என் மலர்tooltip icon

    மதுரை

    • சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்காந்தி மதிநாதன் ஐகோர்ட் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் மல்லான் கோட்டை கிராமத்தில் "தி மெகா புளூ மெட்டல் ஸ்டோன் கிரஷர்" என்னும் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வந்தது.

    அந்த குவாரியில் ஏராளமானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர். பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து எம்சாண்ட் தயாரித்து இரவு நேரத்திலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடந்த மே மாதம் 20-ந்தேதி காலை கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ். கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. மாவட்ட கலெக்டர், இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மாவட்ட கலெக்டர் சட்ட விரோத குவாரியைத் தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆகவே 6 நபர்களின் இறப்பிற்கு காரணமான கல் குவாரி விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. மேலும் கல்குவாரிக்கு குத்தகை காலம் முடிந்து விட்டது. ஆனால் முடிந்து விட்ட குத்தகையை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயமாக உள்ளது.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைக்கவும், மல்லான்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், எஸ்.எஸ். கோட்டை போலீஸ் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணாய் காஸ், காலாவதியான குவாரியில் ஆறு பேர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முறையாக கமிட்டி அமைத்து கண்காணிக்காததே விபத்துக்கு காரணம். எனவே குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • விபத்தில் பலியாகி விடுவோம் என்பதை உணர்ந்த மகேஸ்வரி தனது கையில் இருந்த சிவநித்திசை சாலையின் ஓரமாக தூக்கி வீசினார்.
    • விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (40), பேரன் சிவ நித்திஷ்(3) இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு நான்கு வழிச்சாலை வழியாக சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

    மொட்டமலை பகுதி அருகே வந்த போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் தாங்கள் பலியாகி விடுவோம் என்பதை உணர்ந்த மகேஸ்வரி தனது கையில் இருந்த சிவநித்திசை சாலையின் ஓரமாக தூக்கி வீசினார்.

    பின்னர் லாரி மோதியதில் பெரியசாமி லேசான காயமடைந்தார். விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக டிரைவர் ஓட்டி சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி, அதுவரை மகேஸ்வரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களில் சிலர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கப்பலூர் சுங்கச்சாவடி இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

    மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டு மேடை 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டுள்ளது.

    இதனிடையே, மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநில மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை என்றும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க. மாநாடு முன்னேற்பாடு பணிகள்:-

    * மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.

    * மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    * 400 தற்காலிக கழிப்பறை வசதிகள்.

    * மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து உள்ளேயும், வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள்.

    * மாநாட்டு திடலில் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 450 ஒலிபெருக்கிள், 20 ஆயிரம் மின்விளக்குகள்.

    * மருத்துவகுழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிக்காக சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

    • பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.
    • ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

    மதுரை:

    திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சியின் பிரதான சாலைகளில் எப்.எல். 2 உரிமம் பெற்ற மதுக்கடைகள் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் எப்.எல். 2 பார்கள் தொடர்பாக ஆய்வு செய்வது அவசியம். எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.

    அதோடு அங்கு சட்ட விரோதமான நடவடிக்கை களும் நடைபெறுவதால் ஏராளமான புகார்கள் வருகின்றன. இருப்பினும் காவல்துறையினர் மனமகிழ் மன்றங்களிடம் மாதந் தோறும் மாமுல் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆகவே எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில், ஐ.எம்.எப்.எல் மது வகைகளை உறுப்பினர் அல்லாதவருக்கு விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

    மனுதாரர் தரப்பில், மது விற்பனையின் போது ரசீது வழங்குவதில்லை. சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என குறிப்பிட்டார்

    அதையடுத்து நீதிபதிகள், "சட்டவிரோதமாக மது விற்பனை யாருக்கு செய்யப்பட்டாலும் அது குற்றம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தில் எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில் சட்டவிரோத மது விற்பனை செய்வது தொடர்பான புகார் குறித்து திருச்சி மாவட்ட மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை.
    • பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சாலைகளில் வேகத்தை முறைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பேரிகார்டுகள் வைக்கப்படும். ஆனால் காவல்துறையினர் எவ்விதமான திட்டமிடலுமின்றி சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டுகளை வைப்பதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை. பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே. அதோடு அந்த பேரிகார்டுகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆகவே தனியார் விளம்பரங்களுடன் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், பேரிகார்டுகளை சரியான அளவில் வாங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு, வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவர், மாநில நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • 2-வது நாளான இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

    இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் இன்று மாலை 5.30 மணிக்கு அவர்களை ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்ததாக தெரிகிறது.

    2-வது நாளான இன்று காலை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அஜித்குமார் கொலை வழக்கில் நெருக்கடி கொடுத்த மேலதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் போலீஸ்காரர்களிடம் பெற்றதாக தெரிகிறது.

    இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்வபாண்டி, கைதாகியுள்ள 5 போலீஸ்காரர்களுக்கு இன்று, நாளையும் என 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 போலீஸ்காரர்களை ஆஜர்படுத்த வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரையும் விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

    • பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை பகுதியைச் சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது40). இவர் மதுரையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று விஜய ராஜா 1.5 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு புறப்பட்டார். இதற்காக மதுரையில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து நகை பையுடன் கோவிலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விஜய ராஜாவை மர்மநபர்கள் காரில் பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது காரை அவர் முன் நிறுத்தி இறங்கிய மர்மநபர்கள் விஜயராஜா கையில் வைத்திருந்த 1.5 நகை கொண்ட பையை பறித்துக் கொண்டனர். விஜயராஜா முயன்றும் நகையை தக்க வைத்துக்கொள்ளவில்லை.

    மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு பணப்பையுடன் அங்கிருந்து தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீஸ் ஏ.எஸ்.பி.யாக புதிதாக பொறுப்பேற்றிருந்த ஆஷிஷ் புனியா, தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம், சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    நகை வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். விஜயராஜா நகையுடன் காரைக்குடிக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை.
    • தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நெல்லையில் கடந்த ஜூலை 27-ந்தேதி கவின் எனும் இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கவினை படுகொலை செய்த சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையும் ஜூலை 30-ந்தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    ஆனால் சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதோடு கொலை செய்யப்பட்ட கவினை ஏற்கனவே காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளரும் சுர்ஜித்தின் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    ஆகவே நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ஜூலை 25-ந்தேதி 2.30 மணிக்கு கவின் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு புகார் அளிக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 செல்போன்கள், 7 சி.சி.டி.வி. காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    எஸ்.சி. எஸ்.டி பிரிவின் கீழ் முன்பு ரூ.8.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 6 லட்ச ரூபாய் கவினின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக சென்று கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பில், 2 மாத கால அவகாசம் கோரப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினைய் காஸ், சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் ஏற்கனவே சாதி ரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்ததால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது புகார் வைக்கப்பட்ட அன்றே அவருக்கு ஆதரவாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட இடத்தில் மாவட்ட கலெக்டரும், ஆணையரும் ஆய்வு செய்யவில்லை. ஆகவே மாவட்ட நீதிபதி விசாரணையை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், இதில் அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை என்பதால், மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது. ஆகவே சி.பி.சி. ஐ.டி., விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், பூத் கமிட்டி மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

    தமிழகத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநில மாநாடுகளை நடத்துவது வழக்கமான ஒன்று. தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்கும், மெகா கூட்டணி அமைக்கும் வகையிலும் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி நடைபெறும் இதுபோன்ற மாநாடுகள் தேர்தல்களில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற (ஆகஸ்டு) 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்தபோதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார்.



    இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது, அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.

    இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதில் தற்போது மாநாடு மேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதேபோல் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் விஜய், நடந்து வந்து தொண்டர்களை சந்திக்கும் வகையிலும் மேடை உருவாகுகிறது.

    இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அடுத்த வாரம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. மாநாட்டிற்கான தேதியை மாற்ற பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணமாக கொண்டு தெரிவித்துள்ளபோதிலும், திட்டமிட்டபடி 25-ந்தேதி மாநாட்டை நடத்துவதில் த.வெ.க.வினர் உறுதியாக உள்ளனர்.

    சமீப காலமாக தென் மாவட்டங்களை குறிவைத்து மதுரையில் அரசியல் மற்றும் ஆன்மிக மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே தென் மாவட்டங்களில் விஜய் தலைமையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக ரோடு-ஷோ நடத்த இருக்கிறார்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த காமராஜ் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக 'ரோடு-ஷோ' நடத்த இருக்கிறார். ஆகவே அதை முன்னிட்டு படலையார் குளம் கிராமம் முதல் கடம்போடுவாழ்வு வரை 100 வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி கோரி நெல்லை களக்காடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    ஆகவே ஆகஸ்டு 4-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், களக்காடு, சாலைபுதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
    • கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. அது போன்ற கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

    இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். எனவே கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும். எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்று ஒரு நிருபர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.

    ×