என் மலர்
திருச்சிராப்பள்ளி
- காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. இந்த வேன் துவரங்குறிச்சி முக்கன்பாலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பேருந்தும் வேனும் மோதிக்கொண்டன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சற்று தொலைவில் உள்ள வனத்துறை அலுவலகம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.
கடைசியாக வனத்துறை அலுவலகம் அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு டிங்கரிங் பவுடர் ஏற்றி சென்ற லாரி நின்றது. இந்த வேளையில் அந்த வழியாக திருச்சியை நோக்கி காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது.
லாரியை டிரைவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீர் அகமது (38) என்பவர் ஓட்டினார். அருகில் கிளீனர் அப்துல் சித்திக்(45) அமர்ந்திருந்தார். அதிகாலை வேளை என்பதால் முன்னால் லாரி நின்றுகொண்டிருந்ததை டிரைவர் ஜமீர் அகமது கவனிக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக முன்னால் நின்ற லாரி மீது காலி சிலிண்டர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜமீர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் அப்துல் சித்திக் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ஜமீர் அகமது உடலையும், காயம் அடைந்த அப்துல் சித்திக்கையும் கடுமையாக போராடி மீட்டனர். பலத்த காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து பலியான ஜமீர் அகமது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
- பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
உலக புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை மாதந்தோறும் 2 முறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
கோவிலில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் சரிபார்த்து சொக்க தங்கமாக மாற்றி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்யபடுவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பொன் இனங்களை பிரிக்கப்பட்டது.
இப்பணி இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர், சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் சரவணன், சிவலிங்கம், ராமு, ஆகியோர் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் நடைபெற்று முடிந்தது.
இதில் பொன் இனங்களில் உள்ள அரகு, கல் அகற்றி பயன்படுத்த இயலாத 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க மூதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கோவிலில் இருப்பில் உள்ள 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளையும் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக பொன் இனங்களை பத்திரமாக மூட்டை கட்டி அதற்கு சீல் வைக்கும் பணிகள் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அறங்காவல் குழுவினர், இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கல்ந்துகொண்டு வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், இணை ஆணையர் பிரகாஷ் , கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
- விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் விடுதியில் அரை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விமானத்தை சரி செய்ய உதிரி பாகங்கள் விமான நிறுவனத்தின் சார்பில் இன்று கொண்டுவரப்பட்டு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
- முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்கள் 10 பேர் நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததையடுத்து மதியம் ஒரு மணி அளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். பின்னர் குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர்.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனால் எதிர்நீச்சல் போட முடியாமல் தவித்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தத்தளித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.
ஆனால் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அய்யாளம்மன் படித்துறையில் திரண்டனர்.
பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்பதற்காக ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தனர்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் விவேகானந்த சுக்லா, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டனர்.
இதற்கிடையே நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும்பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டபோது, ஒரு பெரிய முதலை ஆற்றில் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த முதலை புதருக்குள் சென்ற பின்னர் தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
இன்று முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு தேடும் பணி தொடங்கப்பட்டது.
இதில் கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் 50 பேர் ஈடுபட்டனர். அவர்கள் ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா ஆகிய உபகரணங்களுடன் இறங்கி தேடினர்.
பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட ஜாகிர் உசேன் உடலை பிணமாக மீட்டனர்.
மற்ற 2 மாணவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் ஒரு மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
- உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
- வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.நகர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வரின் கருத்து சரியானது. தி.மு.க. செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை காட்டுகிறது.
தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.
வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க. கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ந்தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 'அம்பேத்கர் அம்பேத்கர்' என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா?
- இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டது தொடர்பாக மாநில அரசிடம் பல முறை கூறியுள்ளேன். சோதனைச்சாவடி தாண்டி எப்படி இங்கு வந்தது. தம்ழகத்தில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
வெளியே செல்ல வேண்டும் என்றால் அச்சமாக உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. செவிலியர்களின் கோரிக்கை ஏற்கவில்லை. விவசாயிகள், மருத்துவர்கள் பல போராட்டம் நடத்துகிறார்கள்.
மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தி.மு.க. நல்லாட்சி கொடுக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வையுங்கள்.
ஜல்லிகட்டு போட்டிக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம். எதற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் எந்த நச்சு திட்டமாக இருந்தாலும் அதில் கருணாநிதி கையெழுத்து போட்டு இருப்பார்.
பெருமைமிகு அடையாளங்களை மூடி விட்டு, அனைத்திற்கும் கலைஞர் பெயரை சூட்ட தி.மு.க. அரசு நினைக்கிறது. தி.மு.க. சாதனைகளை போர் பரணி பாட வேண்டும். சட்டம், ஒழுங்கி பிரச்சனை உள்ள நிலையில் தி.மு.க.வின் போர் பரணியை கேட்க நான் தயாராக இருக்கிறேன்.
வேல்முருகருடன் இணைந்து பணியாற்ற அழைத்தேன். அப்போது தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று என்னை அழைத்தார். ஏனெனில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு பாதுகாப்பு இருக்காது. கட்சியை வளர்க்க முடியாது என்று கூறினார்.
