என் மலர்
கன்னியாகுமரி
- P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் நடத்தும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டி ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி இன்று P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி வாள் விளையாட்டு கழக செயலாளர் அமிர்தராஜ், சுந்தர்ராஜ், இணைச்செயலாளர் ஜோபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாள் விளையாட்டு கழக இணைச்செயலாளர் செல்வி இலக்கியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக தலைவர் சிந்துகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

"கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம்,
நாகர்கோவில்:
கன்னியாகுமரிதுணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (25-ந் தேதி) நடக்கிறது.
எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், கோழிக்கோட்டுப் போத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளர்.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்ததால் 'குளுகுளு' சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை வரை மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீர் திடீரென மழை பெய்தது.
கன்னியாகுமரி பகுதியிலும் மழை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொட்டாரம், மயிலாடி, இரணியல், குழித்துறை, தக்கலை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு திரளாக வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது. அணைக்கு 874 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 477 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.04 அடியாக உள்ளது. அணைக்கு 745 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 20.50 அடியாக உள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் கரை திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 41, பெருஞ்சாணி 47.6, சிற்றார்1-55.4, சிற்றார் 2-46.6, கொட்டாரம் 26.6, மயிலாடி 2.6, நாகர்கோவில் 13, ஆரல்வாய்மொழி 4, முக்கடல் 5.8, பாலமோர் 12.2, தக்கலை 11, குளச்சல் 14, இரணியல் 8, அடையாமடை 12.4, குருந்தன் கோடு 11, கோழிப்போர்விளை 8, மாம்பழத்துறையாறு 26.6, ஆணைக்கிடங்கு 25, களியல் 40, குழித்துறை 10.8, புத்தன் அணை 42.8, சுருளோடு 34.2, திற்பரப்பு 48.6, முள்ளங்கினாவிளை 6.4.
- எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
- அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு, "சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அ.தி.மு.க." என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த போர்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வின் 54-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.வினரை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அப்போது சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட சம்பவத்தால் நாகர்கோவில் வடசேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று இரவு விட்டுவிட்டு சாரல் மழை பெய்து. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி,குழித்துறை, கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. மோதிரமலை, தச்சமலை பகுதிகளிலும் மழை பெய்தது.
பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி தேங்கியது.
மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பாலமோரில் அதிகபட்சமாக 55.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.64 அடியாக இருந்தது. அணைக்கு 1,164 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.78 அடியாக உள்ளது. அணைக்கு 1,224கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடி எட்டியது.
தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைக்கு வீடு ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடியே இருப்பதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.
- இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம்.
- பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி எம்பி அவர்கள் வெளிகொண்டு வந்த பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்க போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம். மத்திய அரசை கண்டித்து இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" மத்திய அரசு அவர்களது ஆட்சியை கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகள் மூலம் ஓட்டு திருத்தத்தை கொண்டு வந்து பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். யார் வெற்றி பெற வேண்டும் யார் தலைவராக வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் முடிவை இந்த அரசு மாற்றுகிறது. இன்று இதனை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டும் தான், இது குறித்து யாரும் பேசுவதில்லை, ராகுல் காந்தி அவர்கள் தான் பீகாரில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து குரல் கொடுத்தார்.
பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதில் அப்பா, அம்மா பெயர்கள் போலியான பெயர்கள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அறையில் 50, 60 பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது, நாம் தமிழகத்தில் வலிமையாக இருப்பதால் அவர்களது வேலையினை இங்கே செய்ய முடியவில்லை, நாம் ஒவ்வொரு வாக்குகளையும் வாக்காளர் பட்டியல்களையும் சரி பார்க்க வேண்டும்.
நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள் நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், நாம் எல்லா இடங்களிலும், எல்லா நகரங்களிலும் எல்லா கிராமங்களிலும் விழிப்புணர்வுடன் இருந்து இந்த வாக்கு திருட்டை பொது மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும், எங்கோ வெளியூரில் தான் வாக்கு திருட்டு நடந்துள்ளது.
நமது ஊரில் நடக்கவில்லை என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நமது பூத்துகளை வலிமைப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்க வேண்டும், வருகிற தேர்தல் முக்கியமான தேர்தல் நாம் வெற்றிபெற விழிப்புடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கையெழுத்து இயக்க போராட்டத்தில் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.
போராட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் செலவில் கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டது.

கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர்.
- பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும்.
நாகர்கோவில்:
தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர். செல்போன் வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் தபால் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது.
அதேநேரம் மக்கள் முக்கியமாக தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தது பதிவு தபால் முறைக்காக தான். முக்கிய தபால்களை இந்த முறையில் தான் அனுப்பி வந்தனர். இந்த வகை தபால்கள் பாதுகாப்பானது என்பதோடு அதற்கான ஒப்புதல் பதிவு கார்டு (அக்னாலட்ஜ்மென்ட் கார்டு) வைத்து அனுப்பும் போது தபாலை பெற்றுக் கொண்டவரின் கையொப்பத்துடன் பதிவு கார்டு தபால் அனுப்பியவருக்கு திரும்ப வரும்.
