என் மலர்
திருச்சிராப்பள்ளி
- விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் மாநாடு போல் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஒவ்வொரு நாளும் இதில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவியர்கள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். விழா முடிந்த பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையம் மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள வழித்தடங்களில் `டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க உள்ள ஓட்டல் வரையும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
- இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
திருச்சி:
ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
தொலைவில் உள்ள இடத்திற்கு குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதாலும், ரெயில் பயணம், பஸ் பயணம் போன்றவை ஏற்படுத்தும் அலுப்பும் களைப்பும் விமானப் பயணத்தை தூண்டுகிறது, உள்நாட்டு நகரங்களுக்கிடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28சதவீதம் அதிகரித்துள்ளது என்று விமான ஆணையரகம் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதம் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 11-ந் தேதி அதாவது ஒரு நாள் மட்டும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமான பயணி ஒருவர் கூறும்போது,
திருச்சியில் உள்ள எனது மகனை பார்ப்பதற்காக கடந்த 26-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணி விமானத்தில் திருச்சி சென்றேன்.
பயணத்தின்போது விமானத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்தும் அறிவிப்பு செய்தார்கள்.
ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் இருக்கையில் ஒட்டியுள்ள அறிவிப்பு ஸ்டிக்கரிலும் தமிழ் இல்லை.
எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏனென்றால் தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. அருகில் அமர்ந்திருந்தவரிடம் தயக்கத்துடன் கேட்டு தெரிந்து கொண்டேன். விமானத்தில் மட்டுமல்ல, விமான நிலையத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.
இந்தி, ஆங்கிலத்தில் செய்த அறிவிப்பை குறை சொல்லவில்லை. தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருந்தால் என்னை போன்று பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்பை கேட்டுக் கொண்டே தினந்தோறும் விமானத்தில் பயணம் செய்யும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என் போன்றவர்களின் மனக்குமுறலை மனதில் வைத்து, தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக அமையும் என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
- சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
- சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் நேற்று தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24-க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகைகள் பாலம், குரங்கு பாலம், பீம் ஏறுதல், டயர் டனல், தீ பள்ளம், துப்பாக்கிச் சுடுதல், அம்பு எறிதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று தொடங்கியது.
- இந்நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது ஆண்டு வைர விழா மற்றும் பெருந்திரள் பேரணி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிப்காட் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்தும் சாரணர் இயக்கத்தினர் வருகை தந்துள்ளனர்.
- நான்கு பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
- வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு (வயது 32). ரவுடி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன.
மேலும் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார்.
இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்த போது இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.
பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அன்பு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அன்புவுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
மேலும் கொலை நடந்த பகுதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தமிடமாகும்.
கொலையாளிகள் அன்புவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வதை பார்த்து வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகளும் நாலா புறமும் சிதறி ஓடினர். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அன்புவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம்.
- இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவியான வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். ஐ.பி.எஸ். தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்ற நிலையில் இருந்து டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இவர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் நாட்டின் 76-வது குடியரசு தின விழாவையொட்டி நேற்று வந்திதா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை 'ரீல்ஸ்' ஆக பதிவிட்டு உள்ளார்.
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் பதவியில் இருந்து சரக துணைத்தலைவர் பதவிக்கான அந்தஸ்து உயர்வின்போது தங்களது சீருடையில் ஸ்டார் மற்றும் அசோக சக்கர முத்திரை அடையாளங்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிவிக்கும் காட்சிகள் பின்னணி இசையுடன் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தள பதிவுகளில் இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதிகார இணையர் (பவர் கப்பிள்), உங்களது சேவை நாட்டிற்கு தேவை என்றெல்லாம் 'கமெண்ட்ஸ்' குவிந்து வருகிறது.
- அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் பேரணி.
- விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மண்ணச்ச நல்லூர்:
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்
அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட டிராக்டர் பேரணி நடைபெற்றது.
பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய ஆதார விலையை நிர்ணயித்து சட்டமாக இயற்ற வேண்டும், மின் திருத்த சட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்,
விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி புறப்பட்டது.
இதில் தேசிய தென்னி ந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களுடன் பங்கேற்றனர்.
