என் மலர்
சென்னை
- 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திர பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிர பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், விஜிஎன் சாந்தி நகர், மதுரவாயல்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா ஷாப், விஓசி தெரு, நவின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் குடியிருப்பு, உடையார் தோட்டம், டிவிகே தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அயப்பாக்கம்: ஐசிஎஃப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, TNHB Phase I-III, TNHB 2394 குடியிருப்புகள், திருவேற்காடு மெயின் ரோடு, அம்பத்தூர், அத்திப்பேட்டை வழியாக வானகரம் சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், விஜிஎன் சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஏடன் அவென்யூ, கோன்ராஜ் குப்பம், அக்ரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- முதலமைச்சரால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட இவ்வளவு அதிகக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டதில்லை.
- அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகவின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்றாகும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் தான் போட்டி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதிமுக, பா.ம.க, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவானக் கூட்டணியை அமைத்த பிறகு, தோல்வி பயத்தில் தூக்கத்தைத் தொலைத்து விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதனால் ஏற்பட்ட மயக்கத்தில் வெளிப்படுத்திய உளறல்களாகத் தான் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கே திமுகவுக்கு தகுதி இல்லை. தமிழ்நாடு என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்ற அவப்பெயரைத் தேடித் தந்தது மட்டும் தான் திமுகவின் சாதனை. புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று வேட்டையாடியதை மறுக்க முடியுமா? அந்த மிருகத்துக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அந்த மிருகம் இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு அந்த மிருகம் திமுகவின் அபிமானி என்று சப்பைக்கட்டு கட்டியதை மறக்க முடியுமா? பல்கலைக்கழக வளாகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத கஞ்சா போதை அரசின் முதலமைச்சருக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?
* கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
* கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி, காதலிக்க மறுத்த காரணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
* கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை நாம் எவரும் மறந்து விட முடியாது.
* கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி கஞ்சா போதையில் திரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
* கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர இளம்பெண், அவரது தாயின் கண் எதிரிலேயே இரு காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது.
* 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் திம்மாவரம் என்ற ஊரில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பால் விற்பனை செய்துவிட்டு வந்த இளம் பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
முதலமைச்சரால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட இவ்வளவு அதிகக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டதில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் இவ்வளவுக்கு பிறகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான்.
2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது. அதேபோல், போக்சோ சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 52.30% அதிகம் ஆகும்.
திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் 217 பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு மாய உலகில் வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்த பிறகும், அதன்பின் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு பிறகும் அதிமுக கூட்டணிக்கு எதிராக புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்கள் பக்கம் திரண்டிருக்கிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மைக் காலமாக அதிகமாக புலம்பத் தொடங்கியுள்ளார்; தோல்வி பயத்தில் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.
அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகவின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்றாகும். 1970-களில் திமுக அரசின் மீது எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால் காவிரி நீர் உரிமைகளை அன்றைய முதலமைச்சர் கலைஞர் தாரை வார்த்ததையும், கச்சத்தீவு உரிமைகளை தாரை வார்க்கத் துணை போனதையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் சி.பி.ஐ. குழுவை அனுப்பி சோதனை நடத்திக் கொண்டே, தரைத் தளத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுகளை நடத்தியதும், 2ஜி வழக்கு மு.க.ஸ்டாலின் மீதும் பாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகளை வாரி வழங்கி அன்றைய திமுக தலைமை மண்டியிட்டது வரலாறு. இத்தகைய அடிமை வரலாறு கொண்ட மு.க.ஸ்டாலின் வீர வசனங்களை பேசக்கூடாது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியால் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்ட சீரழிவுகளுக்கு கணக்குத் தீர்க்க தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இன்னும் இரு மாதங்களில் அவர்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள். அதனால், வரும் தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக கூட்டணி மண்ணைக் கவ்வப் போவது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
- தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க. இடம் பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தார்கள்.
விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் டாக்டர் அன்புமணி இன்று நேர்காணல் நடத்தினார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்று காலையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.
பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
நாளை (28-ந்தேதி) காலையில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் மாலையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.
தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
- கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
- அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.
நந்தம்பாக்கம்:
சென்னை நந்தம்பாக்கத்தில் மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் பணிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.
* ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும்.
* பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்.
* பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது.
* பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
* பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என தி.மு.க. அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது.
* பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.
* புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல...
* கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
* அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.
* பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்.
* கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
* இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
* மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
* பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. முதன் முறையாக கடந்த மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக உயர்ந்து கடந்த 13-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்தை கடந்து ரூ.13,120 ஆக இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை ஏறு முகத்திலேயே பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 21-ந்தேதி கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் கிராம் ரூ.14,415-ம், சவரனுக்கு ரூ.1,15,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
22-ந்தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கும், சவரன் ரூ.1,13,600 ஆகவும் விற்பனையானது. 23-ந்தேதி கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,550, சவரன் ரூ.1,16,400 என்று விற்பனை செய்யப்பட்டது. 24-ந்தேதி கிராம் ரூ.200 அதிகரித்து ரூ.14,750 ஆகவும், சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனையானது. 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.
வரலாற்றில் முதன் முறையாக நேற்று தங்கம் விலை கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2,200-ம் அதிகரித்தது. அதன்படி, கிராம் ரூ.15,025-க்கும், சவரன் ரூ.1,20,200-க்கும் விற்பனையானது.
கடந்த 25 நாட்களில் (1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,585-ம், சவரனுக்கு ரூ.20,680-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.387-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400
22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-1-2026- ஒரு கிராம் ரூ.375
25-1-2026- ஒரு கிராம் ரூ.365
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
23-1-2026- ஒரு கிராம் ரூ.345
22-1-2026- ஒரு கிராம் ரூ.340
- குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
- அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.
சென்னை:
தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மாட்டார்.
சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
* குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
* பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.
* அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
* அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.
இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
- மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
- பொங்கல் பண்டிகையின் போது ‘டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
சென்னை:
'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் மது பிரியர்கள் உஷாராகி முந்தைய நாளே கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துவார்கள்.
அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது 'டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31 மற்றும் 01-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29 மற்றும் 30-ந்தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் கடந்த 24-ந்தேதி இரவு கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
- 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படாது என்று கூறப்படுகிறது.
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களைத் தவிர மொத்தம் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 பேர் மட்டும் ஏற்கனவே மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
இது பற்றி மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறும் போது, 'புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள மாவட்ட தலைவர்களின் பணிகள் 6 மாதம் கண்காணிக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்' என்றார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனமும் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகளை பொறுத்த வரை துணை தலைவர்கள், பொதுச் செயலாளர், செயலாளர்கள் உள்பட சுமார் 200 பேர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாரத்திற்குள் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிட ஒப்புதலுடன் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் அனைத்து பொறுப்புகளிலும் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்த தமிழக காங்கிரசார் திட்டமிட்டு உள்ளார்கள். புதிதாக 150 பேருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து அனுபவம் மிக்கவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்களுக்கு மாநில நிர்வாக பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் மாவட்ட தலைவர் பதவியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்கள் மட்டும் மாநில நிர்வாகிகளாகவும் நியமிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
- எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
- காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
சென்னை:
இந்திய குடியரசின் 77-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:-
பா.ஜ.க தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வினர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார். அகிம்சை முறையில் யாத்திரைகள், பேரணிகள் நடத்தி மகாத்மா காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களைக் கலங்கடிக்கச் செய்தது.
இதெல்லாம் தெரியாத பா.ஜ.க அரசும், பா.ஜ.க தலைவர்களும், மோடியும் வரலாறு தெரியாமல் வரலாற்றுப் பிழைகளைச் செய்து வருகிறார்கள்.
இந்தக் குடியரசு தினத்தில் நாம் சபதம் ஏற்போம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க நினைக்கும் பிரதமர் மோடி அரசை எதிர்த்து வருகிற 2-ந்தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி, மண்டலங்கள் வாரியாகப் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இதயத்துல்லா, பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, சுமதி அன்பரசு மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஜெ.டில்லிபாபு, திலகர், கவுன்சிலர் சுமதி புத்தநேசன், மாநிலச் செயலாளர் அகரம் கோபி, எம்.ஜி.ராம்சாமி, கராத்தே ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் அண்ணா நகர் தொகுதி 2-வது சர்க்கிள் சார்பில் எம்.ஆர்.ஏழுமலை தலைமையில், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி, தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பூக்கடை ஏ.தேவேந்திரன், எம்.தி.சேகர், என்.தாமஸ், பாலன், சண்முகம், காடகிருஷ்ணன், ராகுல் காந்தி, சுபாஷ், லெனின் குமார், சந்தன் பாபு, ஈஸ்வரன், சந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