எனவே பதிவு தபால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்புக்கும், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் அனுப்புவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. திருமண மற்றும் சுப நிகழ்ச்சிக்கான அழைப்புகளையும் பதிவு தபாலில் பலர் அனுப்பி வந்தனர். இந்த முறைக்கான கட்டணமும் குறைவு என்பதால் பலரும் இந்த பதிவு தபால் முறையில் தங்களது முக்கிய ஆவணங்கள், புகார்கள் போன்றவற்றை அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தபால் துறை விரைவு தபால் முறையை அமல்படுத்தியது. இது பதிவு தபால் முறையை போன்றது என்றாலும், இந்த முறையில் தபால் அனுப்பினால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் பொருளின் எடைக்கு தகுந்தவாறும், அனுப்பப்படும் ஊருக்கு தகுந்தவாறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
உள்ளூருக்குள் விரைவு தபாலை அனுப்ப வேண்டும் என்றாலும் கட்டணங்கள் அதிகம் என்பதால், விரைவு தபால் முறையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அவர்கள் பதிவு தபால் முறையை தான் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் பதிவு தபால் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்தே இதனை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கையில் எடுத்தது.
ஆனால் அதற்கான முறையான உத்தரவை வழங்காமல் பரீட்சார்த்த முறையில் தகவல்களை மட்டும் வழங்கியது. இந்த சூழலில் தற்போது பதிவு தபால் முறையை நிறுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பதிவு தபால் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர். பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும். ஆனால் தற்போது விரைவு தபால் முறையில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.41 ஆக உள்ளது. இது தபாலின் எடை மற்றும் அனுப்பும் தூரம் ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல் அதிகரிக்கிறது. சாதாரண தபாலுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
விரைவு தபால்கள் அனுப்புவதற்கு கட்டணம் அதிகம் என்பதால் இந்த முறையை மாற்றி, பதிவு தபால் முறையை மீண்டும் மத்திய அரசு கொண்டுவர வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் விரைவு தபால் முடிவு, தபால் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலாக அமையும் என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என பல தரப்பினருக்கும் பயனுள்ள பதிவு தபால் முறையை முடக்கியது தவறு. அதனை மீண்டும் கொண்டு வந்து மக்கள் நலனை காக்க வேண்டும் என மத்திய அரசை சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
- ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியானது 15 வார்டுகளை கொண்டது. இதில் ஆறாவது வார்டு பத்மநாபன்புதூர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து நிதியிலிருந்து பொது கலையரங்கம் கட்டப்பட்டது,
இந்நிலையில் தற்போது நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறையினர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அதை இடிப்பதற்காக முடிவு எடுத்துள்ளனர், மேலும் இந்த தொடர்பாக நீதிமன்றமும் இடிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அந்த உத்தரவை அமல்படுத்த இன்று அதிகாரிகள் பத்மநாபன்புதூர் பகுதிக்கு ஜெசிபி எந்திரத்துடன் வந்து இடிக்க முற்பட்டனர்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் திரண்டு இடிக்க விட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் அப்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் தருவதாக தெரிவித்தனர்.
ஆனால் அதனை ஏற்கமறுத்து ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது நீதிமன்றமே உத்தரவிட்டாலும் மக்களின் விருப்பமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என வாதிட்டனர். ஊர் மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி அவர்களை தொடர்பு கொண்டு நிலைமை எடுத்து கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார், பின்னர் விஜய்வசந்த் எம்பி, நீர்வள துறை செயல் பொறியாளர் (பொறுப்பு) பிரைட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் வசந்த் எம்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள துறை அதிகாரிகள், நீர் பாசனதுறை தலைவர் ஆகியோருடன் பேசி ஆய்வு செய்து மக்களுக்கு பயன் உள்ள நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதே சமயத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. அந்த வகையில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றே கூறலாம். இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. மேலும் கனமழை பெய்யாததால் கரையோர பயிர்களான வாழை, அன்னாசி, தென்னை போன்றவை ஒரு சில இடங்களில் வாடிய நிலையில் காணப்பட்டன.
இந்தநிலையில் தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்த மழை நேற்று அதிகாலை முதல் பலத்த மழையாக பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. மதியம் முதல் கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையில் விடிய விடிய நீடித்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவில் நகரில் அதிகாலை முதலிலேயே பரவலாக மழை பெய்து வருகிறது.
பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது.
மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
சிற்றாறு-1 அணை பகுதியில் அதிகபட்சமாக 31.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலை யோர பகுதியிலும், அணைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 30.4, பெருஞ்சாணி 21, சிற்றார் 1-31.4, சிற்றார் 2-8.2, மயிலாடி 4.2, நாகர்கோவில் 11.6, கன்னிமார் 2.4, ஆரல்வாய்மொழி 3.4, பூதப்பாண்டி 3.6, புத்தன்அணை 8.6, பாலமோர் 22.4, தக்கலை 8.2, குளச்சல் 14, இரணியல் 13.2, அடையாமடை 14.2, குருந்தன்கோடு 4.2, கோழிபோர்விளை 12.2, மாம்பழத்துறையாறு 11, ஆணைக்கிடங்கு 10.6, களியல் 6, குழித்துறை 8.8, சுருளோடு 21.4, திற்பரப்பு 12.2, முள்ளங்கினாவிளை 17.2.
- நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை 56% பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் TTK கன்ஸ்ட்ரக்ஷன் ஆன்ஸ்ட்ராஜ், நகாய் ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவன செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்க படுவதாக மனுக்கள் வந்துள்ளன, விவசாயத்துக்கு எந்த வித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அவருடன் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிறிஸ்டிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.






