என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
    • பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது26). நேற்று மாலை இவரை சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது பஸ்மோதிய விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்ததாக கூறி அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்து போன சீனிவாசன் குறித்து போலீசார் முறையாக எந்த தகவலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் இன்று காலை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டி திடீர் மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சீனிவாசனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார்.
    • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவண செல்வன்(வயது43).இவர் மாநகர பஸ்சில் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி திடீரென சரவண செல்வன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவண செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • டி.டி.எப்.வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.
    • நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    காஞ்சிபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    • பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
    • சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் செங்கழுநீரோடை பகுதியில் தான் பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரையும் கூட்டாளி ஒருவனையும் மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.
    • விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளவூர் நாகராஜ் (வயது57). இவர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார்.

    நேற்று இரவு அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.

    போகும் வழியில் சித்தாலப்பாக்கத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரது வீட்டில் விட்டு விட்டு காமாஜபுரம் வழியாக தாம்பரம் நோக்கி சென்றார்.

    அப்போது காரை நிறுத்தி விட்டு ரோட்டோர கடையில் சாப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு தனியார் நிறுவன காரில் வந்தவர்களும் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    அந்த காரில் வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும் உதவியாளர் காரை கிளப்பி இருக்கிறார். ஹேன்ட்பிரேக்கில் நின்று கொண்டிருந்த அந்த காரை உதவியாளர் எடுக்க தெரியாமல் எடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த அளவூர் நாகராஜ் மீது மோதியது. இதில் காருக்குள் சிக்கிய அளவூர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்தி விட்டு சாலை அருகில் நின்று கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி. நாகராஜ் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன்.

    அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக்கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.

    காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார். அளவூர் நாகராஜ் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

    இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சஞ்சய் (வயது21). பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரும் புதுப்பேர் அருகே உள்ள சக்திநகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்புஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி சஞ்சய் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரிக்க தொடங்கினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவர் சஞ்சயின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காதல் திருமணம் செய்த காதலியை பிரித்ததால் மனவேதனையில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சோமங்கலம் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சஞ்சய் மற்றும் இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்து பிரித்து காதலியை அவரது பெற்றோருடனும் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தையும் மீறி, நீர்நிலைகளை மட்டுமே அளக்கிறோம் என்று கூறி அதிகாரிகள் ஒட்டுமொத்த விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்து உள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களிடம் முறையான அறிவிப்பு ஏதும் செய்யாமல் விமான நிலைய திட்ட வரைபடத்தை வரைந்தது யார் என்ற கேள்விக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் பதில் அளிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு வருகிற 26-ந்தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழுவினருடன் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை ஒப்படைக்க கூடிய டிட்கோவின் இயக்குனரும் வருவதால், இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கருப்பு கொடியுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.இந்த போராட்டத்துக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    • பொது இடங்களில் உள்ள குப்பைகள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    • நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொற்று நோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். பொது சுகாதாரத் துறைக்கு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சை, களப்பணியில் தோழமை துறைகளை ஒருங்கிணைத்து நோய்த் தடுப்பு பணிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்காமலும், தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். ஊரக வளர்ச்சி துறையினர் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    டெங்கு நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நோய்த் தடுப்பு தற்காலிக பணியாளர்களை நியமித்து நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

    பொது இடங்களில் உள்ள குப்பைகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கு தினசரி வருகை தரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்து அவர்கள் விவரம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறும், அதற்கான பொறுப்பு ஆசிரியரை நியமிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ×