search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srirangam Ranganatha Temple"

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.
    • பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவின் 9-ம்நாளான நேற்று நம் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாதித்தருளினர்.

    தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சேர்த்தி சேவைக்கு செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர் வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேத்தி மண்டபம் வரை 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 12 இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர்கூலரும் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின்விசிறிகளும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், நீர் மோர், லட்டு ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (27-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார்.
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலத்துடன் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி தொடங்கிய பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியட்டாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல் வெளிக்கு வந்த நம்பெருமாள்

    மாலை 6 மணிவரை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இன்று (31-ந்தேதி) அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக்கொள்ளையனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார்.

    வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்படாள் வாசல்வழியே மணல்வெளிக்கு வந்துவிடு வதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை.

    10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    ×