அதனால் தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று அழைத்தார். நீங்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் தினகரனுடன் கூட்டணி எதற்கு? தி.மு.க.வுடனே கூட்டணி அமைக்கலாமே என்று நான்தான் கூறினேன்.
நான் இஸ்லாமியரின் ஓட்டை பொறுக்க நடந்து கொள்கிறேன் என்கிறார். என் தலைவன் மீது ஆணையாக சொல்கிறேன். இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டது இல்லை. இனிமேலும் போடுவார்களா என்று தெரியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம். நான் ஏன் பி டீம் ஆனேன். ஏ டீமாக தி.மு.க. இருப்பதால் நான் பி டீம் ஆகி விட்டேன்.
இந்த நாட்டில் தீர்ப்புகள்தான் சொல்லப்படுகிறது. நீதி வழங்கப்படுவதில்லை. இந்த நாட்டில் தீர்ப்பு மன்றங்கள் தான் உள்ளது. நீதிமன்றங்கள் கிடையாது. வர்கீஸ் பானு வழக்கில் கூட அனைத்து குற்றவாளிகளும் விடுதலை ஆகி விட்டனர்.
இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும். பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? பா.ஜ.க.விற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.
சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா? சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம். இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.
திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை? முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
- இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிர பா.ஜ.க.விற்கு வேறு கொள்கை இருக்கிறதா?
* இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
* இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும்.
* பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
* பாஜகவிற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.
* சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக நடத்துமா?
* சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள்.
* இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம்.
* இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனனர்.
* குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது யார்?
* உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா?
* உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.
* திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை?
* முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? என்றார்.
- இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.
- புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் துறையூர் தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் தனது அண்ணன் திருமணம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த இளம்பெண் சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது அந்த இளம்பெண்ணுக்கு, காதலன் செண்ட்பாட்டில் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த இளம்பெண் தனது காதலனின் நண்பனான குப்பன் மகன் மூர்த்தி (வயது 27) என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று, தன்னை தனது காதலனின் வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.
இளம்பெண்ணை துறையூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று , பலவந்தமாக கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் இந்த சம்பவத்தை பற்றி வெளியில் கூறினால், இளம்பெண்ணின் குடும்பத்தினரை காலி செய்து விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன இளம்பெண் நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் தெரிவிக்காமல், மீண்டும் செங்கல்பட்டு சென்று பணியில் சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மூர்த்தி இளம்பெண்ணின் காதலனுக்கு போன் செய்து கற்பழிப்பு சம்பவத்தை பற்றி போதையில் உளறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன், இதைப் பற்றி இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து பாதிப்படைந்த இளம்பெண், பெற்றோரின் துணையுடன் நேற்று துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தியை துறையூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். துறையூர் அருகே இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.
அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.நடிகர் விஜய் மிகப்பெரிய திரைப்பட கதாநாயகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள். அதனால் போக்குவரத்தை சரி செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்படும். எனவே வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை.
மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.
இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.
மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.
கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
இளையராஜா நகையும் சதையும் உள்ள மனிதன் அல்ல அவர் இசை தெய்வம். அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மாபெரும் கலைஞன் தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?
- மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
* சிறையில் 50 நாட்கள் பாஷாவுடன் இருந்த காலத்தில் இருந்து அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.
* இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எப்படி எடுத்து செல்வது?
* ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது இஸ்லாமிய அமைப்பினர் யாராவது போராடினார்களா?
* விநாயகர் ஊர்வலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்கிறது.
* பாஷா குற்றவழக்கில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை.
* குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாதா?
* பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?
* 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி 26 ஆயிரம் மக்களை கொன்றுகுவித்த ஒரு நாட்டின் தலைவரை பற்றி பேசமாட்டீர்கள். அந்த செயலையும் பேசுங்க.
* ஒரு தரப்பில் மட்டும் பேசிக்கொண்டு இருப்பது எப்படி?
* மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு. அது குறிப்பாக தமிழ் பேரினத்தின் மாண்பு.
* மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க கூடாது.
* பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதை சடங்கு என்பது தவறான வார்த்தை. அப்படி சொல்லக்கூடாது. விஜய் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை என்றார்.
- திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.
- சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திருச்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து பாசத்தோடு செய்வோம். அதனால்தான், வரலாற்றுப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.
சிறுபான்மையின சகோதர, சகோதரிகளின் அரணாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களின் உரிமை, வாழ்வாதாரத்தை காப்பதில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து பாதுகாப்போம்.
பெரும்பான்மையை பார்த்து பயப்பட தேவையில்லாத சூழலில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது தான் மதச்சார்பின்மை கொள்கையின் மகத்துவம். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். இருந்தாலும் இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் நம்மை கவலைப்பட வைப்பதாக உள்ளது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிடல் மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






