என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் கஜா புயலால் நனைந்து வீணாகியது. இதனால் அவற்றிற்கு மாற்றாக மாணவர்களுக்கு புதிய புத்தகப்பை, சீருடை, புத்தகங்களை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    இதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி துரை. திவ்யநாதனின்வீட்டின் முன்னர் ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காரும் அங்கு நின்று கொண்டிருந்தது.

    மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் திருநாவுக்கரசர் வந்துள்ளாரா? என கேட்டு தெரிந்து கொண்டார்.


    திருநாவுக்கரசர் வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராத வகையில் திவ்யநாதனின் வீட்டிற்குள் சென்றார். இதனை பார்த்த கட்சியினர் நடப்பது என்ன என தெரியாமல் திகைத்தனர்.

    பின்னர் அங்கு கட்சியினருடன் அமர்ந்திருந்த திருநாவுக்கரசரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்படுவதாக கூறி சென்றார். அப்போது திருநாவுக்கரசர் வாசல் வரை வந்து இன்முகத்தோடு அவரை வழியனுப்பினார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான விஜயபாஸ்கரும் கஜா புயல் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #gajacyclone

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் தென்னை, மா, தேக்கு போன்ற மரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. தென்னையை நம்பியுள்ள விவசாய குடும்பங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேதமடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் வீதமாவது கணக்கிட்டு நிவாரணம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் உணவு சரியாக போய் சேரவில்லை. அதேபோல் கடற்கரையில் உள்ள மீனவ படகுகள் குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான மதிப்புடையது. எனவே சேதமடைந்த படகுகளுக்கான கடன் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய, கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

    மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைது செய்வது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ பார்வையிட வராதது வருத்தமளிக்கிறது என்றார். #thirunavukkarasar #gajacyclone

    கஜா புயல் காற்றால் பல்வேறு திசைகளில் பறந்து சென்ற 50 சதவீதம் வவ்வால்கள் மீண்டும் ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளதால் நெடுவாசல் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #GajaCyclone #Bats
    புதுக்கோட்டை:

    கஜா புயலின் பாதிப்பு மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. இயற்கை சீற்றத்தை முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட அவை பல இடங்களில் பலியாகியும், சில இடங்களில் மறுவாழ்வும் பெற்றுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கரில் சுற்றிலும் புதர்ச்செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. அந்த ஆலமரத்தின் அடியில் அய்யனார் கோவில் உள்ளது.

    இந்த மரத்தில் இருந்து ஒடிந்து விழும் ஒரு குச்சியை கூட யாரும் விறகுக்காக தொடுவது இல்லை. அதே போல் இந்த மரத்தில் உள்ள வவ்வால்களை யாரும் வேட் டையாடுவதும் இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இதே இடத்திற்கு வந்து விடுவது வழக்கம்.

    அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தைக் கேட்டு தான் ஊரே எழும். இந்த வவ்வால்கள் நலன் கருதி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிப்பது கிடையாது.



    இந்நிலையில் கஜா புயலின் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் பெரும்பாலான கிளைகள் முறிந்து விட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்த மரத்தில் இருந்து எங்கெங்கோ சென்று விட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்து விட்டன.

    10 நாட்கள் ஆகி சற்றே இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பல்வேறு திசைகளில் பறந்து சென்ற வவ்வால்கள் மீண்டும் இந்த ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளன. அந்த மரத்தில் எஞ்சியுள்ள கிளைகளிலும், குச்சிகளிலும் தங்கியுள்ளன.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், இம்மரத்தில் இருந்த பாதி வவ்வால்கள் புயல் காற்றால் இறந்து மரத்தடியிலேயே விழுந்து விட்டன. இங்கிருந்து வெளியேறிய சில நாட்கள் வேறு எங்கோ வசித்த வவ்வால்கள் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் இந்த மரத்துக்கே வந்திருப்பது பிரிந்து சென்ற சொந்தங்கள் எங்களை மீண்டும் பார்க்க வந்தது போல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அதே சமயம் புயலால் இப்பகுதியில் இருந்த பழத் தோட்டங்கள் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில் இந்த வவ்வால்கள் கடந்த ஒரு வாரமாக பட்டினியால் வாடுவதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றார்.  #GajaCyclone #Bats


    புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி தயாரித்து கொடுத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். #GajaCyclone #Vijayabaskar
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 4 ஆயிரத்து 62 குக்கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், 8 ஆயிரத்து 300 மின் மாற்றிகளும் முழுமையாக சேதம் அடைந்தன.

