search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni utsavam"

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.
    • பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவின் 9-ம்நாளான நேற்று நம் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாதித்தருளினர்.

    தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சேர்த்தி சேவைக்கு செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர் வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேத்தி மண்டபம் வரை 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 12 இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர்கூலரும் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின்விசிறிகளும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், நீர் மோர், லட்டு ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (27-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.
    • பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌

    இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர், பங்குனி உற்சவத்தில் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் ரெங்கமன்னாரும் ஆண்டாள் நாச்சியாரும் பவனி வருகின்றனர். அது என்ன பரங்கி நாற்காலி சேவை? பரங்கி நாற்காலி என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.

    இந்த வாகனம் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது. தென் தமிழகத்தின் பல வைணவ ஆலயங்களில் இந்த வாகனம் உண்டு. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தில் பரங்கி நாற்காலி வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் – ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் ஆறாம் நாளில் ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் இருவரும் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் உலா வருகிறார். அந்த சேவை இன்று.

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று ஸ்ரீரங்கநாதர் திருமண உற்சவ வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்! ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதி பிரம்மோத்ஸவம் என்கிறார்கள்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அது மட்டுமா? ஸ்ரீராமா னுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத் தான்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள்.

    அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

    இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்ஸவம் நடைபெறுகிறது.

    சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக்குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தாள். அவளை ரங்கநாதன் திருமணம் செய்தார் இதனால் உறையூரில், கமலவல்லி நாச்சியாருக்கு கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்-ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார், சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார்.

    உறையூரில் நாச்சியாருடன் வீதியுலா வந்து விட்டு, பின்பு ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன். ‘பெருமாளைக் காணோமே...’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?

    எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதை அறிந்து, கோபம் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறித்தாள்.

    பெருமாள் தன்னைப் பார்க்க வரக் கூடாதென தடை செய்வார் பிராட்டியார் ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததான் காரணம்.

    அதன் பிறகு நிகழ்கிற அவர்களின் உரையாடல் கள்தான், சுவாரஸ்யம்! ‘உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன, உங்களின் நகைகள் கலைந்து கிடக்கின்றன. உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று ரங்கநாதரை அணு அணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக் கணைகளாக்கி தொடுப்பாள் தாயார்.

    ‘என்ன... என்னையே, சந்தேகப்படுகிறாயா? உனக்காக, கடலில் மூழ்கி விடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்து விடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?’ என, தன் மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன் னார் ஸ்ரீஅரங்கன். இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

    பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக் கொள்ள நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும் இவ்விழாவை காண் பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்த பெயர் உண்டானது.
    ×