 18-ந் தேதி, 23-ந்தேதிகளில் 3 கட்டங்களாக 303 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருவர் கனவு காண்பதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி தூக்கத்தில் மட்டும் அல்லாது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறார். எந்த பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. நான் இதை தைரியமாக கூறுகிறேன். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசியவாதம் பற்றி மோடி பேசுகிறார். கடந்த 1947, 1964, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. நம்மிடம் உள்ள வலுவான பாதுகாப்பு படையே அதற்கு காரணம். ஒரு தனி மனிதர் அல்ல.
ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பணக்காரர்களின் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காக இல்லை.
தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடி செல்லும் ஒவ்வொரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கும் ரூ.10 கோடிக்கும் மேல் செலவிடப்படுகிறது. இது குறித்து தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பவில்லை. மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ந்தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ந்தேதி 117 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து உள்ளது.
4-வது கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
4-வது கட்ட வாக்குப் பதிவில் 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (6), மராட்டியம் (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8).
இந்த 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 4-வது கட்ட தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் பாதுகாப்பு உள்பட அனைத்து பணிகளிலும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Loksabhaelections2019
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள 63 வேலாம்பாளையம் காளியம்மன் கோவில் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் உடுமலை அருகே உள்ள கொள்ளுபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 35) என்பதும், சொந்தமாக போர்வெல் லாரி வைத்து தொழில் செய்ததும் தெரிய வந்தது.
அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் சேர்த்தார். முத்துசாமியிடம் பணத்துக்கான உரிய ஆவணங்களை சமர்பித்து விட்டு பணத்தை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Loksabhaelections2019
வேலூர்:
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
காட்பாடியில் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் 3 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பின்னர் பறக்கும் படையினர் சோதனைப்பணியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 39 பறக்கும் படையினர் மீண்டும் இன்று முதல் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு போல ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லபடும் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யபடும். இந்த சோதனை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அமலில் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையால் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் அதற்காக தான் இந்த வாகன சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். #LokSabhaElections2019
மதுரை:
மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அங்கு கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். பின்னர் இரவில் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை நடைபெற்ற விஸ்வரூபதரிசனத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு, விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை. 7-வது சம்பள கமிஷன் நிறைவேற்றப்படவில்லை. மோடி தனது 5 ஆண்டு சாதனை பற்றி பேசாமல் புல்வாமா தாக்குதல் பற்றி பேசி வருகிறார். ஜி.எஸ்.டி. வரியால் 6 கோடி மக்கள் வேலையை இழந்து தெருவில் நிற்கின்றனர். 10 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறினார். ஆனால் வழங்கவில்லை.
இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் வேல் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். #Congress #Narayanasamy #Modi
மும்பையில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்.
அவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த தேர்தல் அரசை நியமிக்கப்போகும் தேர்தல் இல்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் தேர்தல்.
எனவே உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வர இருக்கும் கட்சிக்கு வாக்குகளை பதிவுசெய்து உங்கள் வாக்குகளுக்கு வலுசேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது இருக்கும் ஒரே கேள்வி என்ன என்றால் பா.ஜனதா தனது முந்தைய 2014-ம் ஆண்டு வெற்றி எண்ணிக்கையை முறியடிக்குமா என்பது தான். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தடவை கிடைத்த தொகுதிகள் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் 50 இடங்களை கூட பெறமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியானது நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் உடனே முதல்-மந்திரியையும், உள்துறை மந்திரியையும் மாற்றிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கலாசாரத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்.
முந்தைய காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களை தங்களின் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் பயன்படுத்திக்கொண்டது. ஆனால் எங்கள் தலைமையிலான அரசாங்கம் நடுத்தர மக்களால் கிடைத்த நன்மைகளை கோடிட்டு காட்டியது. தொலைபேசி கட்டணம் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது. எங்கள் அரசின் முயற்சியால் தொலைத்தொடர்பு கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கிறது. மேலும் இணைய சேவையும் உலகிலேயே மிக மலிவாக கிடைக்கிறது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரெயில் சேவையை மேம்படுத்துவதே எங்களின் முதல் குறிக்கோளாக இருக்கும். புல்லட் ரெயில் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இதன்காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் 275 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #PMModi #BJP
மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், பா.ஜனதாவைத் தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் பின்தங்கி உள்ளன.
மோடி அரசின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அவருக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளனர். தேர்தல் முடிவுகள் வரட்டும். காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சி அமைக்கும். தேவைப்பட்டால், ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை கேட்டுப்பெறுவோம்.

இதுவரை இருந்த பிரதமர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் பெயரை சொல்லித்தான் ஓட்டு கேட்டார்கள். ஆனால், தன் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் முதலாவது பிரதமர் மோடிதான்.
இது, அந்த கட்சியின் உண்மையான குணத்தை காட்டுகிறது. அவர்களுக்கு மோடி மட்டுமே இருக்கிறார், வேறு யாரும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். #LokSabhaElections2019 #Congress #Mallikarjunkharge