    அவற்றை சீரமைக்கும் பணியில் தமிழகம், கேரளா, கர்நாடாக மாநில மின் வாரிய ஊழியர்கள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் உயிரை துச்சமென மதித்து மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின் விநியோகம் செய்யும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    இதில் கடந்த வாரம் கீரனூர் பகுதியில் ஆபத்தான முறையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். இதுபோன்று உயிரை பணயம் வைத்து மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவோரை அமைச்சர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில்  இருந்து வந்துள்ள ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை அருகே மாத்தூர் பள்ளியில் தங்கியுள்ள மின் வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

    இந்தநிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு சென்றார். அவர்களது பணியை பாராட்டிய பின்னர் இரவு உணவாக அவர்களுக்கு சப்பாத்தி தயாரித்து, தானே சுட்டு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்சார விநியோகம் செய்யப்படும். இதுவரை 4062 குக்கிராமங்களில் 2000 கிராமங்களில் மின்சார விநியோகம் சீரடைந்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களில் இரவு, பகல் பாராது நடந்துள்ளது. இதில் பல்வேறு சவால்களை மின் வாரிய ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.

    அதேபோல் பழுதான, சேதமடைந்த 8300 மின் மாற்றிகளில் 5100 சரி செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ளவைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை பாராட்டியுள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

    இதன் மூலம் நாங்கள் உறங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்வோம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Vijayabaskar
    அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர். #GajaCyclone
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. புயலுக்கு தப்பிக்க முடியாமல் வீடுகளில் உள்ள மேல்கூரைகள், சேதம் அடைந்தன.

    கிராம பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சார பணிகள் முடிந்து படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இந்த நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர்.

    இதுகுறித்து மின்வாரிய பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் 40 பேரும் சேலம் பகுதியை சேர்ந்தவர்கள். இரண்டு பிரிவுகளாக பிரிந்து அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் வேலை பார்த்து வருகிறோம். இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் நாங்கள் வேலை முடிந்து வந்ததும் எங்களை உற்சாகப்படுத்தி எங்களிடம் நன்கு பழகி வருகின்றனர்.

    நாங்கள் தினமும் காலையில் வேலைக்கு சென்று அந்த பகுதிகளில் உணவுகளை சாப்பிட்டுவிட்டு இரவு தான் மண்டபத்திற்கு வருவோம். நேற்று இரவு வரும்பொழுது பொதுமக்கள் சிலர் மண்டபத்தின் வாசலில் நின்று வரவேற்றனர். பின்னர் சாப்பிட வாருங்கள் என அழைத்தனர். அங்கு சென்று பார்த்தால் தடபுடலான பிரியாணி விருந்து அளித்தனர். இதை பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது ஊரில் கஜா புயல் பாதித்த போது பல மின்கம்பங்கள் சாய்ந்தது. அதனால் 5 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பணியாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து படிப்படியாக மின்சாரம் வழங்கினர்.

    இதனையடுத்து அவர்களுக்கு ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி அவர்களிடம் சொல்லாமலேயே எல்லாம் தயார் செய்து இரவு அவர்கள் வந்தவுடன் மகிழ்ச்சி பொங்க பரிமாறினோம் என்றனர். #GajaCyclone
    அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்.
    அன்னவாசல்:

    கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட கிராம நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேரிக்கப்பட்ட 100 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சீனி, சோப்பு, எண்ணெய், சேமியா, பிஸ்கட், பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

    அதனை மகிழ்வோடு பெற்று கொண்ட கிராம மக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தினமும் பிஸ்கட் வழங்கும் படியும், சமையல் பொருட்களை வைத்து பள்ளி நாட்களில் சமைத்து வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.

    அதனை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:-

    கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட் களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வந்திருந்த பொருட்களில் சோப்பு, பிஸ்கட், ஷாம்பு, சீயக்காய், பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ள மளிகை பொருட்களை வைத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கு முடிவெடுத்துள்ளோம் என்றார். பொதுமக்களும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க எங்களை அழையுங்கள். நாங்கள் வந்து குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையா மற்றும் கிராம நிர்வாகிகள் முத்தன், முருகேசன், பால்கண்ணு, பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Edappadipalanisamy
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy
    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் டி.டி.வி. தினரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் புறப்பட்டனர். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி:

    கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது அங்கு டி.டி.வி. தினரனும் வந்திருந்தார். இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    முன்னதாக தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயப்படுகின்றனர் என்று கறம்பக்குடியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் நின்றபடி பேசியதாவது:-

    கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபோது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நம்பினோம். ஆனால், புயல் பாதிப்பிற்குள்ளாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம், குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

    நிவாரண முகாம்களில் உள்ள டெல்டா பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால் துன்பப்பட்டு வருகின்றனர். தார்ப்பாய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விளம்பர பதாகைகளை கட்டி குடியிருக்க வேண்டிய நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    புயலை வைத்து நான் அரசியல் செய்வதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொண்டு நிறுவனம்போல் செயல்பட்டு நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயன்படுகின்றனர். அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தானே புயலின்போது மறைந்த ஜெயலலிதா அரசு செயல்பட்டதைபோல, தற்போதைய புயலின்போது அரசு செயல்படவில்லை. இதனால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #GajaCyclone
    நெடுவாசலில் கஜா புயலால் தென்னை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #gajacyclone

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 40). இவர் அப்பகுதியில் 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கஜா புயலால் அவரது தென்னை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்தன.

