என் மலர்tooltip icon

    தேனி

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
    • பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

    கூடலூர்:

    தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.

    பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்களான நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் நீங்கள் எப்படி கொடியேற்றலாம்? நீங்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடாது, கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அவர்களுடன் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    • குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூர் 4-வது வார்டு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரெங்கன் (வயது56). இவருக்கு மீனா என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.

    ரெங்கன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    ரெங்கன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இவரும் அவரது மூத்த மகன் மணிகண்டன் (31) என்பவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    போதையில் இவர்கள் தங்கள் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசிக்கொள்வதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் 2 பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.

    அதன்பின் வீட்டிற்கு தூங்க சென்ற தனது மகனை ரெங்கன் துரத்தி சென்று அரிவாளால் வெட்டினார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    போதையில் கொலை செய்ததை அறிந்ததும் ரெங்கன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மீனா சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரெங்கனை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஜக்கையன், முருக்கோடை ராமர், கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

    பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

    • உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
    • எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    கம்பம்:

    தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (வயது 55) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 4 நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். தேவாலயத்துக்கும் அவர் வராமல் இருந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மந்திப்பாறை பகுதியில் எரிந்து கிடந்தது மாயமான பாதிரியார் என உறுதியானது.

    அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துகிடந்த பாதிரியாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.


    இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.

    இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர், அரசரடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3-வது முறையாக அணையின்நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று பகல்பொழுதில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து 5224 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடிப்பதால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 71 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வரத்து மற்றும் இருப்பு அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு 1702 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து நீர்திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 281 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மாநில அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டத்தில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து இடுக்கி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை முதல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. ஆட்டோ, வாகனங்கள் இயக்கப்படாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    தமிழகத்தின் எல்லைப் பகுதியான போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் போடி முந்தல் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் கேரள தேயிலை மற்றும் ஏலத்தோட்டத்திற்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு உள்ளே திருப்பி விடப்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குமுளி, கம்பம் மெட்டு சோதனைச்சாவடியிலும் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.

    • தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமராவதி (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்து சோர்வுடன் காணப்பட்டார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அமராவதிக்கு உணவுக்குழாயில் புற்று நோய் பாதித்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 8-ந் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர்கள் முத்துலெட்சுமி நாராயணன், குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் அமராவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். தனியார் ஆஸ்பத்திரியில் மட்டுமே செய்யப்படும் இது போன்ற அறுவை சிகிச்சையை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செய்து அமராவதி குணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கல்லூரி டீன் பாலசங்கர் கூறுகையில், உணவுக்குழாய் புற்று நோய் ஏற்பட்டால் மார்பை கிழித்து அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் அமராவதிக்கு கழுத்து, வயிறு பகுதியில் துளையிட்டு புற்று நோய் பாதித்த உணவுக்குழாய் பகுதியை அகற்றி செயற்கை உணவுக்குழாய் பொருத்தப்பட்டது.

    அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார். சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    • ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை நீடித்து வருகிறது. போடி, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார வராக நதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2931 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2481 கன அடி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.

    கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அங்கு உற்சாகமாக குளித்து சென்றனர்.


    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 820 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 290.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 15, போடி 11.8, வைகை அணை 24.2, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 15, பெரியகுளம் 31, வீரபாண்டி 19.8, அரண்மனைபுதூர் 20.6, ஆண்டிபட்டி 33.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×