என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவாரி"

    • சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்காந்தி மதிநாதன் ஐகோர்ட் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் மல்லான் கோட்டை கிராமத்தில் "தி மெகா புளூ மெட்டல் ஸ்டோன் கிரஷர்" என்னும் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வந்தது.

    அந்த குவாரியில் ஏராளமானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர். பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து எம்சாண்ட் தயாரித்து இரவு நேரத்திலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடந்த மே மாதம் 20-ந்தேதி காலை கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ். கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. மாவட்ட கலெக்டர், இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மாவட்ட கலெக்டர் சட்ட விரோத குவாரியைத் தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆகவே 6 நபர்களின் இறப்பிற்கு காரணமான கல் குவாரி விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. மேலும் கல்குவாரிக்கு குத்தகை காலம் முடிந்து விட்டது. ஆனால் முடிந்து விட்ட குத்தகையை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயமாக உள்ளது.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைக்கவும், மல்லான்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், எஸ்.எஸ். கோட்டை போலீஸ் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணாய் காஸ், காலாவதியான குவாரியில் ஆறு பேர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முறையாக கமிட்டி அமைத்து கண்காணிக்காததே விபத்துக்கு காரணம். எனவே குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

    மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இதுபற்றி திருவட்டார் தாசில்தார் தினேஷ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது குவாரி எந்தவித அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

    மேலும் அந்த குவாரியை வேர்கிளம்பி காப்புவிளை பகுதியை சேர்ந்த சுபிஷ் (வயது 40) மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேர் சேர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்தது.

    உரிய அனுமதி இல்லாமல் குவாரி நடத்தப்பட்டதால் அதனை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு கல் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு ஊராட்சி ராஜேந்திரன் வாய்க்காலையொட்டி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் மணலை அள்ளி தனியார் செங்கல் சூளைக்குக்கும் தனியாருக்கும் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணலை அள்ளுவதால் சுற்றியுள்ள மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, குரங்குபுத்தூர், கருவி, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடிநீர் உப்பு நீராவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் இமயம் சங்கர், கிளைச் செயலாளர் வீரகுமார், பொறுப்பாளர் விஜயபாலன், திமுக கிளை செயலாளர் பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மீண்டும் மணல் எடுத்ததால் ஆக்கூர் முக்கூட்டு வழயாக வந்த லாரிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. மணல் குவாரிகளை வலியுறுத்தப்பட்டது.

    • கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள தூம்பக்குளம் பகுதியில் புதிதாக கல்-மண் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்தை சுற்றிழும் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தூம்பக்குளத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கல்-மண் குவாரி அமைத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைவார்கள். வெடி வைத்து கற்களை உடைக்கும்போது அங்கு வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் குவாரிகள் அமைக்க கூடாது என பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ×