என் மலர்
திருச்சிராப்பள்ளி
- ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மணப்பாறை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையின் போது தொடங்கி தொடர்ந்து சில மாதங்கள் நடைபெறும். தென் மாவட்டங்களைப் போலவே திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகு விமரிசையாக நடைபெறும்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஒவ்வொரு ஆண்டும் தை 3-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசலின் பின்புறம் டோக்கன் முறையில் கொண்டு வந்து வரிசையில் நிறுத்தப்பட்டது. இதே போல் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காளையர்களும் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவாக வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் களமிறங்கினர். வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சிலகாளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
- முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
துவாக்குடி:
திருவெறும்பூர் அருகே சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல், ஜல்லிக்கட்டு திடல், பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காளைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல், நடை, மண் குத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மண் குத்தும் பயிற்சி குறித்து மாட்டின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளையை அடக்க வரும் வீரர்கள் எளிதில் அடக்கி விடக்கூடாது என்பதற்காக மணல்மேடுகளில் காளைகளை விட்டு மாடுகளின் கொம்புகளால் மண்ணை குத்தி தூக்குவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அவ்வளவு எளிதில் காளை மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் மாட்டாது என்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டான பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் களத்திற்கு காளைகள் தயார் ஆவதை போல களத்தில் சந்திக்க காளையர்களும் தயாராகி வருகிறார்கள். இதை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மக்கள்.
- ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
- ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் திருச்சி சென்றார். நேற்று அதிகாலையில் ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
இதையடுத்து ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி:
திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).
இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.
திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.
- பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
- காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.
தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார்.

பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
- நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
- இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.
திருச்சி:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.
விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.
இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.
வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.
2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.
பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.
- நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை ஹரிஹரன் செய்து வந்தார்.
- டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை ஹரிஹரன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களின் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு ஏன்னு சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று ஹரிஹரன் தெரிவித்தார்.
- சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
- ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.
இதனையடுத்து சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், "நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல... நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.
தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...
நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின..." என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" தெரிவித்தார்.
- புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
- வியாழன், ஞாயிறு ஆகிய இரு நாட்களில் விமான சேவை இயக்கப்படுகின்றன.
கே.கே.நகர்:
திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.
திருச்சி-தமாம் இடையிலான முதல் பயணத்தில் 123 போ் பயணித்தனா். ஞாயிற்றுக்கிழமை செல்ல இதுவரையில் 130 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
திருச்சியிலிருந்து, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபை, சாா்ஜா என இதுவரை மொத்தம் 10 சா்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 11-ஆவது நகரமாக தமாம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமாம் ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால், இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.
- என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன்.
திருச்சி:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வீட்டில் புகுந்தது.
- இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் கோவிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.
நெய்குப்பையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பஸ் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் திடீரென புகுந்தது. இதில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டு க்குள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி ( 40) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுற்றுலா பஸ் வீட்டின் சுவரில் மோதுவதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.
- கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
சென்னை:
அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வருகிற 5-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






