என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் பக்தர்களால் முருகப்பெருமானின் 7-ம் படைவீடு என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் உலகளவில் முருக பக்தர்களை ஈர்க்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    முருகன் சிலை அமைய உள்ள இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அது தவிர 2.48 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அந்த இடங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக மற்ற துறைகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருகிற 22-ந்தேதி(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடக்கிறது.

    இந்த ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர். 

    • கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
    • சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

    கோவை:

    இணைய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாக் அவுட் டிஜிட்டல் மோசடி எனும் விழிப்புணர்வு இயக்கத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.

    அதன்படி கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நகரை பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. இதில் இருந்து தப்பிக்க எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருக்க வேண்டும். சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

    கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் மோசடியால் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியாளர்களிடம் இருந்து ரூ.14 கோடியை மீட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

    இதில் சைபர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பிரவீன்குமார், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தன், அஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    பொருட்கள் ஏற்றி செல்வது, எங்காவது ஊருக்கு செல்வது என எல்லா பணிகளுக்கும் மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இதுமட்டுமின்றி அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

    ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து வருகிறது. இருப்பினும் இப்போது ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    அத்துடன் காளை மாடுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இளைஞர்கள் தங்கள் திருமணத்தின் போது பழமையை மறக்காமல் மாட்டு வண்டியில் பயணம் செய்வதை இப்போதும் விரும்புகிறார்கள்.

    இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டு வண்டியில் அமர வைத்து தனது வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார்.

    பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே அமர வைத்து கூட்டி சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

    • அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது.
    • அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.

    கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த இன்று அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர்," ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் நோயாளி சிகிச்சையில் இருப்பது போல், திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஒரே அணியாக இருக்கிறது" என்றார்.

    மேலும் பேசிய அவர் கூறியதாவது:-

    அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது; அதிமுகவின் ஒற்றுமையை 2026 சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம்.

    அதிமுக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது; யார் ஆள வேண்டுமென மக்களே முடிவு செய்கிறார்கள்.

    தொண்டர்களின் செல்வாக்கு திமுகவில் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு வீடாக சென்று கெஞ்சி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் அவல நிலை திமுகுவுக்குத்தான் இருக்கிறது. அதனால், திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.

    அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
    • கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.
    • அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் தான் ஆலோசனை கூட்டம் நடத்துகிறேன். ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் தான் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பசுமை வீடுகள் கட்டி தரப்படும். இதற்கு என்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல தரமான முறையில் கான்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அத்துடன் திருமண உதவி திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி வழங்கப்படும்.

    அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக துணி நெய்யப்பட்டு, அதிகளவில் தேக்கம் அடைந்த போது, கைத்தறி நெசவாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 350 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. இதுதவிர ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையும் கொண்டு வந்தோம். கொரோனா காலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 930 கைத்தறி நெசவாளர்களுக்கு பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்தோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி வேண்டும். இந்த ஆட்சியில் பணம் இல்லை. அதனால் தான் இதுவரை எந்த மாவட்டத்தையும் அவர்களால் அறிவிக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் போது 6 மாவட்டங்களை அறிவித்தேன். இப்போது ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.

    அ.தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளுக்கும் சரிசமமாக நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதனால் எல்லா துறைகளும் வளர்ச்சியடைந்தது. இந்த ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு கடன் வாங்கியுள்ளனர். இதனை எப்படி திருப்பி கட்டுவது. பெரிய ஒரு போராட்டமாக தான் இருக்கிறது.

    குறிப்பிட்ட அளவுக்கு கடன் வாங்கினால் தான் ஒரு அரசால் திருப்பி செலுத்த முடியும். அளவுக்கு மீறி கடன் வாங்கினால் அதனை திருப்பி செலுத்துதவற்கே புதிய வரிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை தான் இந்த தி.மு.க அரசு புதிது புதிதாக வரி போட்டு வைத்துள்ளது. இவ்வளவு வரி போட்டும், இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

    அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதிகள், மேம்பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாய்களை கூட கான்கிரீட் கால்வாய்களாக மாற்றியுள்ளோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 2, 3 தடவை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. எல்லாம் கூடி வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் அப்படியே நின்று போய்விட்டது.

    அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனை என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களை அந்த பிரச்சனையில் இருந்து விடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
    • ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.

    ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    • பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    கோவை:

    துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. துணை குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவர் தான் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

    இதற்காக இன்று கோவை பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோவில்களில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி நலனுக்காகவும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 25 கோவில்களில் இந்த பூஜை நடக்கிறது.

    பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவராக, தமிழராக அவரது பணி சிறக்க வேண்டும். மக்கள் சார்ந்த பணி பா.ஜ.க தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

    அதே நேரத்தில் தமிழ், தமிழர் என்று பேசுகின்ற தி.மு.க துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். முன்பு ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தேர்வு செய்யப்பட்டபோது மும்பையை சேர்ந்த மாநில கட்சிகளும், தற்போது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஒடிசா மாநில கட்சிகளும் ஒற்றுமையாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல், தி.மு.க. தனது செயலினால் சிறுமைப்படுத்துகிறது.

    தேசிய ஜனநாயககூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கிறார்கள். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரையும் ஓரணியில் சேர்க்க வேண்டும். அதனை நான் பா.ஜ.கவும் நினைக்கிறது. அதற்கு ஏற்ப செயல்பட்டு கொண்டும் இருக்கிறது.

    அ.தி.மு.க.வுக்குள் நிலவும் பிரச்சனை கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அந்தந்த கட்சி பிரச்சனைகளை அந்தந்த கட்சி தலைவர்களே சரி செய்து விடுவார்கள்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி எண்ணிக்கையையும் தாண்டி ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு தேர்தல் வெற்றி தரும். கூட்டணி குழப்பங்களும் சரி செய்யப்படும்.

    கே.ஏ.செங்கோட்டையன், ஹரித்துவார் புனிதமான இடம் என்பதால் அங்கு சென்று உள்ளார். அ.தி.முகவில் பிரச்சனை என்றால் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதாக கேட்பது தவறு. செங்கோட்டையன் அமித்ஷாவை பார்த்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சுதாகர், வேலுமயில், ராஜன், அர்ஜூனன், மணிகண்டன், கிருஷ்ண பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தொழில் அதிபரான இவர் நூற்பாலை மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு இவரது வீட்டிற்கு 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறும் பூட்டினர்.

    மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். அதனை தொடர்ந்து வீடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளுடன், வங்கி அதிகாரிகளும் வந்திருந்தனர். வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு தொழில் அதிபர் ராமச்சந்திரனின் வீட்டின் முன்பு 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொழில் அதிபர் ராமச்சந்திரன் தனியார் வங்கி ஒன்றில் தனது தொழிலுக்காக கோடி கணக்கில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை ஒரே நேரத்தில் மொத்தமாக அடைத்து விட்டதாகவும் தெரிகிறது.

    இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒரே நேரத்தில் கட்ட முடிந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தொழில் அதிபரின் வீட்டில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

    கோவையில் தொழில் அதிபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் அவரது உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    • நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம்.
    • அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை.

    மேட்டுப்பாளையம்:

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

    இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

    இந்தநிலையில் கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் வந்து ஏ.கே.செல்வராஜை சந்தித்து பேசினர். அவருக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர்களுடன் செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் நேற்று ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி. காளியப்பன் உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

    பின்னர் பண்ணாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம். அதனால் தான் இன்று ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்துள்ளனர் என்றார்.

    ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை. இயக்கம் தான் பெரிது. தனி நபர் அல்ல என இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒருங்கிணைந்து இயங்குவோம் என்றார்.

    செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் பலர் கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தில் குவிந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ணாரி எம்.எல்.ஏ. செங்கோட்டையனின் ஆதரவாளராக அறியப்பட்டவர். செங்கோட்டையன் கூட்டங்களில் அவரும் பங்கேற்று வந்தார். இந்தநிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
    • அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை.

    கோவை:

    பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:- பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம்.

    மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
    • அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.

    கோவை:

    டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,

    ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.

    அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் என்றார்.

    ×