search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja Strom"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆலங்குடி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாரப்பூரில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கியதில் இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் இதுவரை அங்கன்வாடி மையம் சீரமைக்கபடவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    மேலும் பழுதடைந்த அங்கன் வாடிமையத்தின் மேற்கூரை கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க கோரி கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். #GajaCyclone
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அருகில் உள்ள மாவடுகுறிச்சி (கி) ஊராட்சி நாடாகாடு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மற்றும் நிவாரண உதவித்தொகை, புயல் பாதித்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும் கிடைக்கவில்லையாம்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த நாடாகாடு கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிவாரணம் வழங்காவிட்டால் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர்.

    தலைமை இடத்து துணை தாசில்தார் யுவராஜ், கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பரமானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், இளம்பரிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #GajaCyclone
    தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட முதல்வர், புயலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaRelief
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. சுமார் 30 லட்சம் மரங்கள் சரிந்து விழுந்தன. குறிப்பாக மக்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை, வாழை மரங்கள் நாசமாகி விட்டன.

    கஜா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.  

    இந்நிலையில்  புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட முடிவு செய்தார்.

    இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்றார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.



    திருச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர்கள் ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர். அங்குள்ள ஆயுதப்படை மைதானத்தில் இறங்கிய அவர்கள் கார் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர்.

    மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதிகளில் கஜா புயலால் இடிந்த வீடுகள், மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் கஜா புயலால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி உதவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வீடு மற்றும் உடமைகளை இழந்த 36 பேருக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaRelief  
    கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது.

    அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபரிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் வருகிற 15-ந்தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.

    இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாகை, கடலூர், காரைக்காலில் வழக்கத்தை விட கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயரும். எனவே மீனவர்கள் 16-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி இரவு வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.



    15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.

    தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

    15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக் கூடும். காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போதைக்கு 15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ. மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதை எச்சரிப்பதாகும்.

    புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்யும்.

    தற்போது புயல் தெற்கு திசை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gajastorm #storm #rain
    கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Gajastorm

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் காரணமாக வட தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 14-ம் தேதி பலத்த மழையும், 15-ம் தேதி ஒரு சில இடங்களில் மட்டும் மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசின் மோசமான கடந்த காலம் காரணமாக புயல், மழை என்பன போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே மக்களின் உடல்கள் அச்சத்தில் நடுங்கத் தொடங்குகின்றன.

    இயற்கையை கட்டுப்படுத்துவதோ, அதன் சீற்றத்தை தடுத்து நிறுத்து வதோ எந்த சக்தியாலும் இயலாதது ஆகும். கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களின் உதவியுடன் புத்திசாலித்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமாகும்.


    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த முன் எச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் முன்னெச்சரிக்கைப் பணியாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படைகளை நிறுத்த வேண்டும்.

    வடமாவட்டங்களில் ஒன்றியத்துக்கு ஓர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வீதம் நியமித்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.

    புயல் மழைக்காலங்களின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அம்மாநில அரசாங்கம் மிகச்சிறப்பாக சமாளித்தது. தேவைப்பட்டால் அம்மாநில அதிகாரிகளின் ஆலோசனையையும் பெறலாம்.

    புயல் தாக்கிய பின் பாதிப்புகளை சரி செய்வதை விட, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது என்பதால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்மூலம் கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #Gajastorm

    ×