    இதனால் மனவேதனையில் இருந்து வந்த திருச்செல்வம் நேற்றிரவு திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்செல்வம் இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கருப்பக்கோன் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 64). இவர் அப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கஜா புயலால் அவை அனைத்தும் சேதமடைந்து விட்டன. இதனால் மனவேதனையில் இருந்து வந்தார்.


    இந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு நெடுஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.  #gajacyclone

    கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்துக்கு முக ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #MKStalin #Duraimurugan
    புதுக்கோட்டை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இப்போது தி.மு.க.வுடன் உள்ள கட்சிகள் கடைசி நேரத்தில் விலகலாம். தி.மு.க.வை இதுவரை எதிர்த்து வருபவர்கள் கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்றும் , ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் நட்புடன் உள்ளனர் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

    இது தி.மு.க. கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் முன்பு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது வைகோவிடம் நிருபர்கள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ கூறியதாவது:-

    கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து ம.தி.முக.வினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு கூற வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.



    இந்தியாவை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ரத்த களரியாக்கப்பார்க்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை அறிவிக்க உள்ளது.

    கஜா புயல் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு வெறும் 4 சதவிதம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. பட்டேல் சிலையை அமைக்க 3 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசு தூக்கி எறியப்படவேண்டிய அரசு இவ்வாறு வைகோ கூறினார்.

    முன்னதாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்திற்குட்பட்ட முள்ளூர், பெருங்களூர், ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

    கந்தர்வக்கோட்டை பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொதுமக்களை சந்தித்து ஆறுதல்கூறிய போது எடுத்தப்படம்

    கஜா புயலால் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு ஒன்று தெரியாது. எட்டு வழிச்சாலைக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து விட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.1100 அறிவித்தால் நியாயமா?. ஒரு ஏக்கர் வாழை மரத்திற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரமும், மரத்தை அகற்ற ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயலில் வீடு இழந்தவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேக்கு மரத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீட்பு பணியில் உயிரை கொடுத்து பணியாற்றி கொண்டிருக்கும் மின்சார ஊழியர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நாங்கள் தனி அறிக்கையை தயாரித்து வருகின்றோம். நான் யாரையும் குறை சொல்லவும், விமர்சனம் செய்யவும் வரவில்லை. தமிழகத்திற்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்குள் எந்த பகுதிக்கு பிரதமர் மோடி வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம். தற்போது புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் மத்திய குழு ஒரு அயோக்கிய குழு. தமிழக அரசிற்கு முதுகெலும்பு போய் 2 ஆண்டுகள் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #MKStalin #Duraimurugan
    புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterJayakumar #GajaCyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், கட்டுமாவடி, பிள்ளையார்திடல், வடக்கு புதுக்குடி உள்ளிட்ட இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    கடலோர பகுதிகளில் புயலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிவாரண பணிகளில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் தொடர்மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் குறித்த பல்வேறு சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மத்திய குழு ஆய்வுக்கு செல்ல முடியாது. அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து விரைவில் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தால்தான் நிதியும் விரைவாக கிடைக்கும்.


    தமிழக அரசு கோரியப்படி ரூ.15ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்கியதில் பின்பற்றியதை இம்முறை மத்திய அரசு பின்பற்றாது என நம்புகிறோம்.

    விவசாய கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு.அதை தமிழக முதல்வர் முடிவு செய்வார். தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக உள்ளனர். மக்களை அமைச்சர்கள் சந்திக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்று பேசக்கூடாது. எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யக்கூடாது. புயலில் இருந்து மீனவவ்களை காப்பாற்றி உள்ளோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தானே. வர்தா. ஒக்கி என‌ பல புயல்களில் பயிற்சி எடுத்தவர்கள் நாங்கள். யாரும் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பல விமர்சனங்களை சந்தித்தவர்கள் நாங்கள். இது அரசியல் ஆக்குவதற்கான களம் அல்ல. கஜா‌ புயல் மீட்புக்குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் வழங்கலாம். மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யக் கூடாது.

    கஜா புயல் மீட்புக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட‌ அவசியம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய ஸ்டாலினை யாரும் தடுக்கவில்லை. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து விட்டு ஓடி ஒளியும் ஆட்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம், மக்களோடு மக்களாக இருக்கின்றோம். யாரும் எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. அவரவர்கள் வேலையை பார்த்தாலே போதும். நாங்கள் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்று கூறுவது திட்டமிட்ட சதி. இந்த சதியை ஒரு குழுவாக இருந்து செயல்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #GajaCyclone

    ×