என் மலர்
காஞ்சிபுரம்
- ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
- மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.
அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.
இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
- விமானம் புறப்படுவதற்கு முன் விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபார்த்தபோது கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
- எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் விமானம் இரவு புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய் செல்லும் பயணிகள் விமானம் நேற்று இரவு 7 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது. அதில் 172 பயணிகள் செல்ல தயாராக இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன் விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபார்த்தபோது கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் விமானம் இரவு புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. புறப்படும் நேரம் இரவு 8 மணி, 9 மணி என மாறிமாறி அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு விமானத்தின் எந்திரங்கள் சரி செய்யப்பட்டு 3½ மணி நேரம் தாமதமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
- நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
- நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர்.
ஆலந்தூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(46). இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
இதை அடுத்து போலீசார், நூர் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது விசாரணைக்கு செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் நூர் முகமது விமானத்தில் பயணம் செய்து வந்திருப்பதும், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர். இதுபற்றி திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 22 அடியை எட்டியது. ஏரியில் 3132மி.கன அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது. இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு 393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும் அவ்வப்போது பலத்த மழை பெய்வதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதலில் இன்று காலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் பலத்த மழை பெய்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பருவமழை தொடங்கு வதற்கு முன்பே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதும் எந்த பயனும் இன்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பைதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் குளம், உலக அளந்தார் கோவில் குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
பின்னர் அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சள் நீர்கால் வாயை பார்வையிட்டு அதன் பகுதிகளில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாயிகளில் போட வேண்டாம் என்று பொதுமக்களை கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் திருப்பருத்தி குன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் நீல்முடியான், உதவி பொறியாளர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்.
- ஏரியில் நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
- நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இன்று ஏரியில் நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை (08.10.2023) 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
- நிர்வாக காரணங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி கடந்த 1-ந்தேதி அச்சரப்பாக்கதில் கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார்.
- எனக்கும், என்னுடைய கணவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் ஹரிஷ் (வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவரும் வேலை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு அவரது உறவினர் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி கடந்த 1-ந்தேதி அச்சரப்பாக்கதில் கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டு, மானாம்பதி கண்டிகையில் உள்ள கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இதனை அறிந்த ஆர்த்தி குடும்பத்தினர் ஹரிஷ் வீட்டுக்கு உருட்டு கட்டைகளுடன் வந்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி பாதுகாப்புக் கோரி புகார் மனு அளித்தனர்.
ஆர்த்தி அளித்துள்ள அந்த புகார் மனுவில், எனது குடும்பத்தார் பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி என்னையும், என்னுடைய கணவரின் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எனக்கும், என்னுடைய கணவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உரிய பாதுகாப்பு வழங்குவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதியளிக்கப்பட்டது.
- சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
- நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்கங்களுக்கு பயன்படாத உபகரணங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், திட்டம் கைவிடும் வரை அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என 60 சங்கங்களும், 145 பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
- சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நண்பர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
- பொதுமக்கள் மாணவர் மோகனசுந்தரத்தை இறந்த நிலையில் மீட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் மோகனசுந்தரம் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மோகனசுந்தரம் தனது நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.
நண்பர்கள் 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 2 பேரும் கரையோரமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் மோகனசுந்தரம் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர் மோகனசுந்ரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் மாணவர் மோகனசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
- பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை ஒன்றி ணைத்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனா புரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அவர்களது போராட்டம் 433-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களை புறக்கணித்தனர்.
பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த 13 கிராமங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு செய்ய வருவதை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






