என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. நட்சத்திர ஓட்டல் போன்று மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் செய்தனர். இதன் விளைவாக நடராஜர் கோவில் தீட்சிதரான பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனாலும் தீட்சிதர்கள் மீது பல்வேறு தரப்பினர் புகார் மனுக்களை சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே செல்லப்பேட்டையில் வசித்து வரும் பிச்சாவரம் சோழ சமஸ்தானமான சூரப்பபுலிக்குத்தி சோழமன்னர் வம்சத்தை சேர்ந்த மன்னர் மன்னன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையர்களான சோழர்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டது. கோவிலை பராமரிக்க மன்னர்களால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிலங்கள் வி.எஸ்.டி. அறக்கட்டளை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம்தான் தீட்சிதர்களுக்கு உணவு, பராமரிப்பு தொகையான வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் பிச்சாவரம் தீவுக்கோட்டை அரண்மனையில்தான் நடராஜர் கோவில் சாவி இருந்தது. காலையில் கோவிலை திறப்பதற்கு குதிரைபல்லக்கில் வந்து சாவியை பெற்றுசென்று பின்னர் இரவில் மீண்டும் அரண்மணைக்கு வந்து சாவி ஒப்படைக்கப்பட்டது.
எனவே மீண்டும் அதே நடைமுறையை கடைப்பிடித்து பிச்சாவரம் அரண்மனைக்கு சாவியை கொண்டுவரவேண்டும். கோவில் ஆகம விதிமீறலுக்கு காரணமான பொதுதீட்சிதர்கள் மற்றும் காரிய கமிட்டியில் உள்ள 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிலை அரசுடமையாக்கி பிச்சாவரம் சோழ சமஸ்தானத்தை சேர்ந்தவரை நிரந்தர அறங்காவலராகவும், பிச்சாவரத்துக்குட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறையினரை அறங்காவலர்களாகவும் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11-ந் தேதி சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. இதையொட்டி நட்சத்திர ஓட்டல்கள் போன்று ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில் புனிதம் கெட்டு விட்டதாக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருமண ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஆனாலும் கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதோடு சிதம்பரம் கோவிலில் நடந்த திருமணத்தை கண்டித்தும், கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 11.30மணி அளவில் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடம்பர திருமண நடத்த காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சிதம்பரம் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகள் அகற்றப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 45-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து பலர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது 9 பேர் டெங்குகாய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் வந்து திடீரென்று ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் அரசு ஆஸ்ப்த்திரியில் உள்ள காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பிரிவுகளை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி உள்ளதா? மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா, அதிக அளவில் நோயாளிகள் வந்தால் இடவசதி உள்ளதா, காய்ச்சலில் வரக்கூடிய பொதுமக்களின் ரத்தப் பரிசோதனை உடனடியாக கண்காணிக்கப்படுகிறதா, நோயாளிகளுக்கு சிகிச்சை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் டாக்டர்களிடம் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55) கூலி தொழிலாளி.
அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் நேற்று மாலையில் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றாள்.
அப்போது இதை அறிந்த கூலி தொழிலாளி சேகரும் கரும்பு தோட்டத்திற்கு பின்தொடர்ந்து சென்றார். பின்பு அவர் அங்குநின்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பின்பு அந்த சிறுமி வீட்டுக்கு அழுதுகொண்டே சென்றாள். வீட்டுக்கு சென்றதும் நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினாள்.
இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி சேகரை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கொத்தட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது.
பின்னர் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டின் மீது மோதி நின்றது. அப்போது போனில் பேசிக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் லாரியின் அடியில் சிக்கினார். அவர் உயிர் பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய கோபாலகிருஷ்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்டு பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்கோவில் உள்ளது. இங்கு ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு அதிபரின் இல்ல திருமண விழா கடந்த 11-ந் தேதி நடந்தது. இது பக்தர்களுக்கு இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு பல்வேறு இந்து அமைப்பினரும் இந்த திருமண விழாவை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக திருமணத்தை நடத்திய பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிவருகிறது.
இந்த நிலையில் வல்லம் படுகை நடராஜர் தீர்த்தவாரி கட்டளை தாரரும், சிதம்பரம் நகராட்சி முன்னாள் தலைவருமான சவுந்திர பாண்டியன் சப்-கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆடம்பர திருமணத்தால் புனித தன்மை கெட்டுவிட்டது. எனவே திருமணத்திற்கு அனுமதி அளித்த தீட்சிதர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்யவேண்டும். கோவில் வருமானத்திற்கு உரிய கணக்கு வழக்கு எதுவும் இல்லை. எனவே அதனை தணிக்கை செய்து சிதம்பரம் கோவிலை கையகபடுத்த அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும்.
கோவிலை வைத்து ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 10 நாட்களில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல இந்து மக்கள் கட்சியினரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவை சந்தித்து தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரியநாச்சிகிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. இதையொட்டி அந்த கோவில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு தரப்பினர் தாங்கள்தான் புதிதாக கோவில் கட்டுவோம் என்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் திட்டக்குடி தாசில்தார், விருத்தாசலம் உதவி கலெக்டர் ஆகியோர் தனித்தனியாக சமாதான கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்திலும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விருத்தாசலம் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை அழைத்து அவர் மூலம் அந்த கோவிலில் சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரையும் அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் எச்.ராஜாவை வரவிடாமல் கருப்பு கொடி காட்டி தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் அரியநாச்சி கிராமத்துக்குள் செல்லாமல் திரும்பினார்.
இதையடுத்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ உத்தரவின் பேரில் பிரச்சனைக்குரிய சாமி சிலையை அரசு கட்டுப்பாட்டில் உரிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரியநாச்சி கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.
அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றனர்.
இதையறிந்தும் தாங்கள்தான் கோவில் கட்டுவோம் என்று கூறிய ஒரு தரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சாமி சிலையை பொது இடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் அங்கு திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாமி சிலை குறிப்பிட்ட பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையறிந்ததும் ஒரு பிரிவினர் மீண்டும் அங்கு திரண்டு வந்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை அகற்றி வேறொரு இடத்தில் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த சாமி சிலையை மீட்டு குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