சிறிது தூரம் சென்றதும் பேரணிக்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதயத்தில் அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
- சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ விமானம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந் தேதி இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் விமானத்தில் நுழைந்த போது கழிவறையில் கேட்பாரற்று பை கிடந்தது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் உள்பகுதிக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் கழிவறையில் கிடந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த பையினுள் ரூ.79 லட்சம் மதிப்பிலான 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதனை விமானத்தில் விட்டு சென்றவர்கள் யார்? அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றனரா? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில் நேற்று ஒரே நாளில் 985 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த போது அவர் தனது உடமையில் மறைத்து வெளி நாட்டிற்கு கடத்த இருந்த ரூபாய் 435 வெளிநாட்டு பணங்கள் அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 3,72,000 மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் 30000 என மொத்தம் 4,02,000 மதிப்பிளான இந்திய மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
- 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராம்ஜிநகர்:
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவில் காளைகளும், உள்ளூரைச் சேர்ந்த காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 800 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் மேற்பார்வை நடத்தினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
விலங்கு நல வாரிய பார்வையாளர் மருத்துவர் மூக்கன், திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கணபதி மாறன், ஸ்ரீரங்கம் உதவி இயக்குனர் கணபதி பிரசாத், மருத்துவர்கள் இன்பச் செல்வி, அன்பரசி, சத்யா, அர்ஜுன், சௌந்தர்யா, வனிதா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்து வாடி வாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அ.தி.மு.க. மணிகண்டம் தெற்கு இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் பாகனூர் மணிகண்டன், அளுந்தூர் கிராம பட்டயாதார் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா, பேராசிரியர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் பி.கே. பழனிசாமி மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை.
- சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குழந்தைப்பேறு, தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது.
தனது சாபம் நீங்குவதற்காக சந்திரன் சிவபெருமானை வழிபட்டது, மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இங்கு சமீபத்தில் அதிசய தீர்த்தக்கிணறு வெளிப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவிலின் தென்மூலை பகுதி பல ஆண்டுகாலமாக புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதி பெரியவர்கள் யாரும் அங்கு சென்றதில்லை. கோவிலின் ஒரு பக்கச்சுவர் மட்டும் அதில் தென்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே சிறு குழந்தைகள் கூட அந்த பகுதிக்கு செல்ல பயப்படுவார்களாம்.
புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் திருப்பணி வேலைகளுக்காக அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த புதருக்குள் அதிசய தீர்த்தக்கிணறு இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிசயித்தனர். தீர்த்த கிணறின் மேல்பக்க சுவரின் 4 முனிவர்கள் காவல் காப்பது போன்ற சிற்பம் காணப்பட்டது.
இந்த சூழலில் அங்கு நின்ற பக்தர் ஒருவர் மூலமாக அருள்வாக்கு வந்தது. அந்த அதிசய தீர்த்த குளத்தின் உள்ளே சுமார் 400 அடி ஆழத்தில் முசுகுந்த முனிவர் எனும் சித்தரும், 200 அடி ஆழத்தில் அவரது சீடர் நாதமுனி சித்தரும் தவம் இருப்பதாகவும், அவர்களது தவத்திற்கு சீடர்கள் 4 முனிவர்கள் காவலாக இருப்பதாகவும் அருள்வாக்கு வெளிப்பட்டது. இதை கேட்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
இந்த கோவில் அருகே ஏற்கனவே ஒரு கிணறு உள்ளது. தற்போது புதிதாக துலங்கி உள்ள இந்த கிணற்றில் சித்தர்கள் தவம் இருப்பது குறித்து அருள்வாக்காக கிடைத்த தகவல் அதிசயிக்கத்தக்கதாகும். இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் கோவில் திருப்பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்குள்ள இறைவன் சந்திரமவுலீஸ்வரருக்கு தற்போது இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் பின்பக்கம் சித்தர் ஐக்கியமான சித்தர் பீடம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பக இருக்கிறது.
இந்த அதிசய தீர்த்த கிணற்றில் சித்தர்கள் வாசம் செய்வதால் இந்த கிணற்றை வணங்கி வருகிறோம். சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கோவில் அர்ச்சகர் பரமேஸ்வர குருக்கள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்தவரை இந்த இடத்தில் இப்படியொரு அதிசய தீர்த்த கிணற்றை நான் பார்த்ததில்லை. இப்போது இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு விசயங்கள் நடக்கின்றன. இதை சந்திரபுஷ்கரணை தீர்த்தம் என்று அழைக்கிறோம். தற்போது திருப்பணி வேலைகள் நடப்பதால் இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றார்.
முசிறி நகரம் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னன் முசுகுந்தனால் ஆளப்பட்டது. இந்த நகரின் ஆரம்பகால பெயர் "முசுகுந்தபுரி". இதுவே மருவி பின்னர் முசிறி என்று ஆனது. முசுகுந்த மன்னனே சித்தராகி கோவில் தீர்த்த கிணற்றில் ஐக்கியம் ஆகி தவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
இதனிடையே புதிதாக துலங்கி உள்ள அதிசய தீர்த்த கிணற்றை பக்தர்கள் பக்தியுடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். முசிறி மட்டுமின்றி அக்கம் பக்கத்து கிராமத்தினர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.






