search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரந்தூர் புதிய விமான நிலைய பகுதியில் ஆய்வு: ஐ.ஐ.டி. ஆய்வுக்குழு வருகைக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    பரந்தூர் புதிய விமான நிலைய பகுதியில் ஆய்வு: ஐ.ஐ.டி. ஆய்வுக்குழு வருகைக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு

    • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய், சிங்கிள்பாடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 432-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை நடந்த 6 கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களை கடந்த வாரம் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. ஆய்வுகுழு நேரில் பார்வையிட இருந்தது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று பரந்தூர் பகுதியில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. ஆய்வுகுழு ஆய்வு செய்ய மீண்டும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள், ஆய்வுக்குழு வரும்போது போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.

    Next Story
    ×