என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்துள்ளார். 

    சம்பவத்தன்று கார்த்திகேயனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயலை சேர்ந்தவர்கள் சார்லஸ் (வயது 32), மார்கோணி (45). இருவரும் பைக்கில் மணமேல்குடி பகுதியில் உள்ள ஏகப்பெருமாளுரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மார்கோணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தவர்கோட்டை அடுத்து உள்ள வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசின் புயல் நிவாரணநிதி முறையாக கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை அடுத்த வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை  மரக்கட்டைகளை போட்டு  மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்து தகவல்  அறிந்ததும் கந்தவர்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பஸ் பயணிகள் அவதி அடைந்தனர். 
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழ மழையூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (25).இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி சென்று விட்டு மீண்டும் மழையூருக்கு திரும்பி கொண் டிருந்தார். அப்போது சாலையில் அதே பகுதியை சேர்ந்த காமேஸ்வரி (21) மற்றும் சரண்யா (24) தனது குழந்தை யோகப்பிரியாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். உடனே பாண்டியன் அவர்கள் 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து மழையூருக்கு அழைத்து சென்றார். 

    ஆலங்குடியை அடுத்த மேலப்பட்டி ராசிமங்கலம் அருகே சென்ற போது வடகாட்டை சேர்ந்த சையது ஹக்கிம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சையது ஹக்கிமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தாய், 2 குழந்தைகள் பலியாகினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28).

    இவர்களது மகன் சஞ்சீவி மலை (3), மகள் சங்கவி (2). கடந்த 17-ந்தேதி மாலை பொன்னுமணி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடினர்.

    அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீடு முழுவதும் பரவி வீடுகளில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களில் பற்றி எரிந்தது. பொன்னுமணி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை.

    இதனால் 3 பேர் மீதும் தீப்பற்றியதில் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தீப்பற்றியதில் 3 பேரும் பலத்த காயமடைந்திருந்தனர்.

    உடனே அவர்களை பொதுமக்கள் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பொன்னுமணி, சஞ்ஜீவி மலை, சங்கவி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கியாஸ் சிலிண்டர் கசிவால் தாய்-2 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விராலிமலை இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலியானார். 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். #jallikattu
    விராலிமலை:

    விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று பகல் 12 மணி வரை 375 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். 

    சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

    இதனிடையே வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை ஒன்று வீரர்களின் பிடியில் சிக்காமல் மைதானத்தில் இருந்து வெளியே பாய்ந்து சென்றது. அப்போது அந்த காளை திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (வயது 25) என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக  புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். #jallikattu
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. 

    கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் ராமு (25), சதீஷ்குமார் (43) ஆகியோர் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர். 

    இந்நிலையில், 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார்.

    விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
    கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைத்தார். #ViralimalaiJallikattu
    தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

    ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.



    இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.

    கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆலங்குடி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாரப்பூரில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கியதில் இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் இதுவரை அங்கன்வாடி மையம் சீரமைக்கபடவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    மேலும் பழுதடைந்த அங்கன் வாடிமையத்தின் மேற்கூரை கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை 20-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும். அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு காரும்(சிப்ட்), 25 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புல்லட்(இரண்டு சக்கர ) வாகனமும், கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.

    இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்று போட்டியை ஆய்வு செய்கின்றனர்.

    போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற முன்னணி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. சுமார் 2500 காளைமாடுகள் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    நாளை நடைபெற இருக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    விராலிமலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட உள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #Jallikattu #Jallikattu2019
    ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.

    தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை அருகே அரிசி ஆலை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை அம்பாள்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 60). இவர் வயலோகத்தில் கோவில் வீதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் அந்த அரிசி ஆலை உள்ளே பார்த்த போது, அங்கு சிங்கமுத்து விